வியாழன், 20 அக்டோபர், 2016

தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்

த்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் பங்களாக்களிலும் பண்ணை வீடுகளிலும் நடந்த வருமான வரிச் சோதனை ஒரு பரபரப்புச் செய்தி என்பதைத் தாண்டி, எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இன்றி அமுங்கிப் போனது தற்செயலானது அல்ல. இத்துணைக்கும் அவர்கள் இருவரும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், தொழில்களில் போட்டுள்ள முதலீடுகள் பற்றிச் சில புலனாய்வு பத்திரிகைகளில் கசிந்துள்ள செய்திகள், இந்த விவகாரம் சாதாரணமான ஊழல், கமிசன் கொள்ளை அல்ல – என எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், இந்த வருமான வரிச் சோதனை தமிழக, தேசிய ஊடகங்களிலோ, அரசியல் வெளியிலோ காத்திரமான விவாதத்திற்கு உட்படுத்தப்படாமல், தாலுகா ஆபிஸ், டிராபிக் போலீசு லஞ்ச விவகாரம் போல ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டது.
ஜெயா-சசி கும்பலுக்கு அனைத்துமாக விளங்கிய ஐவரணியில் ஒருவராக இருந்தவரும், கடந்த ஆட்சியில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவருமான நத்தம் விசுவநாதன் மலை முழுங்கி மகாதேவன் என்பதைச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்தன. அவை அனைத்தும் உண்மை என்பதைக் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வருமான வரிச் சோதனை நிரூபித்திருக்கிறது.

கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்... சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)
கொள்ளைக்கூட்டத் தலைவியுடன்… சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி துரைசாமி. (கோப்புப்படம்)
கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது கரூரைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரது குடோனிலிருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி ரூபாயும் நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமானது என்பதோடு, நத்தம் விசுவநாதன் – அவரது மகன் அமர்நாத்; சைதை துரைசாமி – அவரது மகன் வெற்றி துரைசாமி; ஓ.பன்னீர் செல்வம் – அவரது மகன் ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளின் பினாமியாக அன்புநாதன் இருந்து வருவதும் இந்தச் சோதனையின் வழியாக அம்பலமாகியிருக்கிறது.
நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மந்திரிகளும், சைதை துரைசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளும் இலஞ்சம், கமிசன், அதிகாரமுறைகேடுகளின் வழியாகக் குவித்த பல்லாயிரம் கோடி ரூபாய்களை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கடத்திச் சென்று, அங்கு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கு அன்புநாதன்தான் ஏஜெண்டாகச் செயல்பட்டிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் அன்புநாதன் 90 நாடுகளுக்குச் சென்று திரும்பியிருப்பதை அவரது கடவுச்சீட்டு உறுதி செய்கிறது. இந்த 90 நாடுகளுள், தாய்லாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்(சீனா) ஆகிய நாடுகளில் அ.தி.மு.க.வின் அமைச்சர்களுக்காக அன்புநாதன் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதை தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் ஆகிய ஊடகங்கள் அம்பலப் படுத்தியுள்ளன.
* துபாயில் உள்ள டய்ரா சிட்டியில் 1,900 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வணிக வளாகம் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் வாரிசுகளுக்காக மனோஜ்குமார் கார்க் என்பவரின் பெயரில் அன்புநாதன் மூலம் வாங்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகம் விசாரித்து வரும் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கில் தற்பொழுது கைது செய்யப்பட்டு, கம்பி எண்ணிக் கொண்டிருப்பவன்தான் இந்த மனோஜ்குமார் கார்க்.
* இந்தோனேஷியாவிலிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்த ஊழல் வழக்கில் தமிழக மின்சார வாரியமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த ஊழலால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 1,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்திற்குச் செயற்கையாக அதிகரிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை ஏற்றுமதி செய்த அந்த திவ்ய தேசத்தில் நத்தம் விசுவநாதனுக்குப் பத்துக்கும் மேற்பட்ட நிலக்கரி வயல்கள் சொந்தமாக உள்ளதோடு, அதே எண்ணிக்கையில் நிலக்கரியை ஏற்றிவரும் சரக்குக் கப்பல்களும் சொந்தமாக இருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பா.ம.க. நிறுவனர் ராமதாசு.
தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்
தலைவிக்கே தண்ணி காட்டிய முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன்
* துபாயின் டய்ரா சிட்டிக்கு அருகிலேயே 10,000 கோடி ரூபாய் முதலீடு கொண்ட சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை, துபாயைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் நத்தம் விசுவநாதன் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலைக்கும் தமிழகத்தைச் சூரிய ஒளி மின்சாரப் பூங்காவாக மாற்றும் ஜெயாவின் திட்டத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்துத் தோண்டினால், பூதம்கூட வெளியே வரலாம்.
* தாய்லாந்தைச் சேர்ந்த காசி கோர்ன் வங்கி, சிங்கப்பூரைச் சேர்ந்த கிட் ஹுவாத் டிரேடிங் கம்பெனி, சீனாவைச் சேர்ந்த லோக்ஸ்லே ஹோல்டிங்கஸ், சீன கம்யூனிகேஷன் வங்கி ஆகிய நிறுவனங்களில் நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ்., ஆகியோரின் பணம் அன்புநாதன் மூலம் முதலீடு செய்யப்பட்டிப்பதாகக் குறிப்பிடுகிறது, நக்கீரன்.
* பெங்களூரிலுள்ள மடிவாலா பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள நிலத்தை அன்புநாதன் மூலம் 50 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, அதற்குரிய வருமான வரியைக் கட்டாமல் சைதை துரைசாமி ஏய்த்திருப்பதாக வருமான வரித்துறையே குறிப்பிடுகிறது.
* நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத் பங்குதாரராக உள்ள பிரிமியர் இன்டியா இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்குச் சொந்தமான வி.எம்.டி. நிறுவனம், எடிசன் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவை மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலம் வாங்கித் தரும் தரகு வேலையில் ஈடுபட்டுள்ளன. அமர்நாத்தும், வெற்றி துரைசாமியும் தங்களின் தகப்பனார்களின் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியே இந்தத் தொழிலில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சார நிலையத்தை அமைத்துவரும் அதானி குழுமத்திற்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, அதனைப் பலமடங்கு இலாபத்திற்கு அக்குழுமத்திற்கு விற்றுக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.
நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.
நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத்.
இந்த நிலக் கொள்ளைக்கு அப்பால், சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் நடத்தி வரும் சித்தார்த் எனர்ஜி என்ற சூரிய ஒளி மின்சார நிறுவனம், கிரெசண்டோ இன்ஃபோ டெக் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்; கோவையைத் தலைமையகமாகக் கொண்டு வைர வியாபாரம் நடத்திவரும் கீர்த்திலால் ஜூவல்லரியில் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி குடும்பத்தின் முதலீடு; இலண்டனில் ஓக்லி பிராப்பர்டி சர்வீஸ், நியூயார்க்கில் ஒரு ஹோட்டல், மலேசியாவில் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் நத்தம் விசுவநாதனின் முதலீடுகள் – என இந்த இருவரும் தனியாகவும் கூட்டாகவும், சொந்தமாகவும் பினாமிகளின் பெயரிலும் நடத்திவரும் தொழில் சாம்ராஜ்ஜியம் மலைப்பு ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.
வருமானவரித் துறையின் சோதனைக்கு ஆளாகியுள்ள இந்த இருவரின் சொத்துக் குவிப்பு மட்டும் கேள்விக்குரியது அல்ல. இவர்களின் இந்தச் சட்டவிரோதமான சொத்துக் குவிப்பில் ஜெயா கும்பலின் பங்கு, பாத்திரம் என்ன, அதாவது சைதை துரைசாமியும், நத்தம் விசுவநாதனும் எந்தெந்த தொழில் முதலீடுகளில் ஜெயா கும்பலின் பினாமிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் மற்ற எல்லாவற்றையும்விட விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான விடய மாகும்.
2011 அம்மாவின் பொற்கால ஆட்சியில், கமிசன் அடிப்பதற்காகவே அரசு மின்சார நிலையங்களும், திட்டங்களும் முடக்கப்பட்டு, தனியார் மின்சார நிலையங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. குறிப்பாக, யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூரிய ஒளி மின்சாரத்தை, ஏழு ரூபாய்க்கு அதானி குழுமத்திடமிருந்து வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் 525 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.
நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.
நத்தம் விசுவநாதனுக்குச் சொந்தமான கல்லூரியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானம்.
25 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசிடமிருந்து வாங்க வேண்டிய எல்.ஈ.டி. விளக்குகளை வாங்காமல் புறக்கணித்துவிட்டு, அதே விளக்குகளை 145 கோடி ரூபாய் செலவில் தனியாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்புதல் அளித்தார், சென்னை நகர மேயரான சைதை துரைசாமி.
இப்படி பல்வேறு ஊழல்கள், அதிகார முறைகேடுகள் மூலம்தான் அவர்கள் இருவரும் சொத்துக்களைக் குவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், நகராட்சி கக்கூசுகள்கூட அம்மாவின் ஆணைக்கிணங்கவே திறக்கப்படும் தமிழகச் சூழலில், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையை நிர்ணயிப்பதும், மத்திய அரசிடமிருந்து குறைந்த விலையில் எல்.ஈ.டி. பல்புகளை வாங்க மறுப்பதும் அம்மாவிற்குத் தெரியாமல் நடந்திருக்கவே முடியாது.
நத்தம் விசுவநாதனும், சைதை துரைசாமியும் புறங்கையில் வழியும் தேனை நக்கியிருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்கள் அம்மாவுக்குத் தெரியாமல் அமுக்கியதன் காரணமாகத்தான், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்பு, ஜெயா கும்பலின் நம்பகமான வட்டத்திலிருந்து சைதை துரைசாமி ஓரங்கட்டப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட ஐவரணியினர் போயசு தோட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
ஐவரணி மட்டுமே ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தின. அதில் தமிழகத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணத்தை, வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்களை, தனது விசுவாசமிக்க போலீசு, உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு கைப்பற்றிக் கொண்டார், ஜெயா. அதேசமயம், அந்த ஐவரணியில் கொட்டை போட்ட பேர்வழியான நத்தம் விசுவநாதன் வெளிநாட்டில் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களைத் தமிழகப் போலீசைக் கொண்டு கைப்பற்ற முடியாது என்பதால், வருமானவரித் துறை ஏவப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையே அம்மாவுக்குத் தெரிந்துதான், அவரது சம்மதத்துடன்தான் நடந்தது எனப் பத்திரிக்கைகள் குறிப்பிடுவதிலிருந்தே, வருமானவரித் துறை ஜெயாவின் ஏவல் நாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடந்த கண்டெய்னர் பணக் கடத்தல் விவகாரத்தில் ஜெயாவைக் காப்பாற்றிவிட்ட மோடி – அருண் ஜெட்லி – வெங்கைய்யா நாயுடு கூட்டணி, அவருக்காக இதையும் செய்யும், இதற்கு மேலேயும் செய்யும்.
natham-captionஊடகங்களிலும், அரசியல் வெளியிலும் மிகப் பெரிய அளவிற்குப் பேசப்பட்ட 2ஜி ஊழல் வழக்கில், கலைஞர் டி.வி.க்குக் கைமாறியதாகக் கூறப்படும் தொகை வெறும் 200 கோடி ரூபாய்தான். அதைச் சாக்கிட்டே, தி.மு.க.வும், கருணாநிதி குடும்பமும் ஊழல், அதிகார முறைகேடுகளின் மறுபெயராகவும், தேச விரோதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டனர். கருணாநிதி குடும்பத்தினர் பலரும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆ.ராசா, கனிமொழி மீது வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு, பிணையில் விடப்பட்டனர்.
ஆனால், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி விவகாரத்தில் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் அதிகார முறைகேடுகளின் மூலம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும், ஹவாலா வழியில் பணம் கடத்தப்பட்டிருப்பதும் அம்பலமான பிறகும், அது தேச நலனுக்கு எதிரான குற்றமாக ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை. தினகரன், நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ்களைத் தாண்டி, மற்ற பத்திரிகைகள், குறிப்பாக ஊழலுக்கு எதிராக சவுண்டுவிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தக் கொள்ளை குறித்த செய்திகளைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. இந்த இருவர் தாண்டி, ஹவாலா பணம் கடத்தலில் மற்ற அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தோ, இந்த இருவரின் சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும், முதலமைச்சர் ஜெயாவிற்கும் உள்ள தொடர்பு குறித்தெல்லாம் ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; ‘‘சோதனை” நடத்திய வருமானவரித் துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழலைவிட, பார்ப்பன சாதிப் பாசம் பெரிதல்லவா!
– குப்பன்  வினவு.காம்

கருத்துகள் இல்லை: