செவ்வாய், 18 அக்டோபர், 2016

அதிமுக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி : குற்றம் சாட்டப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க தடையில்லை .. பேரம் படிஞ்சுடுத்து ..

பணப்பட்டுவாடாவும் தேர்தல் கமிஷன் பல்டியும்!
தேர்தல் அறிவிக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் பறக்கும் படை கண்காணிப்பு தொடங்கியிருப்பதாக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் முறைகேடுகள் நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேலு மரணமடைய அந்த இடத்துக்கும் சேர்த்து வருகிற நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, “தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கும் தலா 2 பார்வையாளர்கள் வீதம் 6 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 3 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நவம்பர் 3ஆம் தேதி வருகை தருவார்கள். தேர்தல் நடைபெறவுள்ள மூன்று தொகுதிகளில் மட்டும் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பழைய வேட்பாளர்களான செந்தில் பாலாஜி மற்றும் பழனிச்சாமி ஆகியோர் போட்டியிடத் தடையில்லை” என்றார் ராஜேஷ் லக்கானி.

பணப்பட்டுவாடாவும் தேர்தல் கமிஷன் பல்டியும்!
தமிழகம் முழுக்க தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் 19-ம் தேதி வெளியானது. ஆனால் அரவக்குறிச்சி தொகுதியிலும் தஞ்சை தொகுதியிலும் ஏராளமான புகார்கள் பதிவானது. பணப்பரிவர்த்தனை, வாக்காளர்களுக்கு பரிசு என்று ஏகப்பட்ட புகார்கள் எழ தேர்தலை தள்ளி வைத்த ஆணையம் அந்த இரு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிராக அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் பாஸ்கரனும், தஞ்சை பாஜக வேட்பாளர் ராமலிங்கம் என 5 பேர் நீதிமன்றம் சென்றனர். அந்த வழக்கில் மூன்று வாரங்களுக்கு தேர்தலை ஒத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் கூறியது தேர்தல் ஆணையம்.பின்னர் மீண்டும் ஜூன் 13ம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதையொட்டி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி “மே 23ம் தேதி அறிவித்தபடி தேர்தல் நடத்தவேண்டும். இல்லையென்றால் நானே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவேன். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு அடிமை ஆணையம் ஆகிவிட்டது" என்று மிகக்கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். கடுமையான குற்றச்சாட்டுகளையும், கடும் விமர்சனங்களையும் கண்டு கொள்ளாத ஆணையம் இப்போது மீண்டும் தேர்தலை அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கிய அதே வேட்பாளர்கள் தேர்தலில் களமிரங்க தடையில்லை என்று சொல்லியிருப்பதன் மூலம் ஏற்கனவே நடந்த முறைகேடுகளுக்கும் நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை சூசகமாக உணர்த்தியிருக்கிறது தேர்தல் ஆணையம்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: