திங்கள், 17 அக்டோபர், 2016

ரயில்கள் ரத்து: ஆயிரக்கணக்கானோர் கைது!

மின்னம்பலம்.காம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய
அரசைக் கண்டித்து, தமிழகம் முழுக்க 48 மணி நேர ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பாமக, தேமுதிக தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. மக்கள் நலக் கூட்டணி அறிவித்த இந்த இரு நாள் போராட்டத்தை திமுக-வும் ஆதரித்தநிலையில், இன்று தமிழகம் முழுக்க எழுச்சியோடு நடந்த போராட்டங்களால் ஆங்காங்கே ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், சேலம், கும்பகோணம், காட்பாடி , சிதம்பரம், மதுரை, நெல்லை, திருப்பூர் மற்றும் தருமபுரி என அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி-கரூர் ரயில் பாதையில் குடமுருட்டி அருகே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் குடிசைகள் அமைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டிய அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதேபோல், அரியலூரிலும் ஆயிரக்கணக்கானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவாரூரில் நூதனப் போராட்டம்:
திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பொதுமக்களும் விவசாயிகளும், ரயில்வே பாதையில் குடிசை அமைப்பதும் அடுப்பு வைத்து சமைப்பதும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதுமாக வித்தியாசமான முறைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், சிரான்குடி அருகே காரைக்காலில் இருந்து திருச்சி செல்லக்கூடிய பயணிகள் இரயில் காலை 8 மணியிலிருந்தே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கூறியதாவது: "இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் யாருக்கும் அழைப்புகூட விடுக்கவில்லை. வெறும் தகவலாக மட்டுமே சொன்னோம். ஆனால் இதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மத்தியில் ஆளுகிற கட்சி மற்றும் மாநிலத்தில் ஆளுகிற கட்சி ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் அரசியல் பாகுபாடு இல்லாமல் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வந்துள்ளனர். இந்த ரயில் மறியல் போராட்டம் மிகவும் தீவிரமானது. கண்டிப்பாக, அடுத்த 48 மணி நேரங்களுக்கு திருவாரூர் மாவட்டத்தில் ரயில் ஓடாது. இதுவொரு அரசியல் போராட்டம் என்பதைவிட விவசாயிகளுக்கான உணர்வுரீதியான போராட்டமாகவே நடைபெறுகிறது. ஏற்கனவே, பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றும், அதற்கான சரியான பலன்கள் கிடைக்கவில்லை. எனவே, இந்த முறை போராட்டம் மிகவும் கடுமையானதாக இருக்கும். அதற்காக நாங்கள் எந்த விலையும் கொடுக்கத் தயாராகவுள்ளோம்" என்று கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையிலிருந்து தஞ்சை வந்த பயணிகள் ரெயிலை விவசாயிகள் மறித்தனர். அவர்கள் ரெயில் என்ஜின்மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கையில் பாய், படுக்கை விரிப்புகள், மண் அடுப்பு எடுத்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் அடுப்பு எரியவைத்து சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தனர். இதில் விவசாய சங்கங்கள், திமுக-வினர், காங்கிரஸ் கட்சியினர், இந்திய யூனியன் லீக் முஸ்லிம் கட்சியினர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் என பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருமே சேலம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் கூடிய திமுக-வினர், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கர்நாடக அரசும் மத்திய அரசும் இணைந்து தமிழகத்துக்கும் தமிழக விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்திருக்கிறது. அதைக் கண்டித்து இன்று ஆதரவுக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தப் போராட்டத்துக்குப் பிறகாவது, மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வழிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
தலைவர்கள் கைது:
சென்னை பெரம்பூரில் ஆயிரக்கணக்கானவர்களுடன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற திமுக தொண்டர்களோடு ஸ்டாலின் கைதானார். அதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் ரயிலை மறிக்க முயன்ற வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை பேஸின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். வேலூர் காட்பாடியில் துரைமுருகனும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேருவும் கைதாகினர். நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்.
தலைவர்கள் கருத்து:
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஆர்.நல்லகண்ணு:
தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதை, பொறுப்புள்ள மத்திய அரசு தீர்த்துவைக்க வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதம் காட்டுவது, மோடி தமிழகத்தை புறக்கணிப்பதற்குச் சமமாகும். இதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உச்சப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இது முடிவுறாது.
தா.பாண்டியன்:
காவிரி நதிநீர் உரிமையைப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடி வந்தார்கள். நீதிமன்றமும் அந்த உண்மையை ஒப்புக்கொண்டு, காவரி நடுவர் மன்றத்தை அமைத்தது. பின்னர், நடுவர் மன்றம் நதிநீரைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இதை முடிவுசெய்ய நீதிமன்றத்துக்கே உரிமை இல்லை என்றுகூறி, மத்திய அரசு புதிய பிரச்னையை கிளப்பியிருக்கிறது. அதைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இது, கட்சிகள் கூட்டாக இணைத்து நடத்துகிற போராட்டம் இல்லை. தமிழக மக்களின் போராட்டம் ஆகும்.
வைகோ:
நயவஞ்சகமாக நரேந்திர மோடி சர்க்கார், தமிழ்நாட்டுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டது. உச்சநீதிமன்ற அறிவிப்பை குப்பையிலே போட்டுள்ளது சித்தராமய்யா சர்க்கார். இன்று தமிழகமே கொந்தளித்துக் கிடக்கிறது. ரயில் பாதைகளில் எல்லாம் கட்சித் தொடர்களைத் தாண்டி, விவசாயிகள் பெண்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு போராட்டம் அண்மைக்காலங்களில் நடந்ததே இல்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல, ஜனநாயகரீதியிலான எங்களது போராட்டம் தீவிரமடைந்தால் இந்த நாடு தாங்காது. நிரந்தர மோடி சர்க்கார், கர்நாடக அரசுக்கு பக்கபலமாக இருந்து தமிழக அரசுக்கு இழைத்திருக்கும் இந்தத் துரோகம் எந்தவகையிலும் சகிக்க முடியாதது.
ரயில்கள் ரத்து தாமதம்!
விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே ரயில்களை மறித்து போராட்டம் நடத்துவதால் தென்னக ரயில்வே சில ரயில்களை ரத்து செய்துள்ளது. பல ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
17.10.2015 அன்று முழுவதும் ரத்து செய்யப்படும் ரயில்கள்:
1) ரயில் எண்: 56033 மயிலாடுதுறை - மன்னார்குடி பயணிகள் ரயில்
2) ரயில் எண்: 56872 திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரயில்
3) ரயில் எண்: 56879 மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில்
4) ரயில் எண்: 56711 காரைக்கால் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில்
பயண நேரம் மாற்றியமைக்கப்பட்ட ரயில்கள்:
1) ரயில் எண்: 6864 மன்னார்குடி - பகத் கி கோடி எக்ஸ்பிரஸ் இன்று மாலை 6 மணிக்கு மன்னார்குடியில் இருந்து புறப்படும்.
2) ரயில் எண்: 11018 காரைக்கால் - லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் மலை 5.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும்.
3) ரயில் எண்: 76846 திருச்சிராப்பள்ளி - விருத்தாச்சலம் பயணிகள் ரயில் இரவு 8 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.
4) ரயில் எண்: 56703 திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டங்களால் ஆயிரக்கணக்கானோர் கைதாகியிருக்கும்நிலையில், ரயில் சேவை தொடர்ந்து பாதிப்புக்குள்ளானது. நாளையும் போராட்டம் தொடரும் என்றநிலையில் நாளை உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் போராட்டமும் உக்கிரமாக நடக்கும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: