புதன், 15 ஜூன், 2016

ரஜினியின் கபாலி.. மலாயா கணபதியின் கதை .. கலைஞர் கருணாநிதி எழுதியது?

Yuva Krishna's photo.கபாலி’யின் கதை மலாயா கணபதியின் வாழ்க்கைக் கதையை தழுவியது என்பதை போல தகவல்கள் கிடைக்கின்றன. மலாயா கணபதி, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான அவரது போராட்டங்களால் 1949ல் தூக்கிலிடப்பட்டவர். ஆரம்பத்தில் சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர் பிற்பாடு மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக பணியாற்றினார். மலாயா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக இருந்தவர். பத்திரிகையாளரும் கூட. தூக்குத்தண்டனையில் இருந்து அவரை தப்புவிக்க இந்திய அரசு செய்த முயற்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியில் முடிந்தன. 37 வயதிலேயே சாவை முத்தமிட்டார் கணபதி. ரஜினி அண்ணாமலை அருணாசலம் போன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சுவாமியின் வசூல் அருள் வேண்டி கபாலி என்ற சாமிபெயர் சூட்டி உள்ளார்

இவரைக் குறித்த தகவல்களை உடனடியாக கலைஞர் எழுதி 1949ல் ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்கிற சிறுநூலாக வெளியிட்டவுடன், தமிழகத்திலும் கணபதி பரப்பரப்பாக பேசப்படக்கூடிய தலைவரானார்.
1999ல் கலைஞர் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கணபதி குறித்த பழைய நினைவுகளை அங்கிருந்தவர்களிடம் பேசினார்.
பிற்பாடு முரசொலியில், நெல்லையில் நடந்த கழக மாநில மாநாட்டையொட்டி உடன்பிறப்புகளுக்கு எழுதிய தொடர்கடிதங்களில் கணபதி குறித்து தான் எழுதிய நூலில் இருந்து ஒரு சிறுபகுதியையும் வெளியிட்டார்.
---
தம்பிக் கோட்டையிலே பிறந்த கணபதி, ஒரு சாண் வயிற்றுக்காக இளமையிலே மலேயாவுக்கு ஓடினார். ஒரு கணபதியா? எத்தனை கணபதிகளை.. ஏ! தாழ்ந்த தமிழகமே! நீ மலேயாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பியிருக்கிறாய். செப்புச் சிலைகளுக்குத் தேருந்திருவிழாவும், செல்வச் சீமான்களுக்கு சீரும் சிறப்பும். கணபதிகள் காலந்தள்ள இலங்கையும் மலேயாவும்.
இது அடுக்குமா, தமிழகமே! அன்பு மகன் செத்தான் என்று அழுகிறாயே, ஆத்திரப்படுகிறாயே. அலறித் துடிக்கிறாயே. அவனை நீ தானே விரட்டி அடித்தாய். அவனுக்கு சோறில்லை என்று சொன்னது நீ தானே? அவன் நல்ல வீட்டில் வாழக் கூடாது என்று கூறியது நீ தானே? அவன் பொன்னையும், முத்தையும் தீண்டக் கூடாது எனத் தடை போட்டது நீ தானே? இப்போது அழு! நன்றாக அழு! கண் இமைகள் கனத்துப் போகும் வரையில் அழு! விழிகளில் ரத்தம் வழிய ஆரம்பிக்கும் வரையில் அழு! இதைத்தான் கணபதியின் உரத்த குரல், உத்வேகத்தோடு ஒலிக்கின்றது. இல்லையென்று கூற முடியுமா?
ஆங்கிலேயராட்சியிலே மலேயா சென்ற கணபதி, அதே ஆங்கிலேய சர்க்காரால் சவமாகச் சாய்க்கப்பட்டார். கணபதி எந்த வெள்ளை முதலாளியையும் சுட்டுக் கொன்றதாக வழக்கு கிடையாது. கையிலே துப்பாக்கி வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக இந்தக் கோர மரண தண்டனை! தீர்ப்பு கேட்டு திராவிடம் திகைத்தது. நமது தமிழர்களுக்கு அக்கறை இருந்திருந்தால், கணபதியின் கழுத்தை இறுக்கிய கயிறு, அடுத்து சாம்பசிவத்தின் முன்னே தொங்கிக் கொண்டிருக்குமா? அவர்கள் கண்களிலே நெருப்புக் கிளம்பியிருந்தால் வீர சேனனை நோக்கி குண்டுகள் கிளம்பியிருக்குமா? இரண்டு கட்டிளங் காளைகளை மலேயா சர்க்காரின் அடக்குமுறைக்கு காணிக்கையாகத் தந்து விட்டு, அறிக்கைகள் பறக்க விடுவது உயிரோடிருக்கும்வரையில் உதாசீனம் செய்யப்பட்டவனுக்கு, செத்த பிறகு உத்தரகிரியை வெகு சிறப்பாக நடத்துவது போலத் தானே.
மலேயாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழர் வாழ்வில் ஒரு சோகத் தொடர் கதை. இந்தக் கதை, ’பிழைக்கப் போகும் அத்தியாய'த்தைத் தாண்டி, தமிழன் அநியாயமாய்க் கொல்லப்படும் அத்தியாயத்திற்கு வந்து நிற்கிறது. அடுத்த அத்தியாயம் என்னவோ? எத்துணை பயங்கரமானதோ?
---
கலைஞர் இதை எழுதுகையிலே அவரது வயது வெறும் இருபத்தைந்துதான். கடல் கடந்து எங்கோ இறந்த தமிழனுக்காக அவரது உள்ளம் அந்த வயதிலேயே அடித்துக் கொண்டதால்தான் அவர் தமிழினத் தலைவர் ஆனார்.  யுவகிருஷ்ணா முகநூல்

கருத்துகள் இல்லை: