திங்கள், 21 டிசம்பர், 2015

சிம்பு -அனிருத்துக்கு பாதுகாப்பு.....கோவன் பாட்டுக்கு தேசதுரோக வழக்கு...இதுதான் மேட்டுக்குடி வாழ்வியல்

protest-against-simbu-aniruth-3
மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது
செக்ஸ் பாடகன் சிம்புவையும் பக்கவாத்தியம் அனிருத்தையும் கண்டிக்கும் வகையில், தி,நகர் மாசிலாமணி தெருவில் உள்ள சிம்பு வீட்டின் முன்பாக முற்றுகை ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில், தோழர் விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது, அதில் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
சிம்புவின் வீட்டிற்கு செல்வதற்கு நான்கு வழிகள் இருந்ததால் காவல் துறை நம்மிடம், “மேடம் எந்த இடத்தில் பண்ண போறீங்க, நாம ஒரு understand-ல் பண்ணலாம்.” என்று சரியான இடத்தை சொல்ல சொல்லி காலையில் இருந்தே தொந்தரவு பண்ண தொடங்கி விட்டார்கள்.

தோழர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து சென்று ஆர்ப்பாட்டம் செய்வது என்ற முடிவுடன் சென்ற போது காவல்துறை நமக்கு முன் பெரும்படையுடன் சிம்புவின் வீட்டை காவல் காக்க தொடங்கியிருந்தது.
முற்றுகையிடச் சென்ற தோழர்களை வீட்டிற்கு சற்று முன்னே தடுத்து நிறுத்தியது காவல்துறை. உடனே தோழர்கள் முழக்கம் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிம்பு – அனிருத் படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்தும், மாட்டு சாணியை கரைத்து பாலிதீன் கவரில் அடைத்து அவர்களது புகைப்படங்களின் மீது ஊற்றியும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது, சிறு குழந்தைகள் உள்பட அனைவரும் சாணி அடித்ததை பொறுக்க முடியாத காவல்துறை தோழர்களிடம் “மேடம் பேட்டி கொடுத்துவிட்டு சீக்கிரம் முடித்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சத் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தோழர் அமிர்தா பத்திரிக்கைகளுக்கும் – ஊடகங்களுக்கும் அளித்த பேட்டியில், “இந்த சமூத்தையே சீரழிக்கும் விதமாக இவர்கள் இசையமைத்து பாடியுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம், மேலும் மழை வெள்ளத்தில் தங்களுடைய வாழ்வையே இழந்து தமிழகம் நிற்கும் சமயத்தில் இப்படி ஒரு ஆபாசமான பாட்டை வெளியிடுவது இவர்களுடைய வக்கிரபுத்தியை காட்டுகிறது, மேலும் மூடு டாஸ்டாக்கை என்று பாடினால் நடு இரவில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யும் இந்த அரசு, பெண்களைப் கேவலப்படுத்தி பாடினால் பாதுகாக்கிறது. கலை – சினிமா என்பது சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மாறாக பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் படங்களையும் பாடல்களையும் வெளியிடும் யாராக இருந்தாலும் எங்களுடைய கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடந்து செய்வோம்” என்று பேசி முடித்தார்.
ஆர்ப்பாட்டத்தை கவனித்துக் கொண்டிருந்த மக்களை ஒரு போலீஸ் அதிகாரி விரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் “ஏன் சிம்பு என்ன பெரிய தேசிய பக்தி பாடலையா பாடிவிட்டார்? உங்க வீட்டு பெண்கள் அதை கேட்டுவிட்டு நிம்மதியாக தெருவில் நடந்து போக முடியுமா?” என்று ஒரு தோழர் சொன்னபோது அந்த காவல் அதிகாரி தலை குனிந்து கொண்டார்.
தகவல்,
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை – 98416 58457  வினவு.com

கருத்துகள் இல்லை: