செவ்வாய், 22 டிசம்பர், 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....சிம்பு அனிருத் பாட்டால் நொந்துபோனவர்களுக்கு ஆறுதல்


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு (சங்கம்படைத்தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (13.4.1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர்,நடனக்காரர், உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 15-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது. இந்த பாடலில் படத்தின் கதையையே  மிகவும் அழகான கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார் பட்டு கோட்டையார் .இவரல்லவோ கவிஞர்.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.
 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-இல் முதன்முதலாக பாடல் எழுதினார். படித்த பெண் படத்தில் வாடாத சோலை, காப்பி ஒண்ணு எட்டணா, தேனாறு பாயுது செங்கதிரும் போன்ற இனிய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.
 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 187 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, நகைச்சுவை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.
 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’,  ‘செய்யும் தொழிலே தெய்வம்’, ‘கொக்கரக் கொக்கரக்கோ சேவலே’, ’என்னருமை காதலிக்கு வெண்ணிலவே’, ’திருடாதே பாப்பா திருடாதே ’, ’ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே’, ’பக்கத்திலே இருப்பே நான் பாத்துப் பாத்து ரசிப்பேன்’, ’நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு’, ’வருஷத்திலே ஒருநாளு தீபாவளி, ‘ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்’, ‘ஆண்கள் மனமே அப்படித்தான் அது அடிக்கடி மாறும் இப்படித்தான்’, ’காயமே இது மெய்யடா வெறும் காற்றடைத்த பையடா’, ’சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு’ , ‘கோழியெல்லாம் கூவையிலே ’, ’கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு’, ’நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறு மாசமா’ ஆகியவை குறிப்பிடத்தக்கப் பாடல்கள்.
 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.
 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. இவர் தற்போது அரசுப் பணியிலுள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (8.10.1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார். அதுபோல் திரைத்துறையில் தான் சம்பாதித்ததை சீரழிக்காமல் தன் வாரிசுகளுக்குச் சேர்த்துவைத்துவிட்டு சென்றுள்ளார்.
 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-இல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
தி இந்து தமிழ் நாளிதழிலிருந்தும், விக்கிப்பீடியாவிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.   antrukandamugam.wordpress.com
http://tamil.thehindu.com/opinion/blogs-10/article7097819.ece?ref=relatedNews
https://en.wikipedia.org/wiki/Kalyanasundaranar

கருத்துகள் இல்லை: