ஞாயிறு, 8 நவம்பர், 2015

பீகார் - சமூகநீதிக்கு கிடைத்திட்ட வெற்றி ..வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய ...கி.வீரமணி

பீகார் தேர்தல் முடிவு - ஒடுக்கப்பட்ட சமூகநீதிக் கூட்டணிக்குக் கிடைத்திட்ட வெற்றி: கி.வீரமணி நாடே எதிர்பார்த்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. துவக்கத்தில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை என்பது போல செய்திகள் வரத்துவங்கின! ஆனால் கடைசியில் லாலுபிரசாத்- நிதிஷ்குமார்- காங்கிரஸ் இணைந்துள்ள ராஷ்டிரீய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்துள்ள நிதிஷ் கூட்டணிக்கே மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்து, பீகார் ஜனநாயக வரலாற்றில் பொன்னேட்டை இணைத்துள்ளனர்.
அந்நாளில் ‘திராவிடநாடு’ ஏட்டில் அறிஞர் அண்ணா தலைப்பிடுவார் “ஆரம்பத்தில் ‘அடானா’ முடிவில் ‘முகாரி’” என்று முதலில் மகிழ்ச்சி ராகம் பாடியவர்கள், பிறகு துயர ராகத்தில் முடிப்பர் என்று அதை நினைவூட்டுவதாக இது அமைந்தது!
இத்தேர்தலில் முடிவு இந்தியாவின் எதிர்காலம் இருட்டானதல்ல என்பதை நிரூபித்து மக்களின் அவநம்பிக்கையைப்போக்கி புது நம்பிக்கையை விதைத்துள்ளது!
பிரதமர் மோடி 30 பேரணிகள் நடத்தி, நிதிஷ்குமார், லாலுபிரசாத் போன்ற தலைவர்கள் மீது வைத்த தனிப்பட்ட தரக்குறைவான விமர்சனங்கள் “சைத்தான்”, ‘டி.என்.ஏ’, காட்டுத்தர்பார் நடத்துவோர், என்ற பேச்சு, நிதிஷ் அணிக்குப் பெரும் ஆதரவினைத் திரட்டியுள்ளது!

மோடி அலையோ, விரித்த வலையோ அந்த எளிய மக்களிடம் செலாவணி ஆகவில்லை. ஆர்.எஸ்.எஸ் - சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றி பேசிய பேச்சின் எதிரொலியும் இந்த மாபெரும் வெற்றி விளைச்சலுக்கு நல்ல “உரமாக” அமைந்தது! நிதிஷ், லாலு, காங். கூட்டணி நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி இம்மூன்றையும் காக்கும் காவல் கூட்டணி என்பது வருகின்ற காலத்திற்கும் வழிகாட்டும் அகில இந்திய, ஒடுக்கப்பட்டோரின் சமூகநீதிக் கூட்டணியாகவும் வளர வேண்டுமென்பது அவசியமாகும். வெற்றி பெற்ற பீகார் தலைவர்கள் லாலுபிரசாத், நிதிஷ்குமார், சரத்யாதவ், காங்கிரஸ்தலைவர் திருமதி சோனியாகாந்தி ஆகியோருக்கு தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! இவ்வெற்றி, டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின், பா.ஜ.க ஆர்.எஸ்.எசுக்குப் பாடம் கற்று தரும் முடிவு என்ற சுவரெழுத்து ஆகும். கி.வீரமணி தலைவர், திராவிடர்கழகம்

கருத்துகள் இல்லை: