வெள்ளி, 13 நவம்பர், 2015

வித்யா பாலன் : இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது”

சில்க் ஸ்மிதா வேடம் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா பாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ‘கஹானி’ படத்தில் தீவிரவாதியாக மாறிய கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக வந்தார். தற்போது மறைந்த இந்தி நடிகை கீதா பாலி வேடத்தில் புதுப்பட ஒன்றில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வந்த ‘குரு, உருமி’ படங்களிலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து அவருக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இது குறித்து வித்யா பாலன் அளித்த பேட்டி வருமாறு:-
வாழ்க்கை கதை ‘‘நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன. இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர்.
அதுபோல் கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ராசென் ஆகியோர் வேடங்களிலும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.

கதைகளையும் என்னிடம் சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

சிறு படங்களுக்கு வரவேற்பு

சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்தான் ஓடும். ஆனால் இப்போது சிறுமுதலீட்டு படங்களும் ஓடுகின்றன. ரசிகர்கள் கதைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். இனிமேல் நல்ல கதைகளுடன் வரும் படங்கள்தான் ஓடும். கோடிக்கணக்கில் செலவு செய்து கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது.

இவ்வாறு வித்யா பாலன் கூறினார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: