வெள்ளி, 16 மே, 2014

Delhi BJP அலுவலகத்தில் 5 லட்சம் லட்டுகள், கொண்டாட்டத்திற்கு தயாராகிறது

புதுடெல்லி, வெற்றி கொண்டாட்டத்துக்கு பாரதீய ஜனதா தயார் ஆகி வருகிறது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 லட்சம் லட்டுகள் வினியோகத்துக்கு தயாராக உள்ளன.
பாரதீய ஜனதா உற்சாகம்
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்த கருத்து கணிப்புகளில், பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என தெரியவந்து உள்ளதால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் அக்கட்சியின் தலைவர்கள் இப்போதே ஈடுபட்டு உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் நிலையில், டெல்லியில் அசோகா சாலையில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இப்போதோ மிகவும் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 லட்சம் லட்டுகள்
நேற்று காலையில் இருந்தே பட்டாசுகள் கொளுத்தியும், இனிப்புக்கள் வழங்கியும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். நேற்றே சுமார் 5 லட்சம் லட்டுகள் பாரதீய ஜனதா அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு, வினியோகிக்கத் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வித விதமாக ஏராளமான பட்டாசுகளும் வாணவெடிகளும் கொளுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே ஒருவரை பிரதமராக அறிவித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். நாளை (சனிக்கிழமை) டெல்லி வர இருக்கும் நரேந்திர மோடியை வரவேற்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டெல்லி விமான நிலையத்தில் இருந்து பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்துக்கு அவர் மிகவும் விமர்சையாக அழைத்துவரப்பட இருக்கிறார்.
களை இழந்த காங். அலுவலகம்
அதேசமயம், டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் களை இழந்து காணப்படுகிறது.
குஜராத்
இதேபோல் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலும் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பாரதீய ஜனதா கட்சியினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். பாரதீய ஜனதாவின் வெற்றியை சிறப்பாக கொண்டாடுமாறு அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மாநில பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ஹர்சத் பட்டேல் நேற்று தெரிவித்தார்.
அலங்காரம்
இதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமான பட்டாசுகளையும், இனிப்புகளையும் வாங்கி வைத்து கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர். காந்தி நகரில் உள்ள மாநில பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான ‘ஸ்ரீகமலம்‘ வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நரேந்திர மோடியின் சொந்த ஊரான வாத் நகரும் அவரது வெற்றியை கொண்டாட தயாராகி வருகிறது.dailythanthi.com/

கருத்துகள் இல்லை: