புதன், 14 மே, 2014

குதிரை பேரம் ஆரம்பம் ? BJP அமித் ஷா: ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் !

ஒரு எம்.பி.யை கொண்ட கட்சி என்றாலும் பரவாயில்லை, யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று பா.ஜனதா கூறியது.
அமித் ஷா
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்க பா.ஜனதா தயாராக உள்ளது. இதுகுறித்து, குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
272–க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் போட்டியிட்டோம். அது கிடைக்கப்போகிறது. இருப்பினும், ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட கட்சியாக இருந்தாலும், எங்களை ஆதரிக்க விரும்பினால், தேச நலன்கருதி (???)  அதை ஏற்றுக்கொள்வோம்.
பா.ஜனதா கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும்.
அத்வானிக்கு என்ன பொறுப்பு
தேர்தலுக்கு பிறகு, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்பு அளிப்பது என்பதை கட்சியின் உயரிய அமைப்பான ஆட்சி மன்றக்குழு முடிவு செய்யும். எனக்கு என்ன பொறுப்பு என்பதையும் கட்சி முடிவு செய்யும். கட்சியின் முடிவை நான் ஏற்றுக்கொள்வேன்.
இந்த தேர்தல் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இது, நரேந்திரமோடியின் வெற்றி, பா.ஜனதாவின் வெற்றி.
உ.பி. வியூகம்
உத்தரபிரதேசத்தில் அதிக இடங்களைப் பிடிக்க நாங்கள் அதிரடி வியூகம் வகுத்தோம். மாநிலத்தை இரண்டு, மூன்று தொகுதிகள் அடங்கிய 30 பிளாக்குகளாக பிரித்தோம். ஒவ்வொரு பிளாக்கிலும் தனித்தனி வியூகத்துடன் செயல்பட்டோம். கட்சியின் அமைப்புரீதியான கட்டமைப்பை பலப்படுத்த கடுமையாக பாடுபட்டேன். உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கட்சிக்கு நல்ல வெற்றி கிடைக்கும். இவ்வாறு அமித் ஷா கூறினார்..dailythanthi.com

கருத்துகள் இல்லை: