புதன், 14 மே, 2014

அமெரிக்க பாலியல் வன்கொடுமை தடுப்பு இந்தியாவில் சாத்தியமா ? சகமனித தலையீடு' (bystander intervention)

தேர்தல் காலம் முடிந்துவிட்டது. இனி சுடச்சுட செய்திகள் கிடைக்காமல்
தத்தளிக்கும் பத்திரிகைகள், எப்போதும் தீர்வு காணமுடியாத சில பிரச்சினைகளைத் தோண்டி எடுப்பார்கள். இப்பிரச்சினைகளில் மிகவும் 'அத்தியாவசயமான' ஒன்று - இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமை.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் பயன்படுத்தப்படுகிறதா? இன்றும் பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள்.
வீட்டில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி, வெளியில் நடக்கும் வன்கொடுமையானாலும் சரி. மாற்றப்படவேண்டியது பொதுமக்களின் சிந்தனைதான் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.
குறிப்பாக, பெண்களைப் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக்கொண்டால் மட்டுமே, இச்சமுதாயத்தில் அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறைக்கப்படுவதற்காக சாத்தியங்கள் உண்டாகும்.
கடந்து 2 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்பட்ட ஒன்று - பாலியல் வன்கொடுமை. ஆனால், நாம் இதற்காக எடுத்துக்கொள்ளும் அக்கறை மிகவும் குறைவே. உதாரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால், இந்நாட்டில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு முளையில் இக்கொடூரம் தொடர்ந்து நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.
தற்போது ஊடகங்களுக்கு அதிமுக்கியமாக செய்தி 'தேர்தல்' மட்டுமே. ஒருவேளை அவர்களது கவனம் மீண்டும் பாலியல் வன்கொடுமையின் பக்கம் திரும்பினாலும், அப்பிரச்சினை தீர்க்கப்படப்போவதில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை என்ற பிரச்சினை இந்நாட்டை விட்டு இன்னும் அகலவில்லை என்ற எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கும்.
இக்கண்ணோட்டத்தில், இந்தியாவை விட அதிகமான பாலியல் வன்கொடுமை நடக்கும் அமெரிக்காவில் (ஒருவேளை அதிகமாக பதிவுசெய்யப்படும் பாலியல் வன்கொடுமைகள் என கூறுலாம்), இப்பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம். குறிப்பாக, அமெரிக்க கல்லூரி வளாகங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள்.
அமெரிக்காவிலுள்ள கல்லூரிகளில் ஒவ்வொரு 21 மணிநேரத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை செயல் நடப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் புதிதாக கல்லூரி உலகத்திற்குள் நுழையும் இளம்பெண்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறப்படுகின்றது. இது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்பதால், பல உயர்தர பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுதிரண்டு கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் அளித்தனர். அது பயனற்றுப் போகவே, அந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்நாட்டு அரசிடம் சமீபத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, இப்பிரச்சினையை பலவிதமான கோணத்தில் ஆராய்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், துணை அதிபர் ஜோய் பிடேனும் பல முன்முயற்சிகளை எடுத்துள்ளனர். பாலியல் வன்கொடுமைகளிலிருந்து மாணவிகளை பாதுகாக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு படை ஒன்றை அமைத்துள்ளனர். மேலும், கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய துவங்கியிருக்கிறார்கள்.
இவற்றைத் தாண்டி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக www.notalone.gov என்ற இணையதளத்தையும் தொடங்கியுள்ளனர். கல்லூரிகளில் நடக்கும் பாலியல் வன்புணர்ச்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்த இணையதளத்தை துவங்கியுள்ளது அமெரிக்க அரசு.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகர்களைக் கொண்டு '1is2Many' என்ற பொதுநல விளம்பரம் (PSA) ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோப் பதிவு உணர்த்தும் கருத்து இதுதான் - அவள் சம்மதம் இல்லாமல் நடந்தால், அது பாலியல் வன்புணர்ச்சி, பாலியல் வன்கொடுமைதான்.
இந்த விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான விதிமுறைகளை கையாளும் பல்கலைகழகங்களுக்கு அந்நாட்டு அரசு நிதி ஒதுக்குகிறது. மேலும், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆகட்டும் அல்லது அக்கல்லூரி நிர்வாகிகள் ஆகட்டும், இவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமையை பற்றின விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சி வகுப்பு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அங்குள்ள சட்ட திட்டங்கள் பற்றியதாகும். ஆனால், பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இச்சட்டங்களை பயன்படுத்தவும் கற்றுத் தரப்படுகிறது. இதுபோன்ற பயிற்சிகள் இன்று பல இடங்களில் தேவைப்படுகின்றது. ஆனால், எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் இது மாதிரியான ஒன்று இல்லவே இல்லை.
'சகமனித தலையீடு' (bystander intervention) – இது மற்றோரு சுவாரஸ்யமான முன்முயற்சியாகும். அதாவது, ஒரு பெண் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டாலோ அல்லது அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருந்தலோ அவளை காணும் பொதுமக்கள் அந்த சூழ்நிலையில் தலையிட்டு எப்படி கையாளுவது என்பதே அவர்களுக்கு கற்பிப்பதாகும்.
இதுபோன்ற பல புதுமையான முன்முயற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து செய்து வருகின்றனர். இது எச்சரிக்கையூட்டும் செயல் அல்ல; தகுந்த விழிப்புணர்வுடன் அக்கறையுடன் மேற்கொள்ளும் செயல். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், தங்களால் முடிந்த செயல்களில் இளைஞர்களும் ஈடுபடுக்கின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு பின், வர்மா கமிஷன் அளித்த அறிக்கையும் 2013-ஆம் ஆண்டு செய்யப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தமும் (the Criminal Law Amendment Act 2013) ஒரு சிறிய தொடக்கமே. பாலியல் வன்கொடுமை என்பது எக்காரணத்தாலும் ஏற்கத்தக்கதல்ல என்பதை வலியுறுத்த நாம் நீண்ட மைல்களை கடக்கவேண்டியுள்ளது. இப்பயணம் இக்கட்டுரையுடன் முடிவடைவதல்ல!
தமிழில் - எம்.ஆர்.ஷோபனா

கருத்துகள் இல்லை: