வியாழன், 17 மே, 2012

ஆ.ராசாவை விட மாட்டோம்.. ஹி..ஹி.. ‘கை’விட மாட்டோமுங்க

Viruvirupu
வெளியே வந்தும் ஆ.ராசா மகிழ்ச்சியாக இல்லை. தாம் உள்ளே இருந்த 15 மாத காலத்தில், கட்சியில் இருந்து எந்தளவுக்கு விலகிப் போயிருக்கிறோம் என்பதை அவர் தெரிந்து கொண்டு திகைத்துப் போயிருக்கிறார். “ராசாவை கட்சி கைவிடாது” என்ற வார்த்தையை தி.மு.க. தலைவரில் இருந்து, சக அமைச்சர்கள் வரை ஏன் அடிக்கடி சொல்கிறார்கள் என்று இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறார்.
யாரும் கேட்காமல், “கைவிட மாட்டோம்” என்று வலிய சொல்கிறார்கள் என்றால், அரசியலில், “கைவிட்டு விட்டார்கள்” என்று அர்த்தம்.

“நீதிமன்றத்தில் பெயில் கிடைத்ததுமே, இதன் தாக்கத்தை முதலில் உணர்ந்து கொண்டார் அவர்” என்றார் ராசாவுக்கு நெருக்கமான ஒருவர். ராசாவுக்கான ஜாமீன் தொகையை கட்டுவதிலேயே இழுபறி ஏற்பட்டதை பார்த்த பின்னரும் உணராவிட்டால் எப்படி?
ரொக்க ஜாமீனில் வீட்டுக்கு வந்தபோது..
ராசாவுக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தோம். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்கள், ராசா விவகாரத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்டின.
தமக்கு இந்த மாத இறுதிக்குள் ஜாமீன் கிடைத்துவிடும் என்று ராசா உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், திடீரென முதல் நாளே ஜாமீன் கொடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அவரது குடும்பத்தினரும் அன்று கோர்ட்டுக்கு வந்தபோது, ராசாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வரவில்லை.
எப்படியும், ஓரிரு தடவைகள் ஒத்தி வைத்தபின் தீர்ப்பு வழங்கப்படும் என்றே அவர்களும் நம்பியிருந்தார்கள்.
நீதிபதி, ராசாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கூடவே, லட்சக்கணக்கில் ரொக்க ஜாமீன் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதை ராசா குடும்பம் எதிர்பார்க்கவில்லை. தவிர அதேயளவு தொகைக்கு வேறு இருவர் ராசாவுக்காக உறுதி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வேறு இருந்தது.
இந்த உத்தரவு வந்ததும் துவங்கியது, தி.மு.க.-வினரின் மராத்தான் ஓட்டம்.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தபோது விதிக்கப்பட்ட ரொக்கத் தொகையை கட்ட நான், நீ என்று போட்டியிட்ட உடன்பிறப்புகள், ஒவ்வொரு காரணம் சொல்லி நைசாக அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதில் குறியாக இருந்தார்கள்.
டில்லிதானே, யாருக்குப் புரியப்போகிறது என்று, இவர்கள் தமக்கிடையே சத்தமாக பேசிக்கொண்ட பேச்சுக்களை, தமிழ் தெரிந்த ஓரிரு செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.
கட்சியின் சீனியர் எம்.பி. ஒருவரே, “இவ்வளவு பெரிய தொகையை கட்டிவிட்டு, அதை திரும்ப எடுப்பதற்கு, மாநிலத்தில் நம்ம ஆட்சியா நடக்கிறது? அட, அதை விடுங்க, மாநிலத்தில் நம்ம ஆட்சி நடக்கும்போதும்  எங்கே சம்பாதிக்க விட்டாங்க? ஜாமீன் தொகையையும் அவங்களே பாத்துக்கட்டும்” என்றார்.
அப்படியிருந்தும் ஜாமீன் தொகைக்காக அந்த சீனியர் எம்.பி.-யை வற்புறுத்தவே, “எங்கிட்ட மொத்தமாக இருப்பதே 3 லட்சம் ரூபாதான். அத கொடுத்துட்டா, பெற்றோல் அடிக்ககூட பைசா கிடையாது” என்று கையை விரித்து விட்டார்.
இந்த இழுபறிகளை இறுகிப்போன முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராசா.
ஒரு கட்டத்தில், ராசாவுக்கு ஜாமீன் கிடைத்தும், கட்டுவதற்கு ரொக்கம் இல்லாத காரணத்தால் அன்றிரவு அவர் விடுதலையடைய முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அப்படி நடந்திருந்தால் கட்சிக்கு அவமானமாக போயிருக்கும் என்று புரிந்து கொண்ட சிலர், சென்னையை தொடர்பு கொண்டனர்.
கதைச் சுருக்கம், கருணாநிதி வரை சென்றது.
“டில்லில நம்மாளுங்க இத்தனை பேர் எம்.பி.க்களாக இருந்தும், சென்னைக்கு போன் பண்றீங்களே” என்று கோபப்பட்ட கருணாநிதி, தாமே அடுத்தடுத்து மூன்று எம்.பி.க்களை போனில் பிடித்திருக்கிறார். அவர்களோ, முகாரி ராகம் இசைத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, கோர்ட் வளாகத்தில் பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அலுவலக நேரம் முடியுமுன் பணம் கட்ட வேண்டும் என்ற நிலையில் அங்கிருந்த ஒருவர், “தயாவுக்கு போன் போட்டிங்களா?” என்றார். அவர் தயா என்று குறிப்பிட்டது, தயாநிதி மாறனை!
இதைக் கேட்டதும், சுற்றியிருந்தவர்கள் அவரைப் பார்த்து முறைக்கவே, அவர் கப்சிப். “இந்தாள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவரா?” என்று அவரை விநோதமாக பார்த்தார்கள் சிலர்.
தயாநிதி மாறனிடம் பணம் கேட்கலாமா என்ற கதை ராசாவிடமும் சொல்லப்படவே, அவர் தலையில் கை வைத்து விட்டார்! “இப்படியாச்சே நம்ம நெலமை”
அதன்பின் சற்று கோபமாகிய ராசா, “யாரும் பணம் கட்ட தேவையில்லை. நானும் வெளியே வரலை. தலைவருக்கு போன் போட்டு சொல்லிருங்க. கட்சி ராசாவை கைவிட்டிச்சு, அப்புறம் ராசா, கட்சியை கைவிட்டார் என்று சொல்லிருங்க.. அவர் புரிஞ்சுக்குவார்” என்றார். அதன்பின் அவர் பேசவில்லை.
இந்த ‘கைவிட்ட கதை’, செல்போன் டவர்கள் மூலமாக சென்னைக்கு போய் சேர்ந்தது.
“கட்சி ராசாவை கைவிட்டது” என்பது ஏதாவது ரியாக்ஷனை ஏற்படுத்தியதோ, இல்லையோ தெரியாது… “ராசா கட்சியைக் கைவிட்டார்”  என்பதற்கு என்ன அர்த்தம் என்று கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும்.
அடுத்த சில நிமிடங்களில் கருணாநிதியிடம் இருந்து டில்லிக்கு போயின இரண்டு போன் அழைப்புகள். அரை மணி நேரத்தில், ரொக்கத்துடன் கோர்ட் வாசலில் போய் இறங்கினார்கள் கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்ட இருவர்.
“மவனே.. நான் வாய் திறந்தால் தெரியும் சேதி” ஸ்டான்ட் எடுத்தால், காட்சிகள் தலைகீழாக மாறும் மாயாஜாலத்தை அந்த நிமிடத்தில் நேரில் பார்த்தார் ஆ.ராசா.
அய்… நம்ம தமிழ் சினிமாவில் இப்படிதானே, தாதா உருவாகிறார்!

-டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி.


கருத்துகள் இல்லை: