வியாழன், 17 மே, 2012

ராஜாவை வரவேற்க தி.மு.க., எம்.பி.,க்கள் வராதது ஏன்?

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள ராஜாவுக்கு, தி.மு.க., தொண்டர்கள் உட்பட அவரது ஆதரவாளர்களும் பெரும் வரவேற்பு அளித்ததை காண முடிந்தது. அதே நேரத்தில், சிறையில் இருந்து அவரை வரவேற்க, டி.ஆர்.பாலுவை தவிர தி.மு.க., எம்.பி.,க்கள் எவருமே செல்லவில்லை.

தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு, பாட்டியாலா கோர்ட் நேற்று முன்தினம் ஜாமின் வழங்கியது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கப் போகும் வழக்கு இது என்றும், இப்போதைக்கு ராஜா வெளியில் வர மாட்டார், ஜாமின் கிடைக்காது என்பதே, தி.மு.க., கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கருத்தாக இருந்தது.

யாரும் வரவில்லை: ஆனால், அத்தனையும் தவிடுபொடியாக்கி, எந்த கட்டத்தில் கேட்டால் கிடைக்கும் என்பதை சரியாகக் கணித்து, அதன்படி கடைசி ஆளாக விண்ணப்பித்து ஜாமினை பெற்றுள்ளார் ராஜா.
மற்றவர்களைப் போல ஒவ்வொரு கோர்ட்டாக அலையாமல், ஒரே ஒருமுறை தான் கேட்டார்; கிடைத்து விட்டது. ராஜாவின் ஜாமினை எதிர்பார்த்து, அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் பாட்டியாலா கோர்ட்டில் குவிந்திருந்த போதும், தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் யாரும் வரவில்லை. பார்லிமென்ட் நடந்து கொண்டிருக்கும் சமயம் என்பதால், எல்லா எம்.பி.,க்களுமே டில்லியில் தான் உள்ளனர். ஆகவே, சிரமம் ஏதும் இருந்திருக்காது. இருப்பினும் வரவில்லை. ராஜாவுக்கு ஜாமின் கிடைத்த தகவல் கேட்ட பிறகே, தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும் பாட்டியாலா கோர்ட்டிற்கு விரைந்தனர். அப்போது, ஜாமின் தொகை தலா 20 லட்சம் ரூபாய் கட்ட வேண்டுமென்ற பரபரப்பு கிளம்பியபோது, யார் கட்டுவது என்ற கேள்வி எழுந்தது.

தயக்கம்: கனிமொழிக்கு ஜாமின் தொகை கட்ட, போட்டா போட்டியே நடந்தது. ஆனால், ராஜாவுக்கு நேற்று முன்தினம் யாரும் தானாக முன்வரவில்லை; மாறாக பலரும் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தி.மு.க., தலைமை உத்தரவின் பேரிலேயே, திருச்சி சிவாவும், கள்ளக்குறிச்சி ஆதிசங்கரும் முன்னிறுத்தப்பட்டு, அதன் பின் இவர்கள் சார்பில் ஜாமின் தொகைக்கு பொறுப்பேற்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜாமின் குறித்த கோர்ட் நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோதே, திகாருக்கு தகவல் அனுப்பப்பட்டு, ராஜாவின் உடைமைகள் அனைத்தும் "பேக்கிங்' செய்யப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், ராஜாவிற்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்ற கேள்வி, அனைவர் மத்தியிலும் எழுந்தது.

பொய்த்து போனது: அகில இந்திய மீடியாக்கள் எல்லாம் படுசுறுசுறுப்பாக கவரேஜ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது, நண்பகலுக்குமேல் தி.மு.க., வட்டாரங்களில் மட்டும் திடீரென தொய்வு தென்பட ஆரம்பித்தது. திகார் சிறைக்கு தி.மு.க., எம்.பி.,க்கள் அனைவரும் சென்று, ராஜாவை வரவேற்பர் என்ற எதிர்பார்ப்பு, நேரம் ஆக ஆக பொய்த்துப் போக ஆரம்பித்தது. மாலை 6 மணிக்கு திகார் சிறைக்குள் சென்ற ராஜா, தன் அறைக்கு கூட செல்லவில்லை. எல்லாவற்றையும் சிறை கண்காணிப்பாளர் அறையிலேயே வைத்து முடித்துக் கொண்டு, சரியாக இரவு 7 மணிக்கு சிறை வாசலுக்கு வந்தார். அப்போது அவரை வரவேற்க, தி.மு.க.,வின் பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு மட்டுமே சால்வையோடு நின்றிருந்தார். ஒரே ஒரு சால்வையை ராஜாவுக்கு போர்த்திய பாலு, "இது ஸ்டாலின் சார்பாகவும், எம்.பி.,க்கள் சார்பாகவும் போர்த்தப்படுகிறது' என்றார்.

ராஜாவுக்காக கட்டுக்கடங்காத கூட்டம் கோர்ட்டிலும், சிறையிலும், அதன் பிறகு வீட்டிலும் தென்பட்டாலும், எம்.பி.,க்கள் மட்டும் ஏன் வரவில்லை என விசாரித்த போது, "சென்னையில் இருந்து வந்த தகவலை அடுத்தே, அத்தனையும் மாறிப்போனது. எம்.பி.,க்கள் பலருக்கும் குழப்பம். திகார் செல்வதற்கு டி.ஆர்.பாலு சில எம்.பி.,க்களை அழைத்தும் கூட, இரவு வீட்டிற்கு வந்து பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டனர். இரவு வீட்டிற்கு சில எம்.பி.,க்கள் சென்று, ராஜாவை நலம் விசாரித்தனர். நெப்போலியனைத் தவிர பிற தி.மு.க., அமைச்சர்கள் யாரும், ராஜாவை இரவு வரை சந்திக்கவில்லை.

அடுத்தகட்ட பரபரப்பு: ராஜாவின் விடுதலை என்பது தி.மு.க.,வில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. எத்தனை கோஷ்டிகள் இருந்தாலும், கட்சித் தலைவரின் முழு ஆதரவையும் ராஜா எப்போதும் பெற்றிருப்பவர். எனவே, ராஜாவின் வருகையால், இதுவரை பார்த்திராத புதிய காட்சிகளும் கூட தி.மு.க.,வில் நிகழ்ந்தேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை: