செவ்வாய், 15 மே, 2012

சாமியார் சாமியார் தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன்


‘யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான்  இதற்குக் காரணம்’  என்று சொல்லும்    மனநல மருத்துவர் ருத்ரன், ‘இவர்களுக்கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது.  மெகா ஆசிரமம், அதிகார வட்டச் செல்வாக்கு,  சமூக சேவை என்ற போர்வை இவையே அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.
இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்… கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்… தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்… பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்… தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்… என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு.

தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும் அவர்களைத்   தனது பாலியல் இச்சைகளுக்குப்   பயன்படுத்தியது   மட்டுமல்லாமல், கொலை வரைக்கும்  போய் சிக்கிய பிரேமானந்தா, இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி உள்ளே  இருந்தார் . ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.
கல்கி சாமியார் பற்றி ஏராளமான புகார்கள். தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன் என்று பக்தர்களை வளைப்பதாகக் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது போன்ற வகுப்புகளை நடத்துவதால் சாமியார்களிடம் கோடிக் கணக்கான பணம் சேர்ந்துவிடுவது இல்லை. பணம் சேருவது பகீர் வழியாக இருக்கிறது.
தன்னைப்பற்றியும் தனது மடத்தைப்பற்றியும் கதைகளை முதலில் உருவாக்கிக்கொள்கிறார்கள்   இந்தச் சாமியார்கள். ஆன்மிகம் என்றால்   யாரும்    முதலில்   வரத் தயங்குவார்கள் என்பதால், சமூக சேவை, மருத்துவத் தொண்டு என்று காரணம் சொல்லி அதிகார மைய ஆட்களை அழைப்பார்கள். மடங்களுக்குள் வரும் தொழிலதிபர்களுக்கு இந்த அதிகார மைய ஆட்களுடன் சாதாரணமாக நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது.
பெரும்பாலான   வங்கிக் கடன்களை வாங்கித் தருவதும் பரிந்துரை செய்வதும் இந்தச் சாமியார்களே. முதலில் மடத்தின் வளர்ச்சிக்காக  நன்கொடைகள் தருபவர்களிடம் சில புரோக்கர்கள் மூலமாகப் பேரம் பேசப்படுகிறது. ‘உங்கள் பணத்தை சாமியிடம் கொடுத்துவைக்கலாம். உங்களுக்கு எப்போது தேவையோ, அப்ப தந்திருவார். சாமியே உங்களிடம் கேட்கச் சொன்னார்’ என்று சொல்லப்படும்.
சாமியிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக தொழிலதிபர்களும் பெரும் தொகைகளைக் கொடுத்துவைக்கிறார்கள். அறக்கட்டளைக்குப் பணம் கொடுத்தால், வருமான வரிவிலக்கு இருக்கும் என்பதால் பணம் குவிகிறது. சாமியார்களது எல்லைகள் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இருப்பதால், இங்கு இருந்து அங்கும், அங்கு இருந்து இங்கும் பணத்தை மாற்றிக்கொள்ள ஹவாலா வேலைகள் சாமியார்கள் மூலமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமானவர்கள் தங்களது லாக்கராக இந்த சாமியார்களைப் பயன்படுத்துகிறார்கள்.
‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.
பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல்    செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.
மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு – வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.
“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.
‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன்  விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.
அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.
இவர்கள் சமூகநலன் வேடம் போட்டு இருப்பதால் வருமான வரி, லஞ்ச ரெய்டுகள் மடங்களில் நடத்துவது சாத்தியம் இல்லாததாகவே ஆகிவிட்டது. தென் மாவட்ட மடம் ஒன்றில் தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டதும், இறந்துபோன சென்னைச் சாமியாரின் சொத்தை அவரது நண்பர் சுருட்டிக் கொண்டுபோய் தனித்தொழில் தொடங்கியதும் நாடு பார்த்த விஷயங்கள்தான். இப்படி இருண்ட பக்கங்களால் நிரம்பியிருக்கிறது சாமியார்கள் கதை.
‘தவறு சமயத்தில் இல்லை. இந்து மதப் புரோகிதர்கள் பலவிதமான கொடுங்கோல் இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில்தான் வம்பு பொதிந்துள்ளது’ என்றார் விவேகானந்தர். இவை குறித்துக் கண்காணிக்க இந்து சமய அறநிலையச் சட்டத்தில் இறுக்கமான சரத்துகள் இருக்கின்றன. சொத்தைத் தவறாகக் கையாண்டால் மடாதிபதியாகத் தொடர முடியாது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்பவராக அறியப்பட்டாலோ, தமக்குரிய கடமையைத் தவறி நெறிபிறழ்ந்தார் என்றாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், சாமியார்கள் விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வது இல்லை.
எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.
வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே  உயர்   ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.
மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தக் குழுவை கருணாநிதி தொடங்கினார்.மக்கள் ஆதரவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை
இப்படிப்பட்ட எண்ணங்களில் இருந்து மக்கள் விடுபட்டு சுயமாக சிந்திக்க வேண்டும். ‘அவரைப் பார்த்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு..’, ‘அவர் கண்ணுல தனி  தேஜஸ் தெரியுது’, ‘அவரோட புன்னகையிலகூட ஒரு மெஸேஜ் இருக்கு’ என்றெல்லாம் யாரோ சொல்வதை வைத்துக் கொண்டு, தாங்களும் செய்தி பரப்பிக் கொண்டிருக்காமல்.. ‘இவர் பார்வையே கொஞ்சம் திருட்டுத்தனமா இருக்கே..’, ‘வர்றவங்களையெல்லாம் இப்படி ஓவரா தொட்டுப் பேசறாரே.. இந்த நடவடிக்கை லேசா இடிக்குதே..’, என்று தங்கள் சுய சிந்தனைக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கதையாகாது!
தாங்கள் சொல்லி வரும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் போட்டுவரும் பிரம்மச்சரிய வேஷத்துக்கும் விரோதமாகச் செயல்படும் சாமியார்களிடம் ஜாக்கிரதையாக இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள்தான் பகுத்தறிவு பலம் பெற வேண்டும்!
இதுக்குமேல உங்க இஷ்டம் ….

கருத்துகள் இல்லை: