வியாழன், 17 மே, 2012

ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் உடைத்து விளை நிலங்கள் வெள்ளக்காடாக

கரு.முத்து,கு.ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தினந்தோறும் கனமழை பொழிந்த காலமெல்லாம் உண்டு. 1977, 1984, 1994 என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். ஆனால், அப்பொழுதெல்லாம் இந்த அளவுக்கு ஒரே நேரத்தில் எல்லா ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் உடைத்துக்கொண்டு, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்ததில்லை. விளை நிலங்கள் வெள்ளக்காடாக மாறியது இல்லை.
சமீபகாலமாகத்தான் இத்தனை பேரிழப்புகள்.
புயல்-மழைக்கு வழக்கமாக தங்கள் விளை நிலங்களை மட்டுமே பெரும்பாலும் பறிகொடுக்கும் விவசாயிகள், இந்த முறை தங்களின் வீடுகள், கால்நடைகள் என்று உடைமைகளையும், உயிர்களையும் இழந்தனர். முதல் நாள் வரை பாசத்தோடு பாசனத்துக்கு உதவிக் கொண்டிருந்த அத்தனை ஆறுகளும், சீறிக்கொண்டு விளைச் சலுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் பாய... செய்வதறி யாமல் திகைத்து நிற்கிறார்கள் மக்கள். இத்தகைய பேரழிவுக்குக் காரணம்... தூர் வாரும் பணியில் காட்டப்படும் மெத்தனம்... அதில் துள்ளி விளையாடும் ஊழல் ஆகியவைதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காரணம்...? "எப்படியெல்லாம் முறைகேடுகள் நடக்கின்றன... என்பதை பசுமை விகடன் பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதை யெல்லாம் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலே சேதத்தை பெரிய அளவுக்குக் குறைத்திருக்க முடியும்" என்று கோபக் குரலில் சுட்டிக் காட்டுகிறார்கள் விவசாயிகள்.
காவிரி டெல்டா பகுதியிலிருக்கும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள்தான் இந்த மழைக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராமநாத புரம், புதுக்கோட்டை சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பாதிப்புக்குக் குறைவில்லை. "ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டு... மறுசீரமைப்புப் பணிகள் நேர்மையாக நடைபெற்றிருந்தால், இந்தளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. தூர்வாருதல், புனரமைத்தல் என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கோடி கோடியாக அரசாங்கப் பணம் கொட்டப்படுகிறது. ஆனால், அவற்றில் 30% கூட உண்மையாகச் செலவு செய்யப்படுவதில்லை. செய்யாத வேலைகளுக்கு செலவுக் கணக்கு காட்டுவது... அரைகுறையாக தூர் வாருவது... என்று கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கூட்டுப் போட்டுக் கொள்ளை அடிப்பது தொடர்கதையாகிவிட்டது. இவர்கள் வெறும் கொள்ளையர்கள் மட்டுமல்ல, கொடூரக் கொலை குற்றவாளிகளும்கூட! இவர்கள் செய்யும் முறைகேடுகளால்தான் மழை வெள்ளத்தில் மனிதர்கள், கால்நடைகள் என்று உயிரிழப்பும் ஏற்படுகிறது. கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய பகல் கொள்ளையர்களிடமிருந்து விவசாயிகளையும், மக்களையும் பாதுகாக்க, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்" என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார் பாரதிய கிசான் சங்க மாநில பொதுச்செயலாளர் அய்யாக்கண்ணு.
அதற்கு ஆதாரங்களாக அவர் காட்டுவது இதைத்தான்-
"கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சியின் வெள்ளத்தடுப்புப் பணிக்காக 50 கோடி ரூபாய், 1,000 கோடி ரூபாய், 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. உடைப்பு ஏற்படுகிற பகுதிகளை பலப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. அறிவிக்கப்பட்ட தொகையில் வெறும் 5% தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது வெள்ளத் தடுப்பு பணியில் நடைபெறும் ஊழல். தூர்வாரும் பணியிலும் ஊழல்கள் நடக்கின்றன.
ஒரு திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையில் 20% ஆளும்கட்சிப் புள்ளிகளுக்கு கமிஷனாகக் கொடுக்கப்படுகிறது. மேல்மட்ட அதிகாரிகளுக்கு 20% கீழ்மட்ட அதிகாரிகளுக்கு 10% மீதித் தொகையில் 20% கான்ட்ராக்டரின் லாபத் தொகையாக எடுக்கப்படுகிறது. 5% தொகை 'மனநிறைவு' என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டு, பணிகள் முடிந்த பிறகு கான்ட்ராக்டரிடம் திருப்பித் தரப்படுகிறது. வருமானவரி உள்ளிட்டவற்றுக்கு 10% போய்விடுகிறது. எஞ்சியிருக்கும் 15% சொற்பத் தொகை மட்டுமே திட்டமிடப்பட்ட பணிக்காகச் செலவிடப்படுகிறது. சிறியதோ... பெரியதோ... எந்த வேலையாக இருந்தாலும் இந்த வகையில்தான் பணம் பங்கு போடப்படுகிறது.
உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் எங்கள் பகுதியில் ஒரு வாய்க்காலை தூர்வார, 40 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. டயர் ஜே.சி.பி. இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 600 ரூபாய்தான் வாடகை. 300 மணிநேரம்தான் வேலை நடந்தது. அதாவது, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான் செலவு செய்தார்கள். மீதிப்பணம் முழுவதையுமே சுருட்டிக் கொண் டார்கள். இந்த ஊழல்கள் எல்லாம் வெளிப் படையாகவே தெரிகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொள்கிறார்கள். கொஞ்சம்கூட குற்ற வுணர்ச்சியே அவர்களிடம் இல்லை. ஊழல் செய்து... ஊழல் செய்து... அவர்களுக்கு எல்லாமே மரத்துப் போய்விட்டது" எனக் கடுமையாகச் சாடினார் அய்யாக்கண்ணு.
'தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரண நிதி, யானைப் பசிக்கு சோளப்பொறி' என்ற கருத்து டெல்டா முழுக்கவே எதிரொலிக்கிறது. இதைப் பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் படபடத்துத் தள்ளுகிறார்.
"இந்த வெள்ளமே அரசாங்கங்கள் தொடர்ந்து செய்துவரும் தவறுகள் காரணமாக ஏற்பட்ட ஒன்று. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கட்டுக்கடங்காமல் வந்து டெல்டாவை மூழ்கடித்து விடவில்லை. இங்கே டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆறு நாள் பெய்த மழைத் தண்ணீர், வடிவதற்கு வழியில்லாமல் போனதுதான் பிரச்னையே! இந்த மழைக்கு ஒரு வாரம் முன்புகூட, 'காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை... கூடுதல் தண்ணீர் தேவை' என்று போராட்டங்கள் நடத்தினார்கள் விவசாயிகள். அதே இடத்தில் இப்போது தண்ணீர் வெள்ள மாகத் தேங்கியிருக்கிறது என்றால்... அரசு நிர்வாகம் முற்றிலுமாகத் தோல்வி அடைந்துவிட்டதென்றுதானே அர்த்தம்?" என்று கிடுக்கிப்பிடிக் கேள்வியைப் போட்டவர்,
"1,963 கோடி ரூபாய் தமிழ்நாட்டின் சேத மதிப்பாக கணக்கிடப்பட்டு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டிருப்பதாக முதல்வர் சொல்லி யிருக்கிறார். இதில் சாலைகளுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய்க்கு மேலும்... அரசு கட்டடங்கள், மற்ற சேதங்களுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேலும் கணக்குச் சொல்லப்பட்டிருக் கிறது. ஆனால், விவசாயிகளின் நிலங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்கு வெறும் 186 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல்வரே சொல்லியிருக் கிறார். அதன்படி பார்த்தால், ஒரு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய் (ஏக்கருக்கு 3,000 ரூபாய்) வீதம் 600 கோடி ரூபாய் வருகிறது. ஆனால், இப்போதைக்கு ஒட்டுமொத்த வெள்ள நிவாரணத்துக்கும் 600 கோடி ரூபாய்தான் ஒதுக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசிடம் கோரும் பணத்தில் 90% தொகையைச் சாலைகள், அரசாங்க கட்டடங்கள், ஏரிகள், ஆறுகள் சீரமைப்பதற்காக ஒதுக்குகிறார்கள். இதற்கெல்லாம் ஒதுக்கினால், ஆளுங் கட்சியினருக்கு கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் கிடைக்கும். ஆனால், விவசாயிகள் கமிஷன் கொடுக்க மாட்டார்களே?" என்று குற்றம் சாட்டியவர்,
"2004-05-ம் ஆண்டு, ஒரு ஹெக்டேருக்கு 7,500 ரூபாய் இழப்பீடாக வழங்கியிருக்கிறார்கள். 2006-07-ம் ஆண்டில் இந்த அரசே அதை பின்பற்றி வழங்கியிருக்கிறது. இப்போதும் அதே தொகையை அறிவித்துள்ளனர். டீசல், உரம் என்று எல்லாவற்றின் விலையும் தற்போது உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் விவசாயச் செலவுகள் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையிலும் பழையபடி குறைந்தத் தொகையை இழப்பீடாகத் தருவது என்ன நியாயம்? அதனால்தான் ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் தரவேன்டும் என்கிறோம். இதைச் சொன்னால்... மக்களைப் போராடத் தூண்டிவிடுகிறோம் என்று பழிபோடுகிறார் முதல்வர். தன்னுடைய ஒரே வாழ்வாதாரமான விவசாயம் வீணாகி விட்டதால், வேறு வழியில்லாமல் அரசை எதிர்நோக்கி கை ஏந்துகிறான்... குரலுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால் வீதிக்கு வருகிறான். இதற்குக் கூடவா அவர்களைத் தூண்டிவிட வேண்டும்?" என்று கோபாவேசமாக பேசி முடித்தார் பாலகிருஷ்ணன்.
இந்நிலையில், காவிரி டெல்டாவில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை பார்வையிட நவம்பர் 28-ம் தேதியன்று தஞ்சாவூருக்கு வந்த பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், "5,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி டெல்டா பாசனப்பகுதி நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் தொடங்கப் படும்" என அறிவிக்க... "ம்... அடுத்தக் கட்டமா கொள்ளையடிக்க திட்டம் போட்டுட்டாங்க..." என்று விவசாயிகள் உறும ஆரம்பித்துள்ளனர்.
"இது மிகப்பெரிய அளவிலான கொள்ளைத் திட்டம்" என்று கடுமையாகச் சாடும் தமிழக உழவர் முன்னணியின் பொதுச்செயலாளர் காசிநாதன், "ஏற்கெனவே உய்யக்கொண்டான் கால்வாய் கரைகளை பலப்படுத்த 215 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கல்லணை கால்வாயை செப்பனிட 146 கோடி ரூபாயை நபார்டு வங்கியில் இருந்து பெற்றார்கள். அந்த வேலைகளே இன்னமும் தொடங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணிக்காக சுமார் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதில் சுமார் 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுகிறது. இதற்கே இவ்வளவு ஊழல் என்றால் மிகப்பெரும் தொகையான 5,100 கோடி ரூபாயில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆயிரம் கோடி ரூபாயைக்கூட செலவு செய்யமாட் டார்கள்.
தமிழக அரசின் நீர்வளத்துறை ஆலோசகர் மோகனகிருஷ்ணன் ஆலோசனையின்படி அமைக்கப்பட்ட குழுதான் ஆய்வு செய்து இந்தத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் குழுவில் விவசாயிகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளிட மாவது கருத்து கேட்டிருக்க வேண்டும் எதுவும் இல்லை.." என கொந்தளிக்கிறார்.
"காவிரி டெல்டாவில் உள்ள குளங்களை சீரமைக்க மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்தப் பணம் எங்கே போனது?" என கேள்வி எழுப்பும் தமிழ்நாடு விவசாயச் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார்.
'நீர்-நிலைகளில் நடைபெறும் தூர்வாருதல் மற்றும் சீரமைப்புப் பணிகளை கண்காணிப்பதற்கு, விவசாயிகளை உள்ளடக்கிய அதிகாரம் படைத்த ஒரு குழுவை அமைக்கவேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
காவிரி டெல்டாவில் 36 ஆறுகள் ஓடுகின்றன. 24 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு 28,500 வாய்க்கால்கள் உள்ளன. இவைகளின் செயல்பாடு, மனித உடலின் நரம்பு மண்டலம் போல மிகவும் முக்கியமானது. பல்வேறு காரணங்களால் இவை களின் ஓட்டம் தடைப்பட்டு போனதால்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கமே தடைப்பட்டுப் போயிருக்கிறது. இன்னமும் பல ஊர்களில் வெள்ள நீர் வடியவே இல்லை.
தூர்வாரும் திட்டங்களை அறிவித்த சூட்டோடு, 'நவீன கரிகால்சோழன்...', 'தூர்வாரிய தூயவன்' என உடன்பிறப்புகளின் புகழாரங்களைக் கேட்டு குளிர்ந்து போய்விடும் முதல்வர் கருணாநிதி, அந்தப் பணிகள் சரிவர நடக்காததால் இன்றைக்கு வெள்ளத்துக்கு இரையாகி, கொந்தளித்துக் கிடக்கும் விவசாயிகளின் உள்ளக் குமுறலை காது கொடுத்து கேட்க முன்வர வேண்டும். ஊழல் செய்வதன் மூலம் உழவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கயவர்களைத் தண்டிக்க, தடியெடுக்க வேண்டும்.
அதைவிடுத்து, ஒவ்வொரு முறையும் நிவாரணம் கொடுத்தே காலத்தை ஓட்டிவிட நினைத்தால்... ஒரு கட்டத்தில் அதை வாங்கிக் கொள்ள கூட ஆள் இல்லை என்கிற அளவுக்கு பேரழிவு ஏற்பட்டுவிடும்!
பதற வைத்த பயிர்க் காப்பீடு!
வங்கிகளில் பயிர்க் கடன் பெறாத விவசாயிகளுக்கு டிசம்பர் 15-ம் தேதியும்... கடன் பெற்றவர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதியும் பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் மாதத்தில் கடன் வழங்குவதிலேயே பெரும்பாலும் கவனம் செலுத்திய வங்கிகள், பயிர்க் காப்பீடு செய்ய வந்த விவசாயிகளை, 'பிறகு வாருங்கள்' என்று அனுப்பி வைத்து விட்டது. இதனால், 90% விவசாயிகள் காப்பீடு செய்யாமலே இருந்தனர். பெருமழை காரணமாக பயிர்கள் வீணாகிவிட்ட சூழலில்... நவம்பர் 29-ம் தேதியன்று 'கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும், பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள்' என்று திடுதிப்பென ஒரு அறிவிப்பை வெளியிட்டது காப்பீட்டு நிறுவனம். கொதித்தெழுந்த விவசாயிகள், ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கினார்கள். இதையடுத்து, டிசம்பர் மூன்றாம் தேதியன்று... காப்பீட்டு நிறுவன மேலாளர், வேளாண் துறை அமைச்சர் கே.என். நேரு, பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன், வேளாண் துறை செயலர் சுர்ஜித் கே. சவுத்ரி மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நடந்தது. அதன் முடிவில், டிசம்பர் 15-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஏக்கருக்கு 95 ரூபாய் என்பதாக இருந்த பிரிமியத் தொகை, 235 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெருவிவசாயிகள் 261 ரூபாய் செலுத்தவேண்டும்.
"ஏக்கருக்கு 15 ஆயிரம் வேண்டும்"
'ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 குவிண்டால் நெல் விளைந்தாலே 20,000 ரூபாய் கிடைக்கும். அப்படியிருக்கும்போது ஏக்கருக்கு வெறும் மூன்றாயிரம் என்பது ஒரு இழப்பீடே அல்ல! நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்Õ என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே போகிறது. இதை வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதியன்று டெல்டா மாவட்டங் களில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
டிசம்பர் 4-ம் தேதியன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கச் செயற்குழுவின் முடிவில், 'நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். 1 ஏக்கர் நெல் பயிருக்கு 15 ஆயிரம், ஒரு ஏக்கர் கரும்பு மற்றும் வாழைக்கு 20 ஆயிரம், ஒரு ஏக்கர் தென்னைக்கு 2 ஆயிரம், ஒரு கால்நடைக்கு 10 ஆயிரம், ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் என இழப்பீடு வழங்கவேண்டும். கூட்டுறவு மற்றும் வணிக வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்வதோடு, நிலவரியும் ரத்து செய்யப்படவேண்டும்Õ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
thanks vikatan + rajaraman velur

கருத்துகள் இல்லை: