வியாழன், 17 மே, 2012

வீரபாண்டியாரின் பூலாவரி வீட்டில் ரெயிடு

தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பூலாவரி வீட்டுக்குள் இந்த நிமிடத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பொருட்களை தலைகீழாகப் புரட்டித் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். வருமானத்தை விட சொத்துச் சேர்த்த விவகாரம் இது.
கடந்த தி.மு.க. ஆட்சியில், ஆள் அம்பு சேனை சகிதம் மகா செல்வாக்காக இருந்த வீரபாண்டியார், வருமானத்தை மீறி சொத்து சேர்த்த காலம் போய், சமீபகாலமாக, அவமானத்தையே வருமானமாக பெற்றுக் கொண்டு உள்ளார். இந்த நிலையில்தான், அவர் வீட்டுக்குள் இன்று அதிகாலை பாய்ந்துள்ளது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டீம் ஒன்று.

ஆட்சிகாலத்தில் வேளாண்துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டியாரின் ராசி, சொத்து விவகாரங்களில்தான் அதிகம் சிக்கல் வருவது வழக்கம். அண்ணன், இன்று நேற்றல்ல, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்தே மண் மீட்பு விவகாரங்களில் சிக்கல்களை சந்திப்பவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே சுகுமாரன் என்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தில்கூட, நம்ம வீ.ஆ.-வின் பெயர் பலமாக அடிபட்டது. அதுகூட சொத்து விவகாரம்தான்.
தி.மு.க. ஆட்சி வரும்போதெல்லாம் (உதய) சூரியனைக் கண்ட பனித்துளி போல வீரபாண்டியார் மீதுள்ள கேஸ்கள் காணாமல் போய்விடுவது வழக்கம். தி.மு.க. ஆட்சி போய்விட்டால். அண்ணனும் காவல் நிலையத்துக்கு போக தயாராகி விடுவார். இம்முறை அ.தி.மு.க. ஆட்சி வந்தபோது, நில அபகரிப்பு விவகாரத்தில் சிறை புகுந்த செம்மலாகி, சமீபத்தில்தான் வெளியே வந்திருந்தார்.
விடுதலையாகி அல்ல, ஜாமீனில்தான் தற்போது வெளியே இருக்கிறார்.
இன்று அதிகாலையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டீம் ஒன்று, வீரபாண்டியாரின் சேலம் பூலாவரி வீட்டிற்கு வந்து, தற்போது சோதனையில் ஈடுபட்டபடி உள்ளனர்.
“வீட்டுக்கு வெளியே, வீரபாண்டியாருக்காக உயிரையும் கொடுக்கும் அர்ப்பணிப்புடன் உடன்பிறப்புகள் குழுமியுள்ளனர்” என்று எழுதினால், கப்சா விடுகிறோம் என்பீர்கள். உண்மையில், வீட்டுக்கு வெளியே சில கட்சிக்காரர்கள் கூடிநின்று பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.
வீட்டுக்குள் ஏதோ ஆவணங்கள் சிக்கியதாக, வெளியே நிற்கும் அவர்கள்தான் பேசிக்கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: