வியாழன், 26 ஏப்ரல், 2012

ஒடிசாவில் கடத்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இன்று விடுதலை: உடனே பதவி விலகும்படி நிபந்தனை

புவனேஸ்வர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா இன்று விடுவிக்கப்படுகிறார். விடுவிக்கப்பட்டதும், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா. இவர் கடந்த மாதம் 24ம் தேதி, கோராபுட் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டும் எனில், சிறையில் உள்ள, 29 பேரை ஒடிசா அரசு விடுதலை செய்ய வேண்டும் என, நிபந்தனை விதித்தனர்.
அத்துடன் வேறு சில நிபந்தனைகளையும் முன்வைத்தனர். அவர்களின் நிபந்தனைகளைப் பரிசீலித்த ஒடிசா மாநில அரசு, மாவோயிஸ்ட்கள் எட்டு பேர் உட்பட, 25 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்தது. மேலும், 25 பேரில், மாவோயிஸ்ட்கள் 5 பேர் உட்பட 13 பேருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்று விடுவிக்கவும், மற்ற 12 பேரை ஜாமினில் விடுவிக்கவும் சம்மதம் தெரிவித்தது.

மக்கள் கோர்ட்: இருந்தாலும், ஜினா ஹிகாகாவை மாவோயிஸ்ட்கள் விடுதலை செய்யவில்லை. "தங்கள் அமைப்பின் "மக்கள் கோர்ட்' டில் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா ஆஜர்ப்படுத்தப்படுவார். அப்போது அவரின் கதி என்னவென்று முடிவு செய்யப்படும்' என, கடந்த 20ம் தேதி அறிவித்திருந்தனர். அதேநேரத்தில், மத்தியஸ்தர்கள் மூலமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மறுத்து விட்டனர்.

இன்று விடுதலை: இந்த சூழ்நிலையில், கோராபுட்டைச் சேர்ந்த மாவோயிஸ்ட்களின் வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் கூறியதாவது: மாவோயிஸ்ட்களின், "மக்கள் கோர்ட்' கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகாவை, இன்று விடுவிப்பது என்றும், கோராபுட் மாவட்டம், நாராயண்புரா பகுதியில் உள்ள பாலிபெடா பகுதியில், காலை 10 மணிக்கு அவரை, ஒப்படைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,வின் மனைவி கவுசல்யா மாஜ்ஹி மற்றும் என் முன்னிலையில் அவர் விடுவிக்கப்படுவார். மாவோயிஸ்ட்கள் இதுதொடர்பாக விரைவில் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிடுவர். மாவோயிஸ்ட் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, இந்தத் தகவலை தெரிவித்தார். "மக்கள் கோர்ட்' விசாரணையின் போது, "மாவோயிஸ்ட்கள் பிடியில் தான் இருந்த போது, மாநில அரசோ அல்லது மற்ற எம்.எல்.ஏ.,க்களோ உதவ முன்வரவில்லை. மலைவாழ் பழங்குடியினர் மட்டுமே, என்னை மீட்க முயற்சி மேற்கொண்டனர். விடுவிக்கப்பட்டவுடன், மாவோயிஸ்ட்களின் கோரிக்கை நிறைவேற பாடுபடுவேன். அது நடக்கவில்லை எனில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்' என்றும் ஹிகாகா கூறியுள்ளார். இவ்வாறு பட்நாயக் கூறினார்.

ஜினாவுக்கு நிபந்தனை: அதேநேரத்தில், மற்ற சில தரப்பில் இதுபற்றி கூறுகையில், "மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற தவறிய, ஜினா ஹிகாகா பதவி விலக வேண்டும். விடுவிக்கப்பட்ட உடன், அவர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: