சனி, 4 பிப்ரவரி, 2012

திமுக : யாரும் தோற்கடிக்கவில்லை நாமாக தோற்றோம்

சென்னை: திமுக பொதுக்குழு நேற்று சென்னையில் கூடியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
திமுக ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்து, பெற்றிருந்த அரசை இழந்து விட்டு மேலும் நம்முடைய தமிழ் உணர்வையும், தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பண்பாட்டையும் இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தின்பாற்பட்டு இயங்குகின்ற இந்தக் கால கட்டத்திலும் இது பொதுக் குழு அல்ல, பொது மாநாடு என்று சொல்கின்ற அளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு  குழுமியிருக்கிறீர்கள்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நீங்கள் காட்டுகின்ற ஆர்வமும், விறுவிறுப்பும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது சோர்வுற்ற நிலையில் சந்திக்காமல், அந்தச் சந்திப்பு அஞ்சாதே, அடுத்து நாம் தான் என்று சொல்கின்ற அளவிற்கு அமைந்திருப்பதை சென்னையில் மாத்திரமல்ல, நான் சென்று வருகின்ற சுற்றுப் பயணத்தில் கூட உணர்ந்திருக்கிறேன்.
மாற்றார் மலைக்கத் தக்க அளவிற்கு திமுக வளர்ச்சி இருந்து வருகின் றது. தேர்தலை வைத்துக் கணக்கிட்டு ஒரு கட்சியை எடை போட முடியாது. ஒரு கட்சியின் பலம் இந்தக் கட்சியைக் காப்பாற்ற எத்தனை பேர் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்கின்ற அந்தத் தீரர்களுடைய கணக்கை வைத்துத் தான் ஒரு கட்சியின் பலத்தை நாம் நிர்ணயிக்க முடியும். கழகத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. இப்போது தேர்தலில் தோற்றோம். ஒத்துக் கொள்கிறேன். வெட்கப்படாமல் ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால், நாமாகத் தோற்றோம்.
நம்மை யாரும் தோற்கடித்து விடவில்லை. நாமாகத் தான் தோற்றோம். நாமாகப் பெற்றுக் கொண்ட தோல்வியை நாமே தான் சரி செய்ய வேண்டும். அப்படி சரி செய்வதற்கான யோசனை களை இந்தப் பொதுக்குழுவிலே நீங்கள் வழங்குவீர்கள். தேர்தலிலே போட்டி யிட்டு வெற்றி பெறுவது மாத்திரம் இந்த இயக்கத்தின் நோக்கம் அல்ல.
 பெரியார் தேர்தலே வேண்டாம் என்றார். தேர்தலில் வெற்றி பெற்று பதவிச் சுகத்தை அனுபவித் தால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது, மக்களுடைய அறிவை வளர்த்திட முடியாது, எனவே தேர்தலை புறந்தள்ளி, திராவிட இயக்கத்திற்கு, திராவிட மக்களுக்கு பணி செய்வோம் என்று பெரியார் அழைத் தார். அந்த அழைப்பை உதாசீனப்படுத்தாமல் அண்ணா தன்னையும் அதற்கேற்ப தயார் படுத்திக் கொண்டார், நம்மை அவ்வழியிலே தயார்படுத்தி உருவாக்கியது தான் திமுக.
1967ம் ஆண்டு அண்ணா, நான், பேராசிரியர், நெடுஞ்செழியன், என்.வி.நடராசன் போன்றவர்கள் எல்லாம் அண்ணா இல்லத்திலே அமர்ந்திருந்த போது தேர்தல் முடிவுகள் வெளியாயின. 100 பேர் வெற்றி பெற்றோம் என்கிற நிலையில் அண்ணாவின் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. 101, 102, 103 என்று எண்ணிக்கை மளமளவென்று ஏற ஏற அண்ணா முகம் வாடிப்போயிற்று.
பக்கத்தில் இருந்த மறைந்த என்.வி.நடராசன், என்ன அண்ணா? நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நீங்கள் இப்படி வாட்டமாக இருக்கிறீர்களே? என்று கேட்டபோது, அண்ணா சொன் னார் 100 இடங்களுக்கு மேல் வந்ததற்காக வருத்தப்படுகிறேன்.
அதனால் தான் வாட்டமாக இருக்கிறேன் என்றார். ஏன்? என்று கேட்டபோது, இப்பொழுது இந்த நேரத்தில் கழகத்திற்கு 100 இடங்கள் வந்தால், அந்த 100 பேரை வைத்துக் கொண்டு ஒரு பெரிய எதிர்க்கட்சியாக விளங்கியிருக்க முடியும். ஆளுங்கட்சியாக ஆகி விட்டால் அது தான் கழகத்தின் வீழ்ச்சிக்கு முதற்கட்டமாக ஆகிவிடும், எனவே தான் வருத்தப்படுகிறேன் என்று அண்ணா சொன்னார்.
அண்ணாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு இந்த இயக்கத்தை மேலும் மேலும் வளர்க்க நாடு, மொழி, இனம், கலை, நாகரீகம், பண்பாடு, திராவிட என்கிற இந்த உணர்வு  இவைகளை யெல்லாம் வளர்க்க உறுதியெடுத்துக் கொண்டு உழைத்த காரணத்தால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகும் நாம் தலை தூக்கி நிற்க முடிகிறது என்றால் 100 பேர் என்று அந்த எண்ணிக்கையைத் தாண்டிய போது அண்ணா வருத்தப்பட்டாரே, எதற்காக வருத்தப்பட்டார் என்பதை எண்ணிப் பார்த்துத் தான் வெற்றி நம்மை வீழ்த்தி விடும்,
வெற்றிக்குப் பிறகு வீழ்ச்சி என்றாகி விடும், ஆகவே நாம் நிலை தவறாமல், நிதானமாக நம்முடைய கொள்கைகளிலே பற்றுக் கொண்டு, நம்முடைய லட்சியத்திலே விசுவாசம் வைத்து, எதற்காக பெரியார், அண்ணா இந்த இயக்கத்தைக் கண்டார்களோ அந்தத் திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்திட  தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உறுதியின் காரணமாகத் தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சிக்குப் பிறகும் நாம் தலை தூக்கி நிற்க முடிகிறது.
ஆகவே கழகத்தை மேலும் வளர்க்க ஆக்கப் பூர்வமான யோசனை களை இந்தப் பொதுக் குழுவிலே நீங்கள் எடுத்து வைக்க வேண்டும். அந்த யோசனைகளையெல்லாம் நானும், பேராசிரியரும் சிந்தித்துப் பார்த்து என்ன செய்ய வேண்டும், எப்படி, கழகத்தை மேலும் மேலும் வளர்க்க வேண்டும், நம்முடைய எண்ணங்கள், நம்முடைய கருத்துக்கள் சாதாரண பொது மக்களுடைய காதுகளில் சென்றடைவதற்கு என்ன மாற்றம், என்ன வழி என்பதையெல்லாம் கண்டறிந்து செயல்பட இந்தப் பொதுக்குழுவில் இன்று காலையும், பிற்பகலும் நீங்கள் உங்களுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும். அது திமுகவுக்கும்,எனக்கும் இன்னும் கழகத்தை வளர்ப்பதற்கான உரமாக, எருவாக அமையும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை: