சனி, 4 பிப்ரவரி, 2012

கலைஞர்: மதச்சார்பற்ற முற்போக்கு கட்சியோடுதான் கூட்டணி!

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வோம் என கருணாநிதி கூறினார்.
பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை எழுந்ததா? கலைஞர்
அடுத்த தலைவர் யார் என்பது பற்றிய சர்ச்சை எதுவும் எழவில்லை. இப்போது தலைவர் தேர்தல் நடக்கவும் இல்லை. திமுக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதை தொடர்ந்து கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்ட கழக தேர்தல்கள் நடந்து, அந்த அமைப்புகளில் இருந்து வரும் பிரதிநிதிகள்தான் பொதுச் செயலாளர், தலைவர் தேர்தலில் வாக்களித்து தேர்தல் நடக்க வேண்டும். இதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகலாம்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அடுத்து என்ன செய்வீர்கள்?

திமுக அமைப்புகளுக்கு தீர்மானங்களை அனுப்பி பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பற்றி பேசப்பட்டதா?

தேர்தல் கூட்டணி பற்றி யாரும் பேசவில்லை.

காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்று யாரும் கூறினார்களா?

காங்கிரஸ் நம் கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்ற தவறிவிட்டது. இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிட்டது. தமிழக மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு தர தவறிவிட்டது. இன்னும் தமிழ்நாட்டுக்கு தேவையான பலவற்றை மத்திய அரசு செய்ய தவறிவிட்டது. அந்த மத்திய அரசு காங்கிரஸ் தலைமையில் இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி உறவு வைக்க வேண்டுமா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பினர் அவர்களுக்கு நான் விளக்கம் அளித்தேன்.

வரும் தேர்தலில் 'மத சார்பற்ற முற்போக்கு கட்சியை'த்தான் ஆதரிக்க வேண்டும். அதை மனதில் வைத்து முடிவு செய்யுங்கள் என்றேன்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் போது திமுக அரசியல் குழு கலந்து பேசி கூட்டணி முடிவை அறிவிக்கும்," என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை: