ஞாயிறு, 29 ஜனவரி, 2012

A.P.J.Abdul kalam :தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.


மும்மொழித் திட்ட அறிமுக நிகழ்ச்சியில், ஒரு சிங்கள மாணவி, அருமையான தமிழில் பேசினாள், ஒரு தமிழ் மாணவி நன்கு சிங்களத்தில் பேசினாள், ஒரு முஸ்லிம் மாணவி, அருமையான தமிழிலும், சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பேசினாள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது
மொழி மதங்களை ஒன்றிணைக்கிறது
மொழி நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது

இலங்கையின் அழைப்பை ஏற்று, ஜனவரி 20-24, 2012ல், அங்கு மும்மொழித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வைபவத்தில், நானும் என் குழுவினரும் கலந்து கொண்டோம். இலங்கையில் இதுவரை நடந்த, நடந்து வரும் அனைத்து சம்பவங்களையும், போர்க் கால சம்பவங்களையும் பற்றி, நான் கனத்த இதயத்தோடு அறிவேன். போருக்கு பின்னால், அங்கு வாழும் இலங்கை தமிழ் மக்களைச் சென்று பார்த்து, கலந்துரையாடி, அங்குள்ள நிலைமை என்ன என்று அறிந்து வர வேண்டுமென, வெகுநாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
எனவே, எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, இலங்கைக்கு சென்று வந்தேன்.

இலங்கை தமிழர் பிரச்னையில், நான் இரண்டு விதமாக பங்கெடுக்க முடியும். ஒன்று, இந்தியாவில் இருந்து கொண்டே அறிக்கை விடுவது, பத்திரிகைகளில் எழுதுவது, பகைமையை வளர்க்கும் விதத்தில், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது என்பது ஒரு வகை. இரண்டு, இலங்கைக்கு சென்று, அங்குள்ள சூழ்நிலைகளை நேரில் அறிந்து, அங்கு போரினால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து, உரையாடி, இப்போது இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்கத்தையும் கலந்தாலோசித்து, பேச வேண்டிய விதத்தில், பேசவேண்டிய இடத்தில் பேசி, இந்தப் பிரச்னைக்குரிய தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பது இரண்டாவது வகை. நான் தெரிந்தெடுத்த வழிமுறை, இரண்டாம் வகையிலானது. இலங்கையின் மும்மொழித் திட்டத்தின் தொடக்க விழா அழைப்பை, அதற்கு பயன்படுத்திக் கொண்டேன். இலங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தேன். அங்கு, தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தேன். இளைஞர்களையும், அனுபவசாலிகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் மற்றும் அரசியல் தலைவர்களையும், பெருமக்களையும், இலங்கை அரசாங்க அமைச்சர்களையும், அதிகாரிகளையும், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து உரையாடினேன். அவர்களது கருத்துக்களை அறிந்து கொண்டேன். அங்கு சிறப்பாக செயல்படும் சர்வோதயா திட்டத்தின் மூலம், எப்படி வட கிழக்கு மாநிலங்களில், பல்வேறு உதவிகள் சென்றடைகிறது என்பதையும் அறிந்தேன்.

கொழும்புவில் மட்டும், 7 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினேன். மாணவர்கள் பல கேள்விகள் கேட்டார்கள், அவர்களிடமும் நான் பல கேள்விகளை கேட்டு, பல விஷயங்களை அறிந்து கொண்டேன். இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்பது தான், எனது பயணத்தின் நோக்கமாகும். அந்த பாதையில், மும்மொழித் திட்டம் முதல் முயற்சி என்பதால், அதை நாம் வரவேற்க வேண்டும். நம்பிக்கையின்மையால், யாருக்கும் நல்ல பயன் கிடைக்கப் போவதில்லை.
மும்மொழித் திட்ட அறிமுக நிகழ்ச்சியில், ஒரு சிங்கள மாணவி, அருமையான தமிழில் பேசினாள், ஒரு தமிழ் மாணவி நன்கு சிங்களத்தில் பேசினாள், ஒரு முஸ்லிம் மாணவி, அருமையான தமிழிலும், சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் பேசினாள்.
மொழி மனங்களை ஒன்றிணைக்கிறது
மொழி சமுதாயங்களை ஒன்றிணைக்கிறது
மொழி மதங்களை ஒன்றிணைக்கிறது
மொழி நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது
எனவே, அப்படிப்பட்ட ஒரு நிலைமை தோன்ற வேண்டுமென்றால், மும்மொழியையும், அனைவரும் வேறுபாடின்றி ஓர் உன்னத நோக்கத்தோடு மனம் ஒன்றுபட்டு பயின்றால், வேறுபாடு மறையும், கலாசாரம் சிறக்கும்; மொழியின் மூலம், வரலாறு சிறக்கும்; ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள உதவும் ஆட்சிமுறை, அனைவருக்கும் சென்றடையும் என்று நம்புவோமாக. எனவே, இந்தியாவின் சார்பாக, அந்த மும்மொழித் திட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றியது ஒரு வாய்ப்பாகும்.


இலங்கையில் பல்வேறு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்த ஒரு சமூக அமைப்பை, ஒரு நாட்டை வடிவமைக்கும் போது, வளர்ச்சித் திட்டங்கள் எவ்வித வேறுபாடும் இன்றி, அனைத்து சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும். ஒரு மேன்மை தாங்கிய (Noble) நாட்டை உருவாக்க வேண்டுமென்றால், வேற்றுமையில் ஒற்றுமை காணவும், வேற்றுமையை போற்றும் தன்மையைப் பெறவும், அது மட்டுமல்ல, பல்வேறு இனங்களை, மொழிகளைக் கொண்ட மக்கள், அவர்களது கருத்துக்களையும், கலாசாரத்தையும், நம்பிக்கையையும், வாழ்க்கை முறையையும், சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய ஜனநாயக நாடாக, இலங்கை மாற்றப்பட வேண்டும். அப்போது தான் அது, வேறுபாடற்ற ஒருங்கிணைந்த, மேடு பள்ளமற்ற, ஒரு சமதர்ம சமுதாயம் அமையப் பெற்ற ஜனநாயக நாடாக மலரும் என்ற என் கருத்தை, இலங்கை குடிமக்கள் முதல் ஜனாதிபதி வரை, அதுமட்டுமல்ல, பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த மும்மொழி திட்ட துவக்க விழாவில் தீர்க்கமாக எடுத்துரைத்தேன். எனவே, இப்படிப்பட்ட ஒரு நாட்டை உருவாக்க, இலங்கை பிரச்னை ஏற்படுத்திய அதன் அடிப்படை காரண காரியங்களை அறிந்து, அவற்றை அரசியல் சட்டத்தின் வழியில் ஜனநாயக அமைப்பின் மூலம் சரிசெய்ய வேண்டியது தான், இலங்கையின் தலையாய கடமை என்பதை வலியுறுத்தினேன்.
அது மட்டுமல்ல, 40 ஆயிரம் கிராமங்களைக் கொண்ட இலங்கை கிராமப்புரத்தின் நீடித்த மேம்பட்ட வளர்ச்சிக்கு, 160 PURA Clusters அதாவது, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்தல் என்ற திட்டத்தின்படி, இந்தியாவின் உதவியுடன் செயல்படுத்த ஆலோசனை வழங்கினேன். ஜனவரி 21, 2012ம் ஆண்டு, இரவு, இலங்கை ஜனாதிபதியை சந்தித்த போது, இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன். அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவை தெரிவித்து விட்டு, இலங்கையின் 13வது அரசியல்


சாசன திருத்த சட்டத்தினை மேம்படுத்தி, 13+ என்ற அரசியல் சட்ட திருத்தத்தை விரைவில் இலங்கையில் அமல்படுத்த, இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன். அதாவது, இலங்கையில் உள்ள எல்லா புராவின்ஸ்களையும், அதாவது, வடகிழக்கு, தெற்கு, மத்திய, மேற்கத்திய புராவின்ஸ்களையும் மற்ற புராவின்ஸ்களையும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாநிலங்களாக ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இரண்டாவது, இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னை பற்றி, இலங்கை ஜனாதிபதியிடம் பேசினேன். மீனவர்களை, கடல் எல்லையால் தடை போட்டு தடுத்து நிறுத்த முடியாது. அவர்களுக்கு, மீன் எங்கிருக்கிறதோ அங்கு சென்று, அவர்களால் முடிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மீன் பிடிப்பது தான் அவர்கள் வழக்கம். இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் எல்லை மிகவும் சிறிய பகுதியாகும். எனவே, சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன் பிடித்தார்கள்; அதனால் பிரச்னை என்ற நிலைக்கு பிரச்னையை வளர்க்காமல், அவர்களுக்கு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், இலங்கையும் இந்தியாவும் ஒரு தீர்வை அடைய வேண்டும் எனக் கூறி, இரண்டு யோசனைகளை முன் வைத்தேன். இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பிரச்னைகளை கலந்து பேசி, அவர்களுக்குள் ஒரு திட்டத்தை, வாரத்தில் மூன்று நாட்களுக்கு இலங்கை மீனவர்களும், மற்ற மூன்று நாட்களுக்கு இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையைக் கடந்து மீன் பிடிக்கவும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். அவர்களது மீன்பிடி உபகரணங்களை யாரும் சேதப்படுத்தாத வகையில், இரண்டு நாட்டு மீனவர்களும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அந்தந்த நாட்டு கடற்படைகளும் இதற்குரிய பாதுகாப்பை இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறினேன். இரு நாட்டு மீனவர்களும் பேசி முடிவெடுத்தால், இலங்கை, இந்தியாவுடன் ஒப்பந்தம் போடத் தயார் என்று, இலங்கை ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். எனவே, இதை அடுத்த கட்டத்திற்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகள் மற்றும் மீனவர்கள் ஒன்று சேர்ந்து, எடுத்துச் சென்று பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.


அது மட்டுமல்ல, Deep Sea fishing, அதாவது, ஆழ்கடல் மீன் பிடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மீன் பிடிக்கும் பயிற்சியை, இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, ஆழ்கடலில் மீன் பிடித்து, அதை பதப்படுத்தி, மதிப்பு கூட்டி, ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இந்திய - இலங்கை அரசுகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அதுமட்டுமல்ல, மீனவர் வாழும் பகுதியில், மீனை பதப்படுத்தி, மதிப்பு கூட்டும் மையங்களை இந்தியாவும், இலங்கையும் நிறுவ வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அப்படி

செய்தால், இரண்டு நாட்டு மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று எடுத்துரைத்தேன். ஜனவரி 23ம் தேதி, ஒரு நாள் முழுவதும், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையை புரிந்து கொண்டேன். யாழ்ப்பாணம் அரசு பிரதிநிதிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும், பத்திரிகை ஆசிரியர்களையும், யாழ்ப்பாணம் மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களது பிரச்னைகளை, என்னிடம் எடுத்துரைத்தனர். பிரச்னையின் யதார்த்தத்தை, நான் அவர்களை சந்தித்த பின் உணர்ந்து கொண்டேன்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். அங்கு நுழைந்ததும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் என்னை வரவேற்றனர். சொற்பொழிவு நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாத அளவில் கூட்டம். அந்த மாணவர்களிடம் உரையாடிக்கொண்டே, அவர்களிடம் அவர்களது உணர்வுகளை பகிர்ந்து கொண்டே சென்றேன். ஒரு மாணவர் "இதுவரை யாழ்ப்பாணத்திற்கு ஏன் வரவில்லை' என்று கேட்டார். அவரிடம் "யாழ்ப்பாணத்தின் நிலைமைகளை பற்றி, நான் அறிவேன். என் ஆசிரியரே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தான், எனவே, நான் வராவிட்டாலும், உங்கள் நிலைமைகளை புரிந்திருக்கிறேன்; இப்பொழுது உங்கள் உணர்வுகளை அறியவே வந்திருக்கிறேன்' என்று, கூறினேன். நான் என்ன சொல்ல வந்திருக்கிறேன் என்ற ஆவல் அவர்களுக்கு. எனவே தான், யாழ் மாணவர்கள் மத்தியில், "புயலை தாண்டினால் தென்றல்' என்ற தலைப்பில், அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் பேசினேன்.

அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும், பல புயல்களையும், சில தென்றல்களையுமே எதிர் கொள்ள நேர்கிறது. ஒரு தென்றலின் சுகத்தை நோக்கிச் செல்லும் போது, பல புயல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரிரு சமயங்களில், அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெற வேண்டுமானால், பல புயல்களைக் கடக்கும் உள்ள உறுதியைப் பெற வேண்டும். நம் எண்ணங்கள் உறுதியானால், அவை உழைப்பாக மாறி, நாம் எண்ணிய லட்சியத்தை அடையலாம் என்று அவர்களுக்கு, என் வாழ்வின் பல சம்பவங்களை எடுத்து கூறி விளக்கினேன். எனவே, அந்த பேச்சை தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் முழுவதுமாக படிக்க வேண்டும். அவர்களுடன் பல கேள்வி, பதில்களுடன் கலந்துரையாடினேன், அவர்களுக்கு, என்னால் முடிந்த வரை, நம்பிக்கையை ஊட்டினேன். அதன் பின்பு, யாழ்ப்பாணத்தில் இருக்கும் இளைஞர்களையும், தொழில் துறையை சேர்ந்தவர்களையும், மீனவர்களையும், பெரியோர்களையும், யாழ் பத்திரிகையாளர்களையும் சந்தித்து உரையாடினேன். போருக்கு பின், அவர்களது நிலைமையை அறிந்தேன். அங்கு, நான் கண்ட காட்சி, மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லார் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத எதோ ஒரு துன்ப ரேகை இடையோடுவதை கண்டுணர்ந்தேன். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க முடியுமா என்று எண்ணி சிந்தித்தேன். போயிருக்குமோ என்று நினைத்தேன். இலங்கைக்கான, இந்திய தூதரை அழைத்து, அவர்களுக்கு, இந்தியா செய்து வரும் வளர்ச்சிக்கான உதவிகளையும், அதில் ஏற்படும் தாமத்தையும் கலைந்து, விரைந்து நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய சொன்னேன்.

அதற்கு அடுத்தாற்போல், 120 ஆண்டுகள் பழமையான யாழ் இந்து கல்லூரிக்கு சென்றேன். மாணவர்கள் முகத்தில் என்ன ஒரு பரவசம். எங்கு பார்த்தாலும் உற்சாகம். அவர்களை கண்டவுடன், அந்த மாணவர்களின் பரவசமடைந்த முகத்தை பார்த்தவுடன், எங்கே நாம் வராமல் போயிருந்தால், இந்த மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை, நம்பிக்கையை கொடுக்க இயலாமல் எனவே, அந்த மாணவர்களுடன், "வாழ்வில் எப்படி பறக்க வேண்டும்' என்று, அதாவது அந்த மாணவர்களுக்கு, கீழ்கண்ட இலட்சியத்தை அவர்கள் மனதில் விதைத்தேன். அனைத்து மாணவர்களும், என்னுடன் உற்சாகத்துடன் கீழே உள்ள கவிதையை, உரக்க திருப்பி சொன்னார்கள்.


என் இலட்சியம்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன், ஆகாய உச்சி தான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், பறப்பேன்
வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.


யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களுக்கு, வாழ்க்கையில் தைரியத்தையும், லட்சியத்தையும் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். யாழ்ப்பாணம் சென்றதினால், என்னால் அதை ஓரளவு செய்ய முடிந்தது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு யாழ்ப்பாண மாணவியின் அபார திறமை, எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தது. நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று, இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து, உரையாடிய போது, மாணவி ஒருவர், "பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்' என, என்னிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு திறமை வாய்ந்த மாணவியை, நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த நான், அந்த பதிலைத் திரும்பக்
கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர், அதைக் கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை, நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான்.


நான் சொன்னேன்
உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும்.
உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும்.
வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும்.
நாட்டில் அமைதியிருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும்


என, ஆங்கிலத்தில் நான் ஒருமுறை கூறியதை, அதை அப்படியே எப்பிழையும் இல்லாமல், மடை திறந்த வெள்ளம் போல் அந்த மாணவி திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், எனக்கு யாழ் இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி மேலும் பிரகாசித்தது. எனவே, என் அருமை தமிழ் நெஞ்சங்களே, திருவள்ளுவரின் திருக்குறள் நமக்கு அருளிய மிக உன்னத அறிவுரையாவது என்னவெனில்,

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்

அதாவது, திருவள்ளுவரின் வாக்குப்படி, சொற்களில் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது. எனவே, நண்பர்களே, பயனில்லா சொற்களைப் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை. பேசிப் பேசி, நாட்களை வீணடிப்பதற்கு பதிலாக, தமிழ் உணர்வுள்ள உலக தமிழ் மக்கள், ஒரு கேள்வியை தங்கள் மனதில் கேட்க வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு, என்னால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும்? என்ற கேள்விக்கு, ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாக, விவேகத்துடன் செயல்பட என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டால், கண்டிப்பாக அதற்கான பதில் உங்கள் பணிக்கு உயிர் கொடுக்கும், இலங்கை தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்து விட்டது. 200 வருடம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யம், இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது; 17ம் நூற்றாண்டிலிருந்து பல லட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களை, சுதந்திரப் போரில் நாம் இழந்தோம். அதையே நினைத்துக் கொண்டிருந்து, பேசிக்கொண்டு, இன்னும் ஆங்கிலேயர்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டே இருந்தால், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியாது. இந்த உலகம் எத்தனையோ போர்களை சந்தித்து விட்டது. அதற்கு பல காரண காரியங்கள் அலசப்படலாம். ஆனால், எத்தகைய ஓர் விளைவிற்கும், எதிர் விளைவாக போர் நடக்குமேயானால், அது ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. இனிமேல் நடப்பவற்றை பற்றி சிந்தித்து முன்னேறுவது தான் அறிவார்ந்த சமுதாயத்தின் அடையாளம். அகிம்சையை கையில் எடுத்து, இந்தியாவை ஜனநாயகப் பாதையில் மீட்டெடுத்து, மகாத்மா காந்தி சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தாரே, அதை, நாம் என்றென்றும் நினைவு கொள்ள வேண்டும்.

பல்வேறு சமஸ்தானங்கள், ராஜ்யங்கள், ஜமீன்களை ஒருங்கிணைத்து, 30 மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி, ஒருங்கிணைந்த இந்தியாவாக இருக்கிறதே அதற்குக் காரணம் நமது ஜனநாயகமும், பலம் வாய்ந்த நமது அரசியல் சாசன சட்டமும் தான். அப்படிப்பட்ட ஜனநாயகம், நம் அண்டை நாடுகளில் வளர்ந்தோங்க, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே நண்பர்களே, அந்த அடிப்படையில் என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும், இலங்கை தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுய மரியாதையுடனும் வாழ, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க, என்னுடைய இலங்கை பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் அமைதியையும், அவர்களது வளர்ச்சியையும் ஜனநாயக முறையில் அடைய, நாம் என்றென்றும் உறுதுணையாக இருப்போம்.

கருத்துகள் இல்லை: