செவ்வாய், 31 ஜனவரி, 2012

அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடைஆமை வேகத்தில்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆட்சியின் போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கி.மீ., ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்தும் வகையில், பஸ்களின் இன்ஜின்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் நினைத்தால் கூட பஸ்களை, 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடிவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன.

பயண தூரம் ஒரே அளவாக உள்ள நிலையில், வசதிகள் மேம்படுத்தப்பட்ட பஸ்சாக மாற்றப்படும் நிலையில், பயண நேரம் குறைக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வழித்தடங்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டதே ஒழிய, பயண நேரம் குறைப்பு இல்லை. உதாரணமாக, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு, சூப்பர் டீலக்ஸ் பஸ்சின் பயண காலம், 8.30 மணி நேரம். சேலத்தில் திருநெல்வேலிக்கான பயண காலம், 9 மணி நேரம். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சூப்பர் டீலக்ஸ் பஸ்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பயண நேரம் குறைப்பு செய்யப்பட வில்லை.

கட்டாயம் சாலை ஓர மோட்டல்களில் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகரிக்கவே செய்கிறது. சென்னை, பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு வழிச் சாலையாக இருக்கும் நிலையிலும், பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தை அடைய குறைந்தது, 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. இது பயணிகளை வெறுப்பேற்றி வருகிறது.

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடிகள், பஸ்கள் பராமரிப்பில் தொய்வு ஆகியவற்றால், தற்போது விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, தமிழக முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதும், தேவையான உதவிகளை தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டன. நிதி உதவிகள் பெறப்பட்ட நிலையிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவையில், மன நிறைவை ஏற்படுத்தி தரவில்லை.

இந்த போக்குவரத்துக் கழகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 420 புதிய பஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பஸ்களுக்கான பாடி கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் மார்ச்சில் செயல்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்கள் இயக்கத்துக்கு வந்தாலும், அவற்றை பராமரித்து சிறப்பாக இயக்குவது என்பது, அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: