திங்கள், 1 நவம்பர், 2010

யாழ்.பொது நூலகத்திற்குள் தென்பகுதி உல்லாசப்பயணிகள் நுழைவதற்கு தடை!!

யாழ்.பொது நூலகத்திற்குள் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களை பார்வையிடுவதற்கு அனுமதிப்பதில்லை என எடுக்கப்பட்ட முடிபு பாராட்டப்பட வேண்டியதாகும். யாழ்.பொது நூலகத்திற்குள் தென்பகுதி உல்லாசப்பயணிகள் நுழைந்து பார்வையிடுவதனால் யாழ்.பொது நூலகத்தின் அங்கத்தவர்களும் பணியாளர்களும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதுபற்றி இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், யாழ்.பொது நூலகத்தை பார்வையிடுவதற்காக தென்பகுதிப் பயணிகள் செய்த அட்டகாசம், நியாயம் பிறப்பதற்கு வழிவகுத்தது. அதனடிப்படையில், அங்கத்துவமில்லாதவர்கள் யாழ்.பொது நூலகத்துக்குள் நுழைய முடியாது என்ற இறுக்கமான கட்டுப்பாட்டை கொ ழும்பு நிர்வாகம் எடுத்துள்ளது.
உண்மையில் இந்த முடிபு பாராட்டப்பட வேண்டும். சட்டமென்றால் அது எங்கும் எவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இனத்துவ அடிப்படையில் சட்டங்கள் வலுப்பெறுமாயின் நாட்டில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை எவராலும் பாதுகாக்க முடியாமல் போகும். இந்த ஒழுங்கு தென்பகுதிக்கும் பொருந்தும்.
வடபகுதியைச் சேர்ந்தவர்கள் தென்பகுதிக்கு சுற்றுலாச் சென்று கொழும்பிலுள்ள நூலகத்தைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டால் அதனையும் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. எதற்கும் ஒரு நடைமுறை உண்டு. இந்த நடை முறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியவை.
எனவே யாழ்.பொது நூலகத்திற்குள் அங்கத்துவமில்லாத எவரையும் அனுமதிக்க முடியாதென்ற முடிபு போல இன்னும் பல முடிபுகளை அரசு எடுக்கவேண்டும். இது இன ஒற்றுமைக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

கருத்துகள் இல்லை: