வியாழன், 4 நவம்பர், 2010

தமிழக நர்ஸ் பலாத்காரம்-கேரள போலீஸ் அட்டூழியம்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டு வழக்கில் சிக்கிய வேலூர் நர்சை 4 போலீசார் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹோம் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் மாதம் அந்த வீ்ட்டில் நகை, பணம் காணாமல் போனது. இது குறித்து விசாரித்த திருக்காக்கரை போலீசார் நர்சை கைது செய்தனர். நகைகளை மீட்பதற்காக வேலூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றபோது 4 போலீசார் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த பெண்ணை பிடித்து ஒரு வாரத்திற்கு பிறகுதான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருக்காக்கரை சிறையில் அடைத்தனர். பிறகு அவர் திருச்சூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் கேரள மனித உரிமை ஆணைய உறுப்பினர் நடராஜா, திருச்சூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது சிறையில் இருந்த அந்த பெண், போலீசார் தன்னை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய விவரங்களை கூறி கதறியுள்ளார். இதனால் இப்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இதற்காக திருச்சூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததாகவும் கூறியுள்ளார்.

வழக்கில் சிக்கிய தமிழக பெண்ணை 4 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உடனே விசாரணை நடத்தும்படி கேரள உள்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: