சனி, 6 நவம்பர், 2010

வலி: தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும்,

வேரை இழத்தலின் வலி! : வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இருபதாவது ஆண்டு நினைவுக் கட்டுரை

ஒரு தாவரத்தை அது முளைத்த மண்ணிலிருந்து பிடிங்கியெடுத்து வேறிடத்தில் நடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக, அந்தத் தாவரம் பிழைப்பதென்பது மிக அரிது. அப்படிப் பிழைத்தாலும் செழிப்பாக வளராது. அது முளைத்து வளர்ந்த மண்ணில்தான் அதன் பாதி உயிர் ஒட்டிக் கிடக்கிறது. அதனால்தான் அந்த தாவரம் பிடுங்கியெடுக்கப்படும்போது கிட்டத்தட்ட அது இறந்து போகிறது.
ஆத்மா இல்லாத, ஒரு தாவரத்துக்கே அதன் பிறப்பிடத்திலிருந்து பிடுங்கியெடுக்கப்படும்போது இத்தனை இன்னல்கள் என்றால், மனிதனின் நிலை – மிகக் கொடுமை!
தான், பிறந்து – வளர்ந்த மண்ணிலிருந்து பலாத்காரமாக பிடுங்கியெறியப்படும் ஒருவன் அனுபவிக்கும் வலியும், இன்னல்களும், அவமானங்களும் – அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடியவை!
தமது மண்ணிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கும், யுத்தத்தின்போது தங்கள் வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கும் வலிகள் என்பவை வேறு வேறானவைகள் அல்ல!
ஆனாலும், கடந்த காலத்தில் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது அதுபற்றி தமிழ் தரப்பிலிருந்து போதுமான அளவு எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை என்பது கசப்பானதோர் உண்மையாகும்.
புலிகள் செய்ததையெல்லாம் நியாயப்படுத்தும் தமிழர் தரப்பைச் சேர்ந்த ஒரு கூட்டம், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோதும் அதற்கு நியாயம் கற்பிக்கத் தொடங்கியது. ஆனாலும், முஸ்லிம்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தமிழ் மக்களில் மிக அதிகமானோர் வெறுத்தார்கள் அல்லது விரும்பவில்லை என்பதையும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இருந்தபோதும், புலிகள் மீதான அச்சத்தினால் தமது வெறுப்பினை தமிழ் மக்களால் அப்போது வெளியிட முடியவில்லை!
கொழும்பில் நான் ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றியபோது, என்னுடன் வேலை செய்த தமிழ் நண்பரொருவர்ளூ வடக்கு முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றிய நடவடிக்கையினை அடிக்கடி நியாயப்படுத்திப் பேசுவார். முஸ்லிம்கள் ராணுவத்துக்கு உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டமையினாலேயே அவர்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள் என்று – புலிகளுக்காக அவர் வாதாடிக் கொண்டேயிருப்பார்.
அந்த நண்பர் சொன்ன விடயங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். சிலவேளைகளில் ராணுவத்தினருக்காக முஸ்லிம்களில் ஒருவரோ, இருவரோ, அல்லது சிலரோ – உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம். அதற்காக, வடக்கிலிருந்த சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்களையும் இரண்டு மணி நேரத்துக்குள் அவர்களின் மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்தமை எந்த விதத்தில் நியாயமாகும்?!
இந்த இடத்தில் அப்பாவித்தனமாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. வடக்கிலிருந்த தமிழர் தரப்பிலும் ராணுவத்துக்காக உளவு பார்த்தவர்கள், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் என நிறையப்பேர் இருந்தார்களல்லவா? அப்படியென்றால், அந்த உளவாளிகளைக் காரணமாக வைத்து வடக்கிலிருந்த தமிழர்களையெல்லாம் ஏன் புலிகள்; வெளியேற்றவில்லை!
எனவே, ராணுவத்துக்காக உளவு பார்த்ததால்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று புலிகளாலும், புலி ஆதரவாளர்களாலும் கூறப்படும் கதையானது, வெற்றுக் கதைகள் அல்லது கட்டுக் கதைகளாகும்!
புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு வேறு ஒரு கதை உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அது இங்கு – இப்போது தேவையில்லை!
பழையவற்றைக் கிளறிக்கொண்டும், ஆளாள் மீது குற்றம் சுமத்திக் கொண்டுமிருப்பதால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை. எனினும், நமது தரப்புத் தவறுகளை பெருமனதுடன் நாம் ஏற்றுக் கொள்வதாலும், அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பிடம் நாம் மன்னிப்புக் கோருவதாலும் எதுவும் எவர்க்கும் குறைந்து விடவும் போவதில்லை.
இடம்பெயர்வு, அதனால் ஏற்படும் இன்னல்கள், அவமானங்கள், கொடுமைகளை – போதும் என்றளவுக்கு தமிழ் மக்கள் அனுபவித்துவிட்டார்கள். பலாத்காரமாக இடம்பெயர்க்கப்படுதலின் வலியை அனுபவபூர்வமாக உணர்ந்து வைத்துள்ள தமிழ் மக்கள், புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தமாட்டார்கள் என்பது நமது நம்பிக்கையாகும்.
யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரை ஒரு தடவை கொழும்பில் வைத்துச் சந்திக்கக் கிடைத்தது. அவருக்கு 60 வயதிருக்கும். அவர் எனது நண்பரொருவரின் தூரத்து உறவினர். என்னை ஒரு முஸ்லிம் என அறிந்து கொண்டதும், அவரின் முஸ்லிம் நண்பர்கள் பற்றியும், யாழ்ப்பாணத்தில் அவர்களுடைய அயலவர்களாக இருந்த முஸ்லிம்கள் பற்றியும் அந்தப் பெரியவர் பேசத் தொடங்கினார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த பிறகும் கூட, அவரின் குடும்பத்தினருக்கும், அயலவர்களாக இருந்த முஸ்லிம் குடும்பத்தவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் இன்னும் இருப்பதாக அவர் கூறினார். இப்படி, அந்த உறவை – நட்பைப் பற்றிப் பேசிக் கொண்டு போன அந்தப் பெரியவர் ஒரு கட்டத்தில் கண்கலங்கி அழுதே விட்டார்.
போலியற்ற அந்த அழுகையை இப்போது நினைத்தாலும், மெய் சிலிர்த்துப் போகிறது!
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு இன்றுடன் இருபது வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், அந்த மக்களின் அவல வாழ்வு இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘அகதி’ என்கிற பெயரால் அவர்கள் அழைக்கப்படும்போது, அவர்களுக்குள் ஏற்படுகின்ற வலி, அவமானம் குறித்தெல்லாம் நம்மில் எத்தனைபேர்தான் சிந்தித்திருக்கின்றோம்?
கோடீஸ்வரர்களாக உறக்கத்துக்குச் சென்ற எத்தனையோ வடக்கு முஸ்லிம்கள், விடியும்போது எதுவுமற்றவர்களாக வெளியேற்றப்பட்டார்கள். நாம் அகதி என்று அழைக்கும் வடக்கு முஸ்லிம்களில் அதிகமானோர், தமது மண்ணில்; மேல் தட்டு வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்மில் பலபேர் நினைத்துப் பார்ப்பதேயில்லை. ஆகவேதான் அவர்களை ‘அகதி’ எனும் சொல்லால் நாம் அழைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அழைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் ‘ஆத்ம வலி’ குறித்து நம்மில் பலர் கவலைப் படுவதேயில்லை!
இது ஒருபுறமிருக்க, வடக்கு முஸ்லிம்களை விரட்டியடித்த பாவத்தின் சொந்தக்காரர்களான சில முன்னாள் புலிகள் – இப்போது கூட அவர்களின் பிழைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதும் மிக விசனத்துக்குரிய விடயமாகும்.
புலிகளின் முக்கிய பொறுப்புக்களில் இருந்த – தற்போதைய பிரதியமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இருந்தபோது – புரிந்ததும், நிகழ்ந்ததுமான தவறுகளை இப்போது கூட, ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோருவதற்குத் தயாராக இல்லை! தமது தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவதற்கே மறுக்கும் இவர்கள், இவர்களாலும், இவர்கள் அங்கம் வகித்த இயக்கத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக எதைத்தான் செய்துவிடப் போகிறார்கள்!
புலிகளால் புரியப்பட்ட பிழைகளை சந்திரகாந்தன் – முரளிதரனின் தலையில் போடுவதும், பின்னர் முரளிதரன் அவற்றை பிரபாகரனின் தலையில் இறக்கி வைத்து அறிக்கை விடுவதும் வாடிக்கையான செயல்களாகிவிட்டன.
புலிகள் இயக்கத்தின் யுத்த வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் – தானே பிரதான காரணம் என மார்பு தட்டும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகளின் தவறுகளையும் பொறுப்பேற்றே ஆக வேண்டும். புலிகள் இயக்கத்திலிருந்து விலகி வந்து விட்டதனால் மட்டும், சந்திரகாந்தனோ, முரளிதரனோ புனிதர்களாகி விடப்போவதில்லை!
இவைதவிர, வடக்கு முஸ்லிம்கள் விடயத்தை அரசியலாக்கி அதன் மூலம் தமது பதவிகளையும், அரசியல் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்ளும் கேவலமான விளையாட்டுக்களில் நமது அரசியல்வாதிகள் ஈடுபட்டுவருவதும் வெட்கக்கேடான விடயமாகும். புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் பெயரால் சில அரசியல்வாதிகளும், அவர்களின் கூட்டத்தாரும் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பது சமூக துரோகம்!
புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்களில் சில குடும்பத்தவர்கள் மட்டுமே தொடர்ந்தும் புத்தளத்தில் இருப்பதற்கு விரும்புவதாகக் கூறப்படுகிறது. ஏனையோர் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப வேண்டுமென்றே ஆசைப்படுகின்றார்கள். ஆனால், இதுவரையும், சில நூற்றுக் கணக்கான குடும்பங்கள் மட்டுமே வடக்கில் குடியேற்றப்பட்டுள்ளன. ஏனையோர் ‘அகதிகள்’ என்கிற அழியாப் பெயருடன் புத்தளத்திலும் வேறுபல இடங்களிலும் வலியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த இடத்தில் ஒரு கசக்கும் உண்மையைக் கூறியே ஆக வேண்டியிருக்கிறது. உதாரணமாக, புத்தளத்தில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை விடவும் அங்கு இருப்பதையே சில முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்புகின்றார்கள் என்று கவலையோடு கூறினார் அங்குள்ள நமது நண்பரொருவர்.
பிச்சைக்காரனின் புண்ணைப்போல், இந்த ‘அகதி’கள் விவகாரத்தைத் காட்டிக் காட்டியே, தமது அரசியலையும், பொருளாதாரத்தையும் குறித்த அரசியல்வாதிகள் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது நண்பர் கவலைப்பட்டுக் கூறிய மற்றொரு விடயமாகும். இந்த ‘அகதி’கள் இல்லாமல் போவது இந்த அரசியல்வாதிகளுக்கு ஆபத்தானதாம்!
இப்படியான அவலங்கள் அசிங்கங்களுக்கெல்லாம் அப்பால், வேரை இழந்த அந்த மக்களின் வலி குறித்து இன்றைய தினம் நாம் எல்லோரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வேர்களையும், அவை பரவிக் கிடந்த மண்ணையும் இழத்தலின் வலி மிகக் கொடுமையானது!

கருத்துகள் இல்லை: