சனி, 25 செப்டம்பர், 2010

முன்னாள் புலிகளிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக விசாரணை.

மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் புலிகள் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்களிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகின்றது.

புலிகளியக்கத்திலிருந்து பிரிந்து வந்த கருணா அவ்வியக்கத்தின் மட்டு அம்பாறை கட்டமைப்பைக் கலைத்து உறுப்பினர்களை தமது வீடுகளுக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தார். அவ்வாறு புலிகளியக்கத்தை விட்டு வெளியேறிய பலர் வெளிநாடுகளிக்கு தப்பிச் சென்றிருந்தனர். தற்போது நாட்டில் சமாதானம் தோன்றியுள்ளதாக கூறப்படும் நிலையில் , நாடு திரும்பும் முன்னாள் புலிகள் விசாரணைகளுக்கு உட்படுத்ப்படுவதாக கிழக்கு மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த கிரான் பிரதேசத்தை சேர்ந்த பகிரதன் எனும் இயக்கப்பெயரையுடைய இளைஞன் ஒருவன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு , விசாரணைகளின்போது கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பாக கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பகிரதன் புலிகளியக்கத்திலிருந்தபோது கருணாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரியவருகின்றது.


கருணா அரசுடன் இணைந்திருந்தாலும் அவரிடம் ரகசிய ஆயுதக்கிடங்குகள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது பல கோணங்களில் நோக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: