வியாழன், 14 அக்டோபர், 2021

மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்கு திரும்பும் அமுதா ஐ.ஏ.எஸ்.!

 நக்கீரன் :  பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றிவரும் அமுதா ஐ.ஏ.எஸ். மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்புகிறார்.  1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமுதா, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மீண்டும் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்ப மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் தடைகளைத் தகர்த்து சாதித்தவர் என பெயர் பெற்றவர் அமுதா.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுதந்திரமாக உலவிய காலகட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையத்தில் சார் ஆட்சியராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்., அடர்ந்த காடுகளுக்குச் சென்று உள்ளூர் மக்களைச் சந்தித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர்.


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா, சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துப் பலரது பாராட்டையும் பெற்றார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைந்தபோது இறுதிச் சடங்கைக் கையாளும் பொறுப்பு அமுதாவிடம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: