செவ்வாய், 12 அக்டோபர், 2021

9 மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க... சொல்லி அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதேபோல் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியிலிருந்து விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களில் இதுவரை 121 இடங்களில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல் 1,380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் தி.மு.க கூட்டணி 392 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் செங்கல்பட்டில் 16ல் 11 இடத்திலும், வேலூரில் 14ல் 11 இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.
ராணிப்பேட்டையில் 13ல் 10 இடத்திலும், திருப்பத்தூரில் 13ல் 11 இடத்திலும், விழுப்புரத்தில் 28ல் 26 இடங்களிலும், கள்ளக்குறிச்சியில் 19ல் 18 இடங்களிலும், திருநெல்வேலியில் 12ல் 9 இடங்களிலும், தென்காசியில் 14க்கு 14 இடத்திலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல் 1380 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 388 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இவற்றில் பல இடங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதுவரை வந்த முடிவுகளின்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் இதுவரை 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலிலும் 21 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அதேபோல், தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர். மேலும், அ.ம.மு.க, பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், போன்ற கட்சிகள் படுதோல்வியடைந்துள்ளன.

முன்னதாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சியிலும், நல்லாட்சி மலரச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த தேர்தல் முடிவுகள் முதலமைச்சரின் வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டதையே வெளிக்காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: