சனி, 4 ஏப்ரல், 2020

கொரோனா நிவாரணத் தொகை ரூ.1,000 வீடு வீடாக நாளை விநியோகம்

ration cardதினமணி : தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் மூலம் கரோனா நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ஒரே நாளில் வீடு வீடாக விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான சுற்றறிக்கையை தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜன்சிங் சவாண் வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அதன் விவரம்:-
தமிழகம் முழுவதும் உள்ள 2.01 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நோய்த்தொற்று நிவாரணத் தொகையாக ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் மட்டுமே அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிவாரண உதவித் தொகையை வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கும் நடைமுறை வரும் சனிக்கிழமையுடன் (ஏப்ரல் 4) நிறுத்தப்படுகிறது. சனிக்கிழமைக்கு ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவித் தொகையும் பொருள்களும் நியாயவிலைக் கடைகளில் அளிக்கப்படும். இந்தப் பணி முடிந்தவுடன், அன்றைய தினமே வீடு வீடாகச் சென்று டோக்கன் மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.
நாளை கடைகள் இயங்காது:வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நியாயவிலைக் கடைகள் இயங்காது. அன்றைய தினமே வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்ட டோக்கன்களை அளிப்பதுடன், நிவாரண உதவித் தொகையை நேரில் கொடுக்க வேண்டும். அன்றைய தினமே நிவாரண உதவித் தொகை முழுவதையும் வழங்கி முடிக்க வேண்டும்.
விடுபட்டோருக்கு அளித்தல்:ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டோருக்கு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 6) நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும். விடுபட்டோருக்கு விற்பனை முனைய இயந்திரத்தின் மூலமாக நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.
வரும் 7-ஆம் தேதி முதல் கிடையாது:வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே வழங்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் செவ்வாய்க்கிழமை முதல் நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாயை நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடாது.
டோக்கன் வழங்கப்படும்போதே குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் பொருள்கள் மட்டுமே வழங்கப்படும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு அம்சங்கள்: வீடுகளுக்கு நிவாரண நிதியையும், டோக்கன்களையும் விநியோகம் செய்யும் நபா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உதாரணமாக முகக் கவசங்கள், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை போதுமான அளவு வழங்க வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் சஜன்சிங் சவாண் கேட்டுக் கொண்டுள்ளாா்

1 கருத்து:

John88 சொன்னது…

நிவாரணத் தொகை ரூ.1,000 உதவுங்கள் Master Tamilrockers