வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஜெர்மனி கிறிஸ்தவ விழா கூட்டத்துக்குள் காரை மோதி தாக்குதல்: 52 பேர் படுகாயம்


தினத்தந்தி :  ஜெர்மனியில் திருவிழா கூட்டத்துக்குள் காரை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி 52 பேர் படுகாயம் அடைந்தனர். பெர்லின், ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள வோல்க்மார்சன் நகரில் கிறிஸ்தவ பண்டிகையான ‘ரோஸ் திங்கள்’ தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்கு பிரமாண்ட திருவிழா நடைபெற்றது. சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் வித்தியாசமான வேடங்களிலும், வண்ணவண்ண உடைகளை அணிந்தும் ஆடிப்பாடி பேரணியாக சென்றனர். அப்போது உள்ளூர் நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, திருவிழா கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் மக்கள் அங்கும் இங்குமாக தூக்கி வீசப்பட்டனர்.

இதில் 18 சிறுவர்கள் உள்பட 52 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கார் டிரைவரை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், 29 வயதான அந்த கார் டிரைவர் மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே கூட்டத்தினர் மீது காரை மோதியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தாக்குதலுக்கான பின்னணி குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: