செவ்வாய், 10 செப்டம்பர், 2019

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அக்னி எஸ்டேட், பவுண்டேஷன் நிறுவன ஜெயப்பிரகாஷ்... ஸ்டாலினின் நண்பராம்..

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் 1.16 ஏக்கர் நிலத்தை கார்த்தி சிதம்பரம் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனை செய்தார். இந்த விற்பனையின் மூலம் கிடைத்த வருமானமாக ரூ.3.65 கோடிக்கான காசோலை வருமான வரித் துறையிடம் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணமாக வந்த 1.35 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்டவில்லை என்று கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. ஆனால், இவ்வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில், “கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டு பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. நிலத்தை வாங்கிய அக்னி எஸ்டேட் மற்றும் பவுண்டேஷன் நிறுவனத்திடம் இருந்து எந்த பணத்தையும் பெறவில்லை. மேலும், இந்த வழக்கின் சம்பவம் நடந்தது 2015ஆம் ஆண்டில். ஆனால், கார்த்தி சிதம்பரம் கடந்த மே மாதம்தான் மக்களவை உறுப்பினர் ஆனார். எனவே இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று (செப்டம்பர் 9) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவாளர் தரப்பிலிருந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, எந்தவொரு கிரிமினல் வழக்கையும் இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டு அதற்குரிய சட்டப்பிரிவுகளையும் சுட்டிக்காட்டினார். மேலும், “வழக்கின் முடிவில் நீதி கிடைப்பதற்கு அது பயனுள்ளதாகவே இருக்கும்” என்றும் குறிப்பிட்ட நீதிபதி ஆதிகேசவலு, விரைவில் உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.
கார்த்திக்கிடமிருந்து நிலத்தை வாங்கியவர் அக்னி எஸ்டேட் மற்றும் பவுண்டேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயப்பிரகாஷ். இவர் மு.க.ஸ்டாலினின் நண்பர். அரசியல் ஆலோசகரும் கூட. ஸ்டாலினையும் டிடிவி தினகரனையும் நேரில் சந்திக்க வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர். ஸ்டாலின் சகோதரி செல்வியின் பேத்திக்கும், இவரது மகனுக்கும்தான் சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்தது.
கிரிஸ்டி ஃபுட் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிரடி ரெய்டு நடத்தியபோது அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயப்பிரகாஷ் நிறுவனத்திலும் ரெய்டு நடத்தியது. அங்கு கிடைத்த ஆவணம்தான் கார்த்தி சிதம்பரத்திடமிருந்து நிலத்தை வாங்கிய ஆவணம். விசாரணையில், கார்த்தி சிதம்பரத்திடமிருந்து நிலத்தை வாங்க வெள்ளையாக கொடுத்தது எவ்வளவு, கறுப்பாக கொடுத்தது எவ்வளவு போன்ற விவரங்களை அப்ரூவர் போல் வாக்குமூலமாகவே கொடுத்திருக்கிறார். இதனை அறிந்த ப.சிதம்பரம், ஜெயப்பிரகாஷை வீட்டிற்கே வரவழைத்து ரெய்டு விவரங்களை கேட்டறிந்தார். வழக்கு விசாரணையின்போது நீங்கள் மாற்றி கூட சொல்லலாம் என அப்போதே ஆலோசனையும் வழங்கியிருக்கிறார்.
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வருமான வரித் துறையின் வழக்கு வேகமெடுத்துள்ள நிலையில், வழக்கு விசாரணையில் ஸ்டாலின் நண்பரும், உறவினருமான ஜெயப்பிரகாஷ் என்ன நிலை எடுக்கப்போகிறாரோ என்ற கவலையில் கார்த்தி வட்டாரம் உள்ளது.
ப.சிதம்பரத்தை சிபிஐ கஸ்டடி எடுத்தபோது டெல்லி சென்ற கார்த்தி நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவரங்களையும் இரவே கேட்டறிந்திருக்கிறார். இன்று இரவு மீண்டும் டெல்லி செல்ல இருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை: