புதன், 11 செப்டம்பர், 2019

இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்

tamil.oneindia.com - hemavandhana : மயிலாடுதுறை:
"தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்... சீக்கிரமாகவே அவரும் கைது செய்யப்படுவார்" என்று எச்.ராஜா ஆருடம் சொல்லி உள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார். அப்போது, பிரதமர் மோடியை லிஸ்ட் போட்டு பாராட்டி பேசியதுடன், நடுநடுவே திமுகவையும், ப.சிதம்பரம் பற்றியும் விமர்சித்து கருத்து சொன்னார்.
எச்.ராஜா பேசியதாவது: "இந்தியாவில் பொருளாதார பாதிப்பு, நேரு காலத்தில் இருந்தே இருக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு,

கருப்பு பணம் உட்பட வெளியில் இருந்த பணம் எல்லாம் வங்கிகளுக்கே வந்து விட்டது. அதை வைத்துதான், சாலைகள் மேம்பாடு, வீடு கட்டும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
அதனால, இப்போது எந்த பொருளாதார பாதிப்பும் நாட்டில் ஏற்படவில்லை. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தான் பிரதமர் நாட்டை கொண்டு செல்கிறார். அதேபோல, விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் அறிவிக்க இருக்கிறார்.

சாலை விதிகள், ஹெல்மெட் அணிவது என்று பல சிறப்பான திட்டங்களை பிரதமர் முன்னெடுத்து வருகிறார். ஆனால் இது எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் தவறாக விமர்சிக்கிறார்கள். பொய்யான தகவலை பரப்புகிறார்கள். மக்களை குழப்புகிறார்கள்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்தப் போவதாக பொய்யான தகவலை கிளப்பி வருகின்றனர். இது முட்டாள்தனமான பொய். இநத் மாதிரி சமூக வலைதளங்களில் பரப்புபவர்களை சமூக விரோதிகளாகக் கருதி மக்களும் விவசாயிகளும் அவர்களை ஒதுக்கிட வேண்டும்" என்றார்.
ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் புள்ளிகள் கைதாகி வருவது குறித்து கேட்கப்பட்டதற்கு, "இவர்கள் எல்லாம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஊழல் செய்தே இப்படி சொத்துக்களை சேர்த்தனர். அதனால்தான் கைதாகி உள்ளனர். இப்படித்தான், தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அவரும் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார்" என்றார்

கருத்துகள் இல்லை: