வெள்ளி, 14 ஜூன், 2019

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு


தினத்தந்தி : ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தொடரும் நிலையில், ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான், என அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், உளவுத்துறையின் தகவலின்படி ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பதற்கு அமெரிக்காவிடம் வலுவான ஆதாரம் உள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், தாக்குதல் நடந்த விதத்தையும் பார்க்கிறபோது, இந்த பிராந்தியத்தில் ஈரானுக்கு மட்டுமே இதை செய்யக்கூடிய திறன் உள்ளது என்பது தெரிகிறது என்றார்.


ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் முற்றிலுமாக நிராகரித்தது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமின்றி குற்றம் சுமத்தி இருக்கிறது.

இது ஈரானுக்கு எதிரான மற்றொரு பொய் பிரச்சாரமாக அமைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களுக்கு ஈரான் உதவியது. எங்களால் முயன்ற வகையில் அந்த கப்பலில் இருந்த குழுவை காப்பாற்றினோம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: