புதன், 12 ஜூன், 2019

திமுக தலைவர் ஸ்டாலினை நம்பித்தான் அதில் இணைந்தேன்... ராதாரவி அதிமுகவில் இணைந்தார்

திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது: ராதாரவிமின்னம்பலம் :அதிமுகவில் இணைந்தது தொடர்பாக நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார்.
நயன்தாராவை விமர்சித்தது தொடர்பாக திமுகவிலிருந்து கடந்த மார்ச் மாதம் நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று (ஜூன் 12) சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த ராதாரவி, “சினிமா விழாவில் நயன்தாராவைப் பற்றி நான் தவறாக எதுவும் கூறவில்லை. இருப்பினும் அவர் மனம் நோகும்படி கருத்து கூறியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றெல்லாம் கூட தெரிவித்துவிட்டேன். நான் இவ்வளவு பெருந்தன்மையாக கூறியும் கூட திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிப்பு வருகிறது. என்னை நிரந்தரமாகவே நீக்கிவிடுங்கள் என்று கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
இரு நாட்களுக்கு முன்பாகத்தான் அதிமுகவில் இணைவதற்கான முடிவையே எடுத்ததாக குறிப்பிட்ட ராதாரவி, “தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் அணியை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவு திரட்டிவருகிறேன். ஆனால், ராதாரவி சொல்பவருக்கு ஆதரவாக பணியாற்றக் கூடாது, அப்படி பணியாற்றினால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவோம் என்று திமுக தலைமைக் கழகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். பிறகுதான் அது பூச்சி முருகன் என்று தெரிந்தது.
இருப்பினும் தலைமைக் கழகம்தான் அல்லவா? இந்த சிறிய தேர்தலுக்கு பெரிய கட்சி தலையிடுகிறது. அதனால் என்னை திமுகவிலிருந்து மொத்தமாக ஒதுக்கிவிட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலில் திமுகவின் தலையீடு உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இவை குறித்து திமுக தலைவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினை நம்பித்தான் அதில் இணைந்தேன். உண்மையில் திமுகவில்தான் இரட்டை தலைமை உள்ளது. அது யார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். இனி திமுக எனக்கு சரிப்பட்டுவராது என்று நடிகர் சங்கத் தேர்தலில் தெரிந்துகொண்டேன். அதனால்தான் தற்போது அதிமுகவில் இணைந்தேன்” எனவும் விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை: