புதன், 12 ஜூன், 2019

கனடாவின் இயல் விருது பெற்ற எழுத்தாளர் இமயமும் .. கலைஞரும்

சென்னை: 2018-ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய தோட்ட இயல் விருதை எழுத்தாளர் இமயம் பெற்றார். வாழ்நாள் சாதனைக்காக எழுத்தாளர் இமயத்துக்கு விருது வழங்கப்பட்டது. நடுகல் நாவலுக்கான புனைவுப் பரிசு தீபச் செல்வனுக்கு வழங்கப்பட்டது. காக்கா கொத்திய காயம் என்ற நூலுக்காக புனைவுப் பரிசு உமாஜிக்கு வழங்கப்பட்டது.
விகடன் : எழுத்தாளர் இமையம் தன்னை எழுத்தாளர் என்பதைவிட தி.மு.க-வின் தொண்டன் என்று சொல்லிக்கொள்வதில் அதிக மகிழ்ச்சியடைவார். அவரிடம் கலைஞருடனான அவரது நினைவுகள்குறித்தும் அவரது இறப்பின் தாக்கம் குறித்தும் கேட்டேன்.
கலைஞர் இறந்தது முதல் அவரது அடக்கம் வரை உறங்காமல் உடனிருந்துவிட்டு மிகச்
சோர்வாகஇருந்தவர்,அவரைப் பற்றியே
பேசப் போகிறோம் என்றதும் உற்சாகமாக அவரது நினைவுகளை விவரித்தார்.
`1976-ல் கலைஞர் எனக்கு ஒரு சொல்லாகத்தான் அறிமுகமானார். சின்னசாமி என்பவர்தான் அச்சொல்லை என்னிடம் சொன்னார். காலண்டரிலிருந்த ஒரு படத்தைக்காட்டி இவர்தான் கலைஞர் என்றார். முகத்துக்கு அடையாளமாகக் கறுப்புக் கண்ணாடி, உடலுக்கு அடையாளமாக வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு இதுதான் முதலில் நான் கண்ட கலைஞர்.

சின்னசாமிக்கு அடுத்து, கலைஞர் பைத்தியம் என்று பெயர் பெற்ற ராமலிங்கத்திற்கு அடுத்து என்னிடம் கலைஞரைக் கொண்டுவந்து சேர்த்தவர் வெற்றிகொண்டான். அவர் திட்டக்குடி, விருத்தாசலம், உளுந்தூர்ப்பேட்டை என்று எங்கு பேசினாலும் சைக்கிளில், லாரியில் சென்றுவிடுவேன். கலைஞரைக் நெருக்கமாக்கியதும் எம்.ஜி.ஆரை எதிரியாக்கியதும் வெற்றிகொண்டான்தான்.
அவருடைய பேச்சை கேசட்டில் கேட்டு தனியாகக் கைதட்டி, சிரித்த இரவு, பகல்கள் உன்னதமானவை.
யாரையும்விட கலைஞரைக் எனக்கு நெருக்கமாக்கியது நாகூர் ஹனிஃபாதான். `கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலும் `உடன்பிறப்பே கழக உடன்பிறப்பே’ என்ற பாடலும் `ஓடிவருகிறான் உதய சூரியன்’ என்ற பாடலும்தான். இவையெல்லாம் எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டேதான் இருக்கத் தூண்டும்.
1980-ல் விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில்தான் நான் கலைஞரைக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்தேன். தூரத்திலிருந்து பார்த்தபோது கறுப்புக் கண்ணாடியும், வெள்ளை வேட்டி சட்டையும்தான் தெரிந்தது. அந்தக் கூட்டத்தில் இந்திரா காந்தியும் இருந்தார்.
1987-ல் கலைஞர் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக இரவு 8 மணிக்கு வருகிறார் என்று திருச்சி பாலக்கரைக்குப் போனேன். கலைஞர் விடியற்காலை 4 மணிக்குத்தான் வந்தார். எழுந்துபோனால் திரும்பிவந்து உட்கார இடம் கிடைக்காது என்று 8 மணியிலிருந்து விடியற்காலை 4 மணிவரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.
1989-ல் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காகக் கலைஞர் விருத்தாசலம் வந்தார். அப்போது என்.டி.ஆரும் வந்திருந்தார். சைக்கிளில் சென்று பார்த்தேன்.
1984-87 காலகட்டத்தில் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் கலைஞர் அறிவித்த அத்தனை போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன்.
1988-ல் சட்ட நகல் எரித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் 19 நாள்கள் இருந்திருக்கிறேன். 87-க்குப் பிறகு கட்சி அறிவித்த சிறை நிரப்பும் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம், தெருமுனைப் பிரசாரம், சாலை மறியல் என்று எந்தப் போராட்டத்திலிருந்தும் விலகி நின்றதில்லை. கட்சி நடத்திய கூட்டங்களுக்கு, மாநாடுகளுக்குச் செல்லாமல் இருந்ததில்லை. போராட்டத்துக்கு, கூட்டத்துக்கு, மாநாட்டுக்குப் போகாமல் இருந்தால் எதையோ இழந்தமாதிரியிருக்கும்.
பஸ் பயணத்தில், ரயில் பயணத்தில் என்று கறுப்பு சிவப்புக் கரைத்துண்டு போட்ட வேட்டியைக் கட்டிய கட்சிக்காரர்களைக் கண்டால் இனம்புரியாத அன்பு ஏற்படும். எழுந்து நின்றுகொண்டு உட்காருவதற்கு இடம் தரத் தோன்றும். கட்சியில் நான் வெறுத்த ஒரே ஒரு ஆள் சண்முகநாதன்தான். தலைவரைப் பார்க்கவிடாமல் தடுப்பது அவர்தான் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஒருமுறை தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நான் போனபோது `முதலமைச்சருக்கு வேற வேலையே இல்லையா’ என்று கேட்டுத் திருப்பி அனுப்பினார்.
அ.ராசாவுக்காக நான் வெளியிட்ட ‘அ.ராசா மீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை’ என்ற நூலைக் கொடுக்கச் சென்றபோதும் ``நான் கொடுத்துக்கிறேன்'’ என்று நூலை வாங்கிக்கொண்டு என்னைத் திருப்பி அனுப்பினார்.
கலைஞரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காகவே ஒருமுறை சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்குச் சீட்டு கேட்டுக் கட்சியில் பணம் கட்டினேன். நேர்காணலின்போது மொத்தமாகக் கூப்பிட்டு ‘தலைமை யாரை அறிவிக்குதோ அவருக்கு வேலை செய்யுங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். அப்போதும் நான் கலைஞரை நேரில், அருகில் சந்திக்கவில்லை.
கலைஞரை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்பதைத் தவிர நான் வேறு எதையும் கட்சியிடமிருந்தும், கலைஞரிடமிருந்தும் எதிர்ப்பார்த்ததில்லை.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரில் தமிழக அரசு எனக்கு விருது வழங்கியபோது கலைஞர் இருந்த மேடையில் எனக்கு உட்காருவதற்கும் பேசுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த மேடையில் `கலைஞர்தான் கடவுள்’ என்று கூறினேன்.
சி.ஐ.டி. காலனியில் இரண்டுமுறையும் கோபாலபுரம் வீட்டில் ஒருமுறையும் கலைஞரைப் பார்க்கக்கூடிய வாய்ப்பையும் எனக்குக் கனிமொழிதான் உருவாக்கித் தந்தார். இந்த வாய்ப்புகள் எல்லாம் எழுத்தாளர் என்பதால் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. தங்களுடைய வாழ்நாளெல்லாம் கட்சிக்காகவும், கலைஞருக்காகவும் வாழ்ந்து, கடைசிவரை கலைஞரின் அருகில் நிற்பதற்கும், ஒரு புகைப்படம் எடுத்துகொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் செத்துப்போன, செத்துப்போக இருக்கிற லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவனாக இருந்திருப்பேன்.
மூன்று முறை கலைஞரின் அருகில் நின்று படம் எடுத்திருக்கிறேன். நான்காவதாகவும், இறுதியாகவும் 08.08.2018 விடியற்காலை 4.03 -க்கு கண்ணாடிப் பேழையில் படுக்க வைக்கப்பட்டிருந்த கலைஞரைப் பார்த்தேன். என்னுடைய அப்பா, அம்மா, தம்பி இறந்தபோதுகூட நான் அழுததில்லை. இப்போது அழுதுகொண்டிருக்கிறேன். காரணம் தெரியாது.
நேரில் பார்க்காமலேயே அவருடைய பேச்சைக் கேட்காமலேயே காலண்டரில் பார்த்த உருவத்தை வைத்தே அவர் எப்படி எனக்குப் பிடித்தமான மனிதராக மாறினார். கலைஞர் என்ற பெயரைச் சொல்லும்போது ஏன் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது.
பஸ்ஸில், ரயிலில், மேடைகளில் யாராவது கருணாநிதி என்று சொல்லும்போது ஏன் கோபம் வருகிறது. கலைஞரைக் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும், கருணாநிதி என்று சொல்லக் கூடாது என்று மனம் ஏன் விரும்புகிறது. தொலைக்காட்சிகளில் `கருணாநிதி’ என்று சொல்லும்போதெல்லாம் கோபம் வரும்.
கட்சி எனக்கு எதையும் செய்ததில்லை. கலைஞரும் எனக்கு எதையும் செய்ததில்லை. நானும் கட்சியிடமும் கலைஞரிடமும் எதையும் எதிர்பாக்கவில்லை. ``என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’' என்று கலைஞர் சொல்வதும் ``டாக்டர் கலைஞர் வாழ்க'’ என்று நான் சொல்வதும்தான் எங்களுக்கான உறவு. இந்த உறவு ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது, தெரியாது.
கலைஞருடைய பேச்சைக் கேட்டு, எழுத்தைப் படித்து, அவர் வசனம் எழுதிய சினிமாவைப் பார்த்து நான் கட்சிக்கு வந்தவன் இல்லை. அவருடைய பெயரை மட்டுமே கேட்டு கட்சிக்கு வந்தவன். இன்றும் கட்சியில் இருப்பவன். கறுப்பு சிவப்பு கரை போட்ட வேட்டியைக் கட்டும்போது விவரிக்க முடியாத உணர்ச்சிமேலிடும். அதை எழுதத் தெரியவில்லை.
கலைஞருடைய எதிரிகள் எல்லாம் எனக்கும் எதிரிகள். கலைஞருடைய நண்பர்கள் எல்லாம் எனக்கும் நண்பர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, வைகோ எனக்கு எதிரிகள் ஆனது இப்படித்தான். தி.மு.க-காரன் என்பதால் மட்டுமே டி.ராஜேந்தர் படங்களைப் பார்த்தேன்.
08.08.2018 அன்று மட்டுமே ஜெயா டி.வியைப் பார்த்தேன். அதுவும் கலைஞர் பற்றிய செய்திகளை நல்லவிதமாகக் காட்டியதால். கலைஞர் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தபோது மட்டுமே அவர் மீது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேமாதிரி நான் சார்ந்திருக்கிற சட்டமன்றத் தொகுதியையும், நாடாளுமன்றத் தொகுதியையும் கூட்டணிக்கு ஒதுக்கும் போதெல்லாம் வருத்தம் ஏற்படும். ஆனாலும், இதுவரை கட்சிக்கும் கூட்டணிக்கும் மட்டுமே வாக்களித்திருக்கிறேன்.
என்னுடைய ஊரில் ``டீ டம்ளரை கழுவி வை'' என்று சொன்னபோது ‘`முடியாது'' என்று சொல்ல வைத்தது, சைக்கிளில் போகக் கூடாது என்று சொன்ன போது ``போயே தீருவேன்'’ என்று சொல்ல வைத்தது, முடி வெட்டி விட முடியாது என்று சொன்னபோது ``ஏன்'’ என்று கேட்க வைத்தது; விளையாட்டில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொன்னபோது ``ஏன்’' என்று கேட்க வைத்தது, சண்டை போட வைத்தது எல்லாமே கலைஞர் என்ற சொல்தான். அந்தச் சொல்தான் எனக்குள் பெரும் ஆற்றலாக இருந்தது. வெள்ளைச் சட்டை போடவும் வெள்ளை வேட்டி கட்டவும் வைத்தது அச்சொல்தான்.
`கருணாநிதி கட்சிக்காரனெல்லாம் இப்படித்தான் இருப்பானுவோ’ என்று யாராவது சொன்னால் ``கருணாநிதின்னு சொல்லாத கலைஞர்னு சொல்லு'’ என்று சண்டைக்குப் போகவைத்ததும் அந்தச் சொல்தான். அந்த ஒற்றைச் சொல்லுக்காகத்தான் கட்சியில் இருக்கிறேன். கரை வேட்டி கட்டுகிறேன்.
நான் சாகும்வரை கலைஞரின் கட்சிக்காரன்தான். நான் மட்டுமல்ல என்னுடைய மகன்களும் கலைஞரின் தொண்டர்கள்தாம். கலைஞரின் கட்சிக்காரர்கள்தாம். எங்களுக்கு இருக்கும் ஒரே பெருமிதம் கலைஞர் கட்சிக்காரர்கள் என்பதுதான். எங்களுக்கு அதுபோதும். கலைஞர் என்ற சொல்லும் கறுப்பு சிவப்பு நிறக் கொடியும்தான் இதுவரை என்னுடைய அடையாளமாக இருந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
1977-லிருந்து இன்றுவரை நான் தி.மு.க-வுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன். தென்னை விளக்குமாற்றுக் குச்சியில் உதய சூரியன் சின்னம் அச்சிட்ட காகிதத்தை ஒட்டி எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக ஓடி ``போடுங்கம்மா ஓட்டு, உதய சூரியன் சின்னத்தைப் பாத்து” என்று கத்தியிருக்கிறேன். இன்று வரை அப்படித்தான் கத்திக்கொண்டிருக்கிறேன். இனியும் அப்படித்தான் கத்துவேன்.
கலையைத் தன்னுடைய கொள்கைகளுக்கு, அரசியல் செயல்பாடுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்திய மொழிப் போராளி. சினிமா வசனம் என்றால் கலைஞர், மேடைப் பேச்சு என்றால் கலைஞர். தமிழ் என்றால் கலைஞர். அரசியல் சாணக்கியத்தனம் என்றால் கலைஞர் என்ற அடையாளங்கள் எப்படித் தமிழகம் முழுவதும் பேசப்படுகிறது, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிக்காரர்கள்கூட கலைஞருக்கான இந்த நான்கு அடையாளங்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிற அதிசயத்தை ஏற்படுத்தியவர் கலைஞர். இன்றும் அவர்தான் தமிழ் சினிமாவின்; மேடைப் பேச்சின், சொல் விளையாட்டின் வெளிச்சம்.
94 வயதுவரை கலைஞர் உயிரோடு இருந்ததற்கு அவருடைய உடல்வாகு காரணமல்ல; அவருடைய எழுத்தும்,பேச்சும்தான் காரணம். தனக்கான உயிராற்றலை அவர் பெற்றது எழுத்திலிருந்தும் பேச்சிலிருந்தும்தாம்.
சென்னையில் ஒருமுறை ஆட்டோக்காரர் நூறு ரூபாய் கேட்டார். நான் அதற்கு ``வாய்ப்பே இல்லை” என்று சொன்னேன். அதற்கு ஆட்டோக்காரர் ``நீ என்ன கலைஞர் மாதிரி பேசுற, நீ என்ன தி.மு.க.வா?” என்று கேட்டார். நல்ல தமிழில் கலைஞர் மட்டும்தான் பேசுவார் என்ற எண்ணம் ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் இருக்கிறது.
ஒரு வார இதழின் பேட்டியில் ``கட்சிக்காரர்கள் எல்லாம் மஞ்சள் நிறத் துண்டு போட வேண்டும் என்று கலைஞர் ஆணையிட்டால் என்ன செய்வீர்கள்?” என்று ஒரு கேள்வி. அதற்கு ``ஆணையை திரும்பப் பெறக்கோரி அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருப்பேன்” என்று சொல்லியிருந்தேன். அதைப் படித்துவிட்டு கலைஞர் சிரித்ததாக அவருடைய உதவியாளர் ராஜமாணிக்கம் என்னிடம் கூறினார்.
மொழியின் வழியாக கலைஞர் எனக்குக் கொடுத்தது ஏராளம். நான் அவருக்குக் கொடுத்தது `கலைஞர் வாழ்க’ என்று கத்தியது மட்டும்தான். பல மைல் தூரம் நடந்து சென்றும், சைக்கிளில், லாரியில் சென்றும் ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று கலைஞர் சொல்வதைக் கேட்ட சந்தோஷத்தில் `டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று கத்தியிருக்கிறேன். இப்போதும் கத்துகிறேன் `டாக்டர் கலைஞர் வாழ்க’.
கலைஞரைப் பற்றி சொல்வதற்கு சாதாரணக் கட்சிக்காரர் ஒவ்வொருவரிடமும் ஒரு கடல் அளவுக்குச் செய்திகள் இருக்கும். என்னிடமும் கடல் அளவுக்குச் செய்திகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே வார்த்தையில் சொன்னால் ``அவர்தான் கலைஞர்.”
கலைஞரைப் பற்றி அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, உச்சரிக்கப்பட்ட, உயிர் போவதுபோலக் கத்திச் சொல்லப்பட்ட சொல் `டாக்டர் கலைஞர் வாழ்க’ என்பதுதான்.
கலைஞருடைய சினிமா வசனம், மேடைப் பேச்சு, கவிதை, எழுத்து 75 ஆண்டுகால வாழ்க்கை, அரசியல் சட்டம், திட்டம், போராட்டம் எல்லாம் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்பது. அவர் உருவாக்க விரும்பியதும் உருவாக்கியதும் `டாக்டர் கலைஞர் வாழ்க’ என்பதைத்தான்.
தமிழ்ச் சமூகமும் அதிகம் உச்சரித்த சொல் ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்பதைத்தான்.
. கலைஞர் என்ற சொல் பெரும் ஆற்றலாக இருக்கும். இப்போது என்னுடைய கண்களிலும், நெஞ்சிலும் இருப்பது 1976-ல் காலண்டரில் நான் பார்த்த கலைஞர்தான்.
காற்றை, ஒலியை உணரத்தான் முடியும். காட்ட முடியாது. அப்படித்தான் கலைஞர் மீதான என்னுடைய அன்பு, காதல். கை நடுங்குகிறது. கண்களில் கண்ணீர் நிறைகிறது. எழுதமுடியவில்லை. என்னுடைய தலைவரின் நினைவுகள் என் நெஞ்சோடு இருக்கட்டும்."
: Vikatan [ 10 AUGUST 2018

கருத்துகள் இல்லை: