திங்கள், 10 ஜூன், 2019

முகிலன் தமிழகத்தில்தான் இருக்கிறார்.. சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் ..

முகிலன் இருக்கிறார்!மின்னம்பலம் :
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் முகிலன், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாக கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அன்று அவர் கூறினார்.
அவ்வளவுதான்… அந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு மதுரை செல்லும் ரயில் ஏறுவதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார் முகிலன். ஆனால் அதன் பின் அவர் எங்கே சென்றார், எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.
முகிலன் மதுரை சென்றார் எனவும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் இரு வேறு யூகங்கள் உலவின. முகிலன் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் இது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

முகிலனின் இருப்பு குறித்தோ, எங்கே இருக்கிறார் என்பது குறித்தோ எந்தத் தகவலும் இல்லாத நிலையில் பல தலைவர்கள் குரல் கொடுத்தனர், போராட்டம் நடத்தினர். மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி டிபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி சிபிசிஐடி போலீஸார் முகிலன் பற்றிய முக்கியமான ஒரு தகவலை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஜூன் 6 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி காவல் துறையின் சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், ”முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல் துறையினருக்கு இதுகுறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வெளியில் கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என கூறியுள்ள காவல்துறையினர் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்” என்று தெரிவித்து வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
முகிலன் வழக்கில் என்ன முன்னேற்றம் என்பது குறித்து சிபிசிஐடி, க்யூ பிரிவு போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“முகிலன் பற்றிய பயம் தேவையில்லை. அவர் உயிரோடுதான் இருக்கிறார். இடையில் அவரைப் பற்றித் தனிப்பட்ட ரீதியிலான சில தகவல்கள் வெளிவந்தன. ஒரு பெண் முகிலன் பற்றிய சில தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவந்தார். அந்தத் தகவல்களை முகிலனும் படித்து வந்திருக்கிறார். முகிலன் இப்போது ஒரு முன்னாள் மாவோயிஸ்ட் நண்பருடன் இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தில் முன்பு இருந்து சில வருடங்களாகவே அதிலிருந்து விலகிய அந்த நண்பரின் பாதுகாப்பில்தான் முகிலன் தற்போது இருக்கிறார் என்ற உறுதியான தகவல் கிடைத்திருக்கிறது. இருவருமே தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். எனவே முகிலனின் உயிர் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என்கிறார்கள்.
முகிலன் காணாமல் போய் 116ஆவது நாளான இன்று, முகிலன் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது!

கருத்துகள் இல்லை: