ஞாயிறு, 9 ஜூன், 2019

கனிமொழி : திமுக எந்தப் பள்ளிக் கூடத்தையும் நடத்தவில்லை

திமுக பள்ளிக்கூடங்கள் நடத்தவில்லை: ஹெச்.ராஜாவுக்கு கனிமொழி பதில்!
மின்னம்பலம் : திமுகவினர் நடத்தும் பள்ளிக் கூடங்கள் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்ட நிலையில், அதுகுறித்து கனிமொழி பதில் கூறியுள்ளார்.
புதிய தேசிய கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியை படிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அதில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்தி பயிற்றுவிக்கும் திமுகவினரின் கல்வி நிறுவனங்களின் பட்டியலையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விமர்சித்திருந்தார்.

சென்னை ராயபுரத்தில் இன்று (ஜூன் 9) கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழியிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், “திமுக எந்தப் பள்ளிக் கூடத்தையும் நடத்தவில்லை. தனியார்கள் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களுக்கு திமுக பதில்சொல்ல முடியாது. திமுக பள்ளிக் கூடம் நடத்தினால் அதில் நிச்சயம் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் அமலில் இருக்கும்” என்று தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து பேசிய கனிமொழி, “அடித்தட்டில் இருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு என்னும் தடை கல்லை மத்திய அரசு உருவாக்கி, அவர்கள் மருத்துவம் படிக்கக் கூடிய வாய்ப்பினை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நிச்சயம் நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: