வெள்ளி, 14 ஜூன், 2019

ஆபரேஷனில் பாலியல் சீண்டல் அப்போலோ ஊழியர் கைது!

மின்னம்பலம் : ஆபரேஷனில் பாலியல் சீண்டல்: ஊழியர் கைது!சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பெண் நோயாளியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சவுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண், கால் மூட்டு அறுவைச்சிகிச்சைக்காக, சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையை நாடினார். கடந்த 6ஆம் தேதியன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அறுவைச்சிகிச்சையின்போது, அப்பெண்ணின் உடலில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

அறுவைச்சிகிச்சையின்போது இடுப்புக்குக் கீழே உடல் உணர்வற்ற நிலையில் இருந்தபோது, அப்பெண்ணின் தலைப்பகுதி அருகே நின்றுகொண்டிருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்திருந்ததால், அப்பெண்ணால் எதுவும் பேச இயலவில்லை. அறுவைச்சிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் கழித்து, அந்த பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் இது பற்றிப் புகார் அளித்தார். ஆனால், நிர்வாகத் தரப்பினர் அவரது புகாரை ஏற்கவில்லை.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, அந்த பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து துரைப்பாக்கம் போலீசாரிடம் புகார் செய்தார். இதன் அடிப்படையில், கடந்த 12ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வக ஊழியர் டில்லிபாபு கைது செய்யப்பட்டார். நடந்த சம்பவம் குறித்துப் பேசிய அந்த பெண், தனது புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது தன்னை மனநோயாளி என்று காவல் துறையிடம் தெரிவித்தது என்றும் புகார் கூறியுள்ளார்.
அந்த பெண் அளித்த மருத்துவ அறிக்கைகள் உண்மை என்று அறிந்த பின்னரே, மருத்துவமனை ஊழியர் டில்லி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: