திங்கள், 10 ஜூன், 2019

75 மருத்துவ மனைகளை மருத்துவ கல்லூரிகளாக்க மத்திய அரசு தீர்மானம் !

மின்னம்பலம் : கல்லூரிகளாக மாறும் மருத்துவமனைகள்!75 மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் மனிதவள சக்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 58 மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதற்கு அரசு ஒப்புதல் வழங்கியது. அதில் 39 மருத்துவமனைகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் எஞ்சிய மருத்துவமனைகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக இத்திட்டத்துக்கு 29 மருத்துவமனைகள் தேர்வாகியுள்ள நிலையில், மேலும் 75 மருத்துவமனைகளைக் கல்லூரிகளாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையையும் கல்லூரியாக மாற்றுவதற்குக் குறைந்தது ரூ.325 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் கூடுதலாக 10,000 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.ஜி. சீட்டுகள் உருவாக்கப்படும் எனவும், மிகவும் பின்தங்கிய கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் மருத்துவச் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: