சனி, 18 மே, 2019

ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்கும்படி பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது உயர் நீதிமன்றம் உத்தரவு

மின்னம்பலம் : பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது: உத்தரவு!ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோர்களைப் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகம், பாட புத்தகங்களுக்கு 5000 ரூபாயும், சீருடைகள், காலணிகள், புத்தக பை, மதிய உணவு எடுத்துச் செல்வதற்கான பைகளுக்கு 5000 ரூபாயும் செலுத்தக்கூறி சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து மாணவர்களின் பெற்றோர்களான ஹேமலதா உள்ளிட்ட இருவர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலை கொண்ட புத்தகங்களுக்குப் பதிலாக, 5,000 ரூபாய் விலையுடைய ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் புத்தகங்களைப் பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால், நடுத்தர குடும்பத்து பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, மாணவர்களுக்குத் தேவையான பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம். ஆனால், பிற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை: