திங்கள், 13 மே, 2019

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்

அடுத்த நிதியமைச்சருக்காக வருந்துகிறேன்: ப.சிதம்பரம்மின்னம்பலம் : நாட்டின் பொருளாதாரம் மிகவும் தவறான வடிவில் இருப்பதாகவும், அடுத்த நிதியமைச்சரை எண்ணி வருந்துவதாகவும் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளையும் இம்முறை காங்கிரஸ் கட்சிதான் கைப்பற்றும் என்று எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, “தேர்தலுக்கு முன்பு நாங்கள் அமைத்த கூட்டணி உறுதியானது. ஆட்சியமைப்பதற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தற்போது பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திருணமூல் காங்கிரஸ், தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 2 கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளது. அவர்கள் பாஜக அல்லாத ஆட்சியமைய வேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள், அதனால் எங்களுடன் வருவார்கள் என்று நம்புகிறேன். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்” என்றார்.
தற்போதைய இந்தியப் பொருளாதார நிலை குறித்து சிதம்பரம் கூறுகையில், “எல்லா குறியீடுகளும் கீழ்நோக்கி சென்றுகொண்டுள்ளன. அடுத்து வரும் நிதியமைச்சருக்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான வடிவில் உள்ளது. உற்பத்திக் குறியீடுகள், முதலீடுகள் எதிர்மறையாக சென்றுகொண்டிருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது” என்றார்.
அண்மைக்காலமாக எழுந்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தரவு வெளியீடுகளின் நம்பகத்தன்மை மீதான அதிருப்தி குறித்து கருத்து தெரிவித்த சிதம்பரம், “வேலைவாய்ப்புத் தரவுகள், வளர்ச்சித் தரவுகள், தூய்மை இந்தியா திட்ட தரவுகள், உஜ்வாலா சமையல் எரிவாயு விநியோகத்திட்ட தரவுகள் எல்லாமே நம்பிக்கையற்ற வகையில் உள்ளன” என்றார்.

கருத்துகள் இல்லை: