புதன், 15 மே, 2019

தமிழகத்தில் பெப்சி, கோக் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு இல்லை

தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனையில்லை!மின்னம்பலம் : வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகச் செயல்பட்ட பீட்டா அமைப்பைக் கண்டித்து அந்நிய நாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சியை தமிழகத்தில் விற்பனை செய்யக் கூடாது என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து பானங்களைப் புறக்கணித்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை அறிவித்தது. இதனால் அந்நிறுவனங்களின் வர்த்தகம் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்தது.

பின்னர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பெப்சி, கோக் தமிழகத்தில் மீண்டும் விற்பனையாகத் தொடங்கியது. இந்த நிலையில், தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு பானங்கள் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரத்தில் நேற்று (மே 14) செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன், “வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்படும்.
பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த விதிமுறை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகிறது. வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: