சனி, 18 மே, 2019

ஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை!

ஜேஎன்யு: தமிழக மாணவர் தற்கொலை!
Rishi Joshua Thomas
மின்னம்பலம் : டெல்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படித்துவந்த வேலூர் மாணவர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் ரிஷி தாமஸ். இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள மஹி மாண்ட்வி ஆண்கள் விடுதியில் இவர் தங்கியிருந்தார். நேற்று (மே 17) ஆங்கிலப் பேராசிரியர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் ரிஷி தாமஸ். அதில், தான் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த பேராசிரியர் இது பற்றித் தகவல் தெரிவித்ததன் பேரில், மதியம் 12 மணியளவில் ரிஷி தாமஸை பல்கலைக்கழக வளாகத்தில் தேடினர் போலீசார்.

அப்போது, ஜேஎன்யு வளாகத்திலுள்ள நூலகத்தின் அறையொன்று பூட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தூக்கிலிட்ட நிலையில் ரிஷி தாமஸின் சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் டெல்லி தென்மேற்கு துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா. மாணவரின் சடலம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் பேராசிரியருக்கு அனுப்பப்பட்ட தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாகவும், இதுவரை இந்த மரணத்தில் சந்தேகப்படும்படியான விஷயங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தேவேந்தர் ஆர்யா கூறியுள்ளார். மாணவர் ரிஷி தாமஸ் மரணம் குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை: