சனி, 20 ஏப்ரல், 2019

மன்மோகன் சிங் :NYAY நியாய திட்டத்திற்கு புதிய வரி விதிக்கவேண்டிய அவசியம் இல்லை .. பொருளாதாரத்திற்கு உயிர்ப்பூட்டும்:

தினகரன் :டெல்லி: நியாய் திட்டத்தை செயல்படுத்தும் போது நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் ஏதும் விதிக்கப்படாது என காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்தே நியாய் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக நியாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர முடியும் என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இத்திட்டம் குறித்து பொருளாதார அறிஞரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியாய் திட்டத்தை அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. ஒன்று, வறுமையை துடைத்தெறிவது; மற்றொன்று, நமது நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.72,000 ஊதிய ஆதரவு கிடைக்கும். இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
பிரிட்டிஷிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஏறத்தாழ 70 விழுக்காடு இந்தியர்கள் ஏழைகளாக இருந்தனர். பின்னர் பொறுப்பேற்ற அரசுகளின் வலுவான கொள்கைகளால் கடந்த எழுபது ஆண்டுகளில் வறுமை விகிதம் 70 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வறுமையையும் ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரமிது. இந்தியக் குடும்பங்களுக்கு அடிப்படை கவுரவத்தையும், மரியாதையையும் இத்திட்டம் உறுதிசெய்யும். ஏழை மக்களுக்கு சுதந்திரத்தை அளிக்கக்கூடிய திட்டமாக இது உள்ளது. இன்று முடங்கியுள்ள நமது பொருளாதார இயந்திரத்தை மீண்டும் தொடங்கவும் இத்திட்டம் நமக்கு உதவும்.
ஏழை மக்களின் கையில் பணம் இருப்பதால் பொருளாதாரத்தில் தேவை உயரும். அதனால் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிப்பதோடு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகும். இதை ‘கெயின்சின் விளைவு’ என பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுவர். தனியார் முதலீடுகளும், தொழிற்துறை உற்பத்தியும் குறைவாக இருக்கும் நேரத்தில் நியாய் திட்டம் நமது பொருளாதாரத்திற்கு உயிர்ப்பூட்டி புதிய தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இத்திட்டத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% முதல் 1.5% வரை செலவாகும். இந்த செலவை ஏற்றுக்கொள்ளும் திறன் நமது 3 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்திற்கு உண்டு.
இத்திட்டத்திற்காக நடுத்தர மக்கள் மீது கூடுதலாக வரிகளை விதிக்க வேண்டிய தேவையிருக்காது. வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே நியாய் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நியாய் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி சமூக நீதிக்கும், புத்திசாலித்தனமான பொருளாதாரத்திற்கும் உதாரணமாக அமையும் என நான் உறுதியாக நம்புகிறேன். உலகின் வறுமையில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்ப்பதற்கான திறன் நியாய் திட்டத்திற்கு உண்டு என்பது எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: