திங்கள், 15 ஏப்ரல், 2019

ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜகவினருக்கு அளிக்கிறார் மோடி .. வீடியோ


மாலைமலர் : ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பாஜக பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.

அமராவதி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவருக்கு பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்தன. அந்த ஹெலிகாப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து பெரிய வடிவிலான கருப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள். 2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர்.
பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது. அதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.


இந்நிலையில், ஆந்திரா முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வந்து பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார் என குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, தான் வரும் ஹெலிகாப்டரில் பணத்தை கொண்டு வருகிறார்.

 தனக்கு அளிக்கப்படும் உயர் பாதுகாப்பை பயன்படுத்தி, அவற்றை பா.ஜ.க. பிரமுகர்களுக்கு அளிக்கிறார். அதன்மூலம் இந்த தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு உள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை: