செவ்வாய், 16 ஏப்ரல், 2019

வாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி

savukkuonline.com : பாஜக ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித்திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது. 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது.
இன்று 2019ல் நாட்டு நிலவரம் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆத்திரமும் அதிருப்தியும் 1967 நிலைமையைப் போலவே இருக்கின்றன. ஆயினும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. இவ்வாண்டுத் தேர்தலில் தெள்ளத் தெளிவான மாற்று என வாக்காளர்கள் முன்னிலையில் எதுவும் நிறுத்தப்படவில்லை.

ஜனநாயத்தின் ஒரு நல்ல அம்சம், இதில் முறையானதொரு ஏற்பாடாக அதிருப்தியைப் பதிவு செய்ய முடியும். அரசியல் கட்சி எதுவானாலும், அதன் சித்தாந்தம் எதுவானாலும் சமூகத்திலும் அரசியலிலும் மேல்நிலைகளில் இருப்போருக்கு எதிரான பொதுவான கோபத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். ஆனால், நம்பகமான மாற்றுகள் இல்லாத கோபம் தற்கொலைக்குச் சமமானதே.
தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை விடவும் யார் யாரை நிராகரிக்கப் போகிறார்கள் என்பதே கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே ஒரு தவறான அணுகுமுறைதான் என்றாலும், மிக மோசமான அம்சமாக உருவாகியிருப்பது எதுவெனில், ஆளுங்கட்சியான பாஜக இந்தச் சூழலை மிக இழிவான முறையில் கையாண்டுகொண்டிருப்பதுதான்.
ஒரு ஜனநாயக அமைப்பில், அரசியல் கட்சிகள், குறிப்பாக ஆளுங்கட்சி, சாத்தியமான அளவுக்கு நிலைமையைச் சீர்ப்படுத்தவே முயலும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று இந்தியாவில் நடப்பதென்ன? நெருக்கடியை மேலும் மேலும் வளர்க்கிற உள்நோக்கமுள்ள முயற்சிகளில் பாஜக ஈடுபடுகிறது. அரசியல் நடைமுறைகளின் மீது வாக்காளர்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை பாஜக களவாடுகிறது.
பாஜக – ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது. அதற்காகவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகும்கூட, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் மீது திட்டமிட்ட முறையில் ஏற்படும் கோபத்தைப் பயன்படுத்திக்கொள்ளவே இந்த ரெய்டுகள். அதற்காக, அதிகாரபூர்வமான சோதனை அலுவலகங்கள் தரம் தாழ்த்தப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது ஆளுங்கட்சியின் அப்பட்டமான அதிகார அத்துமீறல்தான் என்பது வாக்காளர்களுக்குப் புரிகிறது என்றாலும்கூட, நம்பகத்தன்மையை இழந்துவிட்ட தலைவர்கள் இலக்கு வைக்கப்படுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையக்கூடும். இத்தகைய ரெய்டுகளில் இறுதியாக எந்தப் பலனும் கிடைக்காது என்பது வாக்காளர்களுக்குத் தெரிகிறது என்றாலும்கூட, அந்தத் தலைவர்கள் அடையாளபூர்வமாக அவமானப்படுத்தப்படுவதில் அவர்கள் திருப்தியடையக்கூடும்.
அறம் குலைந்த இந்த ஒட்டுமொத்தமான சூழலின் மனநிலையோடுதான் வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள். வாக்காளர் சமூகம் குழம்பிப்போயிருக்கிறது, முன்னெப்போதையும் விட உற்சாகமின்றி இருக்கிறது. இந்த நிலவரத்தைத்தான், பெயர்பெற்ற ஊடகங்கள் “அலையில்லா” தேர்தல் என்று சித்தரிக்கின்றன.
ஊடகங்களை பாஜக தனது பிடியில் வைத்திருப்பதும்கூட, மக்களிடையே அதிகரித்துவரும் அதிருப்தியிலிருந்து ஒரு தெளிவான சித்திரம் உருவாவதைத் தடுக்க உதவியுள்ளது.
நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில், அவருக்கு இன்னொரு வாய்ப்புத் தருமாறு வாக்காளர்களைக் கேட்கிறது பாஜக. எப்படி முன்பு காங்கிரஸ் கட்சிக்குப் பல வாய்ப்புகளை வாக்காளர்கள் கொடுத்தார்களோ அதே போல இப்போது மோடிக்கும் கொடுக்கக் கேட்பதன் மூலம் வாக்காளர்களைக் கூண்டில் நிறுத்துகிறது. பாஜகவின் இந்த வேண்டுகோள் எடுபடுவது போலத் தெரிகிறது. ஏனெனில் வாக்காளர்கள் தேர்வு செய்வதற்கான திட்டவட்டமான மாற்று எதுவும் காணவில்லையே.
ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருவாயை உறுதிப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை அறிவித்ததன் மூலம் இந்த நிலைமையை மாற்ற முயன்றிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இருப்பினும் வாக்காளர்கள் கடந்த எழுபதாண்டு அனுபவத்திலிருந்தே இந்த வாக்குறுதியை எடைபோடுவார்கள். மோசமாகச் செயல்பட்டுள்ள, ஆனால் இன்னும் முழுமையாக சோதிக்கப்படாத பாஜக, தற்போது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முயல்கிற காங்கிரஸ் இரண்டில் ஒன்றை வாக்காளர்கள் தேர்வு செய்தாக வேண்டும். கடந்த காலத்தில் காங்கிரஸ் முழுமையாகத் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை என்ற முடிவுக்கு வாக்காளர்கள் போகலாம்.
நெரிக்கப்படும் கூட்டாட்சி
அறம் அவமதிக்கப்படுகிற கதை மாநிலங்களிலும் நடைபெறுகிறது. பாஜக ஒரு சூதாட்டமாகவே மாநிலங்களில் தனது வியூகத்தை அமைக்கிறது. பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சியைச் செயல்பட விடுவதில்லை என்பதே அந்தச் சூதாட்டம். இதனால் அந்த மாநிலங்களின் மக்கள் அவதிகளுக்கு உள்ளாவது பற்றிக் கவலையில்லை.
2015இல் தமிழகத்திலும், 2018இல் கேரளத்திலும் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்புகளின்போது மோடி அரசு எப்படிச் செயல்பட்டது என்பதிலும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு மேற்கொண்ட பயனுள்ள ஒவ்வொரு முயற்சியையும் எப்படிச் சீர்குலைத்தது என்பதிலும் தெளிவாக வெளிப்படுவது பாஜகவின் இந்த வியூகம்தான்.
இந்த விவகாரங்களில் பாஜக தலையீடு இருக்கிறது என்பது வாக்காளர்களுக்குப் புரிந்தாலும்கூட, அவர்கள் மாநில நிலைமைகளுக்கு அந்தந்த மாநிலக் கட்சிகளின் அரசுகளைப் பொறுப்பாக்குவார்களா அல்லது பாஜகவைக் குற்றம் சாட்டுவார்களா?
ஒரு வாக்காளர் உண்மை நிலைமைகளை மதிப்பிடுவதற்கு உதவிடும் வகையில் ஒரு நம்பகமான மாற்று உருவாகவில்லை என்ற ஒட்டுமொத்த நிலவரத்தைத்தான் இப்போதும் பாஜக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்கிறது.
முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க உறுதியளிக்கிற ஒரு கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதை விட, பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே வாக்களிக்கக்கூடும்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கிற இந்துக்களின் மனநிலையும் இதுதான். ஜம்மு பகுதியில் உள்ள இந்துக்களுக்கு வெளிப்படையாகவே பாஜக மீது அதிருப்தி இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம் அரசியலுக்காக, தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்ற கோபம் இருக்கிறது. ஆனாலும் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அதே போலத்தான் காஷ்மீர் பகுதியில் உள்ள பண்டிட்டுகளின் நிலைமையும். பாஜக தங்களைக் கிளப்பிவிடுவதும், தங்களுடைய நலன்கள் பற்றிப் பேசுவதும் தங்கள் மீதுள்ள உண்மையான அக்கறையால் அல்ல, வாக்காளர்களை அணி பிரிப்பதற்காகவே என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர்கள் பாஜக – ஆர்எஸ்எஸ் காட்டுகிற வழியில்தான் செல்வார்கள்.
இப்படிப்பட்ட நெறியற்ற நிர்ப்பந்தங்கள்தான் தேர்தல் கணக்குகளைப் போட வைக்கின்றன. இதில் ஒரு சோகம் என்னவென்றால், எந்தப் பயனுமில்லாத அந்த ‘நோட்டா’. வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றபோதிலும் உண்மையில் நோட்டா ஒரு மாற்று அல்ல.
திட்டமிட்ட நெறிமீறல்கள்
1980களில் மாநிலக் கட்சிகளுக்கு ஒரு பிடிமானம் இருந்தது. அந்தப் பிடிமானம் இப்போது வலுவற்றதாகியுள்ளது. ஏனென்றால் மத்திய அரசுக்கு எதிரான சக்தியாக அவர்களை இப்போது வாக்காளர்கள் பார்க்கவில்லை. அன்றைய சூழலில் மத்திய ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.
இன்றைய வாக்காளர்கள், சாத்தியமான ஆதாயங்களைப் பெறுவதென்றால் மத்திய ஆளுங்கட்சியோடு இணங்கிப்போவதே நல்லது என்று நினைக்கிறவர்களாக இருக்கிறார்கள். நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை பாஜக கேலிக்குரியதாக்குகிறது, ஆனால் அது ஜனநாயக மாண்புகளை அறியாத வாக்காளர்கள் இவ்வாறு உடனடி ஆதாயத்திற்காக முடிவு செய்கிற போக்கை வலுப்படுத்தவே செய்திருக்கிறது.
திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்படும் இந்த மாண்பின்மையைத் தக்கவைக்கவே பாஜக முயல்கிறது. அதற்காக, மிகவும் நம்பகமான, மிகவும் உயிர்ப்பான அமைப்புகளோடு இது கலந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. குடும்பம், தேசம், மதம், ஆயுதப் படைகள் ஆகியவையே அந்த அமைப்புகள்.
ஆகவே, பாஜக இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக எத்தனை இடங்கள் தனது அணிக்கு வந்தாலும், ஒரு மெலிதான பெரும்பான்மையோடு தனிப் பெரும் கட்சியாக வந்துவிட வேண்டும் என்றே முயல்கிறது. மோடி, அமித் ஷா தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாடுகளையே பாஜக சார்ந்திருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.
அப்போது அக்கட்சி காங்கிரஸ் அணியில் சேர்ந்துள்ள சிறிய கட்சிகளுக்கும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைத் தவிர வேறு எதிலும் அக்கறையற்ற பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் விலைபேச தனது வற்றாத பண பலத்தைப் பயன்படுத்த முயலக்கூடும்.
மறுபடியும் செல்வாக்கோடு வருவதற்கான வாய்ப்புகள் உள்ள அரசியல்வாதிகள் மீது பல்வேறு வழக்குகள் பாயக்கூடும் என்ற அச்சுறுத்தல் தொடர்கிறது. அந்த வழியையும் பாஜக பயன்படுத்த முயலும்.
இதுவும் சேர்ந்து அந்தத் தனி மனிதர்களை சுயமாகத் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்க விடாமல், யாரோடு கூட்டுச் சேர்ந்தால் நல்லது என்று முடிவு செய்ய வைக்கிறது.
பாஜகவின் இந்த வியூகங்கள் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், எந்தவொரு உறுதியான ஜனநாயக நாட்டிலும்,  நடப்பு நிலைமைகளுக்குத் தகுந்தவாறு முடிவெடுக்கிற இந்தப் புதிய நெறியற்ற போக்கு தற்கொலைப் பாதையேயாகும். இப்படி, தொலைநோக்கின்றி நடப்பு நிலமைக்கேற்ப முடிவு செய்கிற அணுகுமுறை, ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கு நேர் மாறாக, எந்த வழியைக் கையாண்டாவது குறைந்த பட்ச ஆதாயங்களை அள்ளிவிட வேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளிக்கிறது.
வாக்காளர்கள் ஆக்கபூர்வமான வலிமையைப் பெறுவதற்கு மாறாக, அவர்கள் வலிமையற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்பதே இந்த அணுகுமுறையின் விளைவாக இருக்கும். கடந்த காலத் தேர்தல்களின் விழாச் சூழலிலிருந்து விலகி, ஒரு தற்கொலை மனநிலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் வாக்காளர்கள்.
அஜய் குடாவர்த்தி
(கட்டுரையாளர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் ஆய்வுகள் மையத்தில் ஒரு துணைப் பேராசிரியர். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள நூல்: ‘மோடிக்குப் பின் இந்தியா கவர்ச்சியும் வலதுசாரியும்’)
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/919384/opinion-the-bjps-cynical-manipulation-of-the-electorate-is-an-ominous-sign-for-democracy-in-india

கருத்துகள் இல்லை: