திங்கள், 11 மார்ச், 2019

கல்லூரி பெண்கள், இல்லத்தரசிகள், ஆசிரியை பள்ளியில் தாளாளரைக் கூட விட்டுவைக்கவில்லை அந்த 20 பேர் கொண்ட கொடுற கும்பல்

Muralidharan Pb : நவம்பர் 1996ல் பொன் நாவரசு என்ற அண்ணாமலை
பல்கலைக்கழக மாணவன் தனது மூத்த மாணவனான ஜான் டேவிட் என்ற மாணவனால் ராக்கிங் செய்யப்பட்டான். அதை ஒப்புக்கொள்ளாத நாவரசு, மறுநாள், பல பாகங்களாக வெட்டப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் வீசி எறியப்பட்டான். ஜான் டேவிட் சரணடைந்தான். அதன் பிறகு உருவானதே ராக்கிங் சட்டம் 1997.
1998 கால கட்டத்தில் சென்னையில் சரிகா ஷா என்ற ஒரு கல்லூரி மாணவி, கல்லூரி விட்டு வெளியே வந்த அப்பெண்ணின் மீது அன்றைய சில முட்டாள் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரால் கையில் வைத்திருந்த தண்ணீர் பொட்டலத்தை தூக்கி வீசி எரிய, பயந்து போய் அந்த மாணவி, கீழே விழுந்து, பின் மண்டையில் பலத்த காயம் பட்டு, இறந்து போகிறார்.
உள்துறையை தனது கையில் வைத்திருந்த முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். பின்னர் உருவானது Eve Teasing சட்டம் கொண்டு வரப்பட்டது.
எந்த ஒரு செயலுக்குமே உடனடியாக அரசு தகுந்தாற்போல் சட்டங்களை இயற்றினால், மேற்சொன்னது போல குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. குற்றங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மையே.
ஜெயலலிதா தான் சிறந்த நிர்வாகி என்று கருதும் அனைவருக்கும், இது நடந்தது திமுக ஆட்சியில், அப்போது உரிய நடவடிக்கை எடுத்து குற்றங்களை குறைத்து முதல்வரின் அந்த அவசர சட்டம். அன்று முதல்வர் கலைஞர்.
நிற்க.

தற்போது, பொள்ளாச்சியில் இணையத்தை பயன்படுத்தி கல்லூரி பெண்கள், இல்லத்தரசிகள், ஆசிரியை ஒரு பள்ளியில் தாளாளரைக் கூட விட்டுவைக்கவில்லை அந்த 20 பேர் கொண்ட கொடுற கும்பல். அவர்களை பலவந்தப்படுத்தி நாசமாக்கியது மட்டுமல்ல, அவர்களை பயமுறுத்தி சுமார் 2 கோடி வரை காசு சம்பாதித்து அந்த நாசகார கும்பல். போதாத குறைக்கு 6 பேர் தற்கொலை. இந்த கொடூரங்கள் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெறுகிறது.
நல்ல அரசாங்கம் என்றால் இவர்களை தண்டிக்க வேண்டும். நல்ல காவல் துறை என்றால் இவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கக் கூடாது.
1999ல் தருமபுரி பஸ் எரிப்பின் போது 3 மாணவிகளை கொன்ற அந்த மூன்று கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்யும் அரசிடம் இருந்து நாம் பெரியதாக எதிர்பார்க்க முடியாது. இத்தனைக்கும், எந்த நடிகர் தனது திரைப்படங்களில் தவறை தட்டிக் கேட்டாரோ, அவரது நூற்றாண்டு விழாவில் குற்றம் செய்தவர்களை பொது மன்னிப்பு கொடுத்து வெளியில் கொண்டு வந்தது நமது 'அற்புதமான' அரசு.
இதில் ஒரு சாதி கட்சி, அதில் பாதிக்கப்பட்டவன் எங்க சாதிக்காரன் அவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூப்பாடு போட்டது விந்தையிலும் விந்தை. அந்த அளவிற்கு சாதி வெறி பிடித்தவர்கள் நம்மூரில் இருக்கின்றார்கள்.
2 வருடங்களுக்கு முன்பு,அரியலூரில் ஒரு ஆதி திராவிட பெண்ணை, கெடுத்து, வயற்றில் கருவோடு இருந்த பெண்ணை, அவளது காதலனே கொலைகார கும்பல் துணையோடு, அவளை வெட்டி ஒரு கிணற்றில் போட்டான் . என்ன நியாயம் கிடைத்தது அந்தக் தினக்கூலி வாங்கும் குடும்பத்திற்கு ?
அவளைக் கெடுத்து, கொடூரமாக கொன்றவன் ஒரு இந்து முன்னணியின் நிர்வாகி.
அவள் இந்து தானே? எத்தனை இந்துக்கள் அவர்களது தண்டனைக்கு போராடினார்கள் ?
பொள்ளாச்சி சம்பவத்தில், சம்மந்தப்பட்டவர்கள் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களும், அவரது தந்தை கட்சியில் பெரிய பதவியில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.
பிரியாணி கடை, பியூட்டி பார்லர், தேங்காய் கடைகளில் திமுக காரன் பிரச்சனை செய்தான் அதை மறக்கவில்லை, மறுக்கமில்லை. குறைந்த பட்சம் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்ததா என்பதை நாம் நோக்கவேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை, நிரூபணம் ஆனால் தகுந்த தண்டனை வழங்கவேண்டியது நீதித்துறை.
ஆனால் பொள்ளாச்சி சம்பவங்களில் தானாகவே முன் வந்து அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை உண்டு பண்ணுகிறது. அதே சமயத்தில் ஆத்திரத்தையும் உண்டாக்குகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த சாதியாக இருப்பினும், எந்த மதமாக இருப்பினும், எந்த கட்சி, இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை சேதப்படுத்தினார்களோ அவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும் என்பதே நமது எண்ணம்.
அது சரி, அன்றைய மாநில அரசின் தலைமைப் பதவியில் யார் இருக்கின்றார் என்பதைப் பொறுத்து தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயங்கள் கிட்டும்.
வெகுமக்கள் காணுகின்ற காட்சி ஊடகங்களே, எல்லா இடங்களுக்கும் கண்ணகி வரமாட்டாள், நக்கீரரும் இருக்கமாட்டார்கள். நீங்கள் தான் இதைப் பேசிட வேண்டும். மௌனமாக இருப்பது, குற்றத்திற்கு ஒத்து ஊதுவது போன்றதாகும்.

கருத்துகள் இல்லை: