வெள்ளி, 15 மார்ச், 2019

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: தீபா அறிவிப்பு!மின்னம்பலம் : வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கப் போவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரு அணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி, தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா, தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்துவந்தார். நேற்று 40 தொகுதிகளுக்கும் தீபா பேரவை சார்பாக போட்டியிட விருப்ப மனு பெறப்படும் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் நிலைப்பாடு குறித்து விளக்கிய தீபா, “வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளோம். இதுவரையில் ஏன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். கூட்டணி தொடர்பாக நாங்கள் அதிமுக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த காரணத்தால் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது, கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று தமிழக முழுவதுமுள்ள தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது மெகா கூட்டணியை இறுதி செய்து, இன்னும் சில நாட்களில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட இருக்கிறார்கள். எங்களுக்கான கூட்டணிக் கதவுகள் திறந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. எங்களுக்கு யாரிடமிருந்தாவது அழைப்பு வந்தால் அதனை நாங்கள் கவனத்தில் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: