திங்கள், 11 மார்ச், 2019

(சுரேகா கொலை ..பொள்ளாச்சி ஜெயராமன் மகன்) குற்றவாளிகள் மீது நடவடிக்கை...கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பேட்டி

 பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தொடர்பே இல்லை என இன்று பேட்டி கொடுத்த எஸ். பி. பாண்டியராஜன் யாருன்னு தெரியுதா?? திருப்பூர் டாஸ்மாக் போராட்டத்தில் ஒரு பெண்ணை காதோடு அறைந்தவர் தான் அவர்.. இப்போ பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நியாயம் பெற்று தருவாராம்..

தினகரன் : பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல்
கொடூரம்  தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக சதீஷ், சபரீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் விசாரணை நடைபெற்றது. தேடப்பட்டு வரும் திருநாவுக்கரசு ஏற்கனவே ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். அதில், பல அரசியல் பிரமுகர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசரை கைது செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு, தனது 2-வது வீடியோவை வெளியிட்டார். அதில் பாலியல் விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் போலீசில் சரணடைய உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து குற்றவாளி திருநாவுக்கரசு மீண்டும் நண்பர்களுடன் மதுபான விடுதியில் நடமாடுவது போன்ற வீடியோ வாட்ஸ்அப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசரை தனிப்படை போலீசார் மகினாம்பட்டு என்ற இடத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கில், போலீசில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக அதிமுக கட்சியே சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவ்விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக இன்று குறிப்பிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை, அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கு குறித்து கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளது, தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

கருத்துகள் இல்லை: