புதன், 13 மார்ச், 2019

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் .. நாகர்கோவிலில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம்

தினத்தந்தி :சென்னை நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பிரமாண்ட கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக சென்னை வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல்காந்தி கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார். பின்னர், அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு செல்லும் அவர், விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து, கார் மூலம் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்துக்கு அவர் வருகிறார். மாலை 4 மணிக்கு அங்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.


ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின்

இந்த பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். ராகுல்காந்தி சிறப்புரை ஆற்றுகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிப்பேசுகிறார்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தொண்டர்களும் பொதுக்கூட்டத்துக்கு வருவார்கள் என்பதால், தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: