வியாழன், 16 ஆகஸ்ட், 2018

இலங்கை ராணுவத்தினர் வெடி பொருட்களை கண்டறிய கீரிப்பிள்ளையை வளர்க்கின்றனர்

BBC : வெடி பொருட்களைக் கண்டறிய அதிநவீன கருவிகளும  பயிற்றுவிக்கப்பட்ட
மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், வெடி பொருட்களைக் கண்டறிய கீரிப் பிள்ளையைப் பயன்படுத்தும் திட்டமொன்றை இலங்கை இராணுவம் முன்னெடுக்கிறது.>இந்தத் தகவல் கிடைத்த பின்னர், இதுகுறித்த விரிவான விவரங்களைச் சேகரிக்க பி.பி.சி தமிழ் நேரடியாக சென்றிருந்தது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான மத்தேகொட என்ற இராணுவ முகாமில் இந்த கீரிப்பிள்ளைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இராணுவத்தின் பொறியியல் பிரிவு இந்த செயல்திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகிறது.
வெடிபொருட்களைக் கண்டறிய இலங்கை இராணுவத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்களே இதுவரை பயன்படுத்தப்பட்டன. தற்போது விலங்கினத்தில் அதிக மோப்ப சக்தி கொண்ட கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என இலங்கை இராணுவம் தெரிவித்தது.

இந்த புதிய முயற்சிக்குத் தலைமை வகிக்கும் மேஜர் சுபுன் ஹேரத்துடன் பேசி

''வெடிபொருட்களைக் கண்டறிய நாய்களை இதுவரைப் பயன்படுத்தி வந்தோம். வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் இந்த நாய்களுக்கு அதிக செலவாகிறது. இதனைத்தவிர அதிநவீன கருவிகள் பயன்படுகின்றன. இந்தக் கருவிகளின் விலைகளும் அதிகமாக உள்ளன. எனவே இதற்கு மாற்று வழியைக் கண்டறியும் தேவை இருந்தது. நாய்களுக்கு ஈடாக கீரிப்பிள்ளையைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தோம். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளோம். பொதுவாக நாய்களை விடவும் கீரிக்கு மோப்ப சக்தி அதிமாக இருக்கிறது. இதனால் வெடிபொருட்களை தேடிப்பிடிப்பதில் கீரி சிறப்பாக செயல்படுகிறது.'' என்று விவரித்தார்.>நாய்கள் இயல்பாகவே தரையில் அல்லது தனது தலைக்கு கீழ் உள்ள வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. எனினும், கீரிப்பிள்ளை தரைக்கு கீழும், தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்திலும் உள்ள வெடிபொருட்களைக் கண்டறிவதில் நாயைவிட சிறப்பாக செயல்படுகிறது.
கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் இந்த முயற்சி, இதற்கு முன்னர் கம்போடியாவில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக தேசிய விலங்கியல் காப்பகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும், இந்த முயற்சி சரியாக முன்னெடுக்கப்பட்டதாகவோ, வெற்றி பெற்றதாகவோ எவ்விதத் தகவலும் இல்லையெனக் கூறினார். எனவே, வெடிபொருட்களைக் கண்டறிய கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் செயல்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.
வெடிபொருட்களைக் கண்டறிய நாய்களையும், கீரிகளையும் பயன்படுத்துவதில் உள்ள பொதுத் தன்மைகள் குறித்து இராணுவத்திடம் கேட்டோம்.
''வெடிபொருட்களைக் கண்டறியும் விலங்கினத்தில் நாய்களே சிறப்பாக இதுவரை செயல்பட்டன. எனினும், கீரிப் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க ஆரம்பித்ததில் இருந்து நாய்களைவிட அவை சிறப்பாக செயல்படுவதை அவதானிக்க முடிகிறது.
வெடிபொருட்களைக் கண்டறிய வெளிநாட்டு நாய்களே இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன. குளிர் நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் அந்த நாய்கள் இலங்கையில் உள்ள தட்பவெப்ப நிலையினால் விரைவில் களைப்படைந்து விடுகின்றன. ஆனால், கீரிகள், நாய்களை விட நீண்ட நேரம் உழைப்பதை அவதானித்தோம் என்று வெடிபொருட்களைக் கண்டறிய கீரிகளைப் பயன்படுத்தும் திட்டத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தெரிவித்தார்.இலங்கையில் தங்க, சிவப்பு, சாம்பல் என மூன்று நிறங்களில் மூன்று வகை கீரிப்பிள்ளைகள் இருக்கின்றன. இவற்றில் சாம்பல் நிற கீரிகளுக்கே அதிக மோப்ப சக்தி இருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக ஈர நில வலயத்தில் சிவப்பு நிற கீரிப் பிள்ளையும், உலர் வலயத்தில் சாம்பல் நிற கீரிப்பிள்ளையும் இலங்கையில் இருக்கின்றன. சிவப்பு, சாம்பல் நிறத்திலான இரண்டு கீரிகளும் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தனியான பெயர்கள், இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தில் தற்போது ஒன்பது கீரிப்பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏழு கீரிப் பிள்ளைகளை இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்திற்காக இரண்டு கீரிப் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
கீரிகள் குறித்து தற்போது ஆராய்ச்சி நடத்திவரும் இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் சுபுன் ஹேரத் மேலும் விளக்கமளித்தார்.
''கீரிகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குட்டிகளைப் பிரசவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குட்டிகளைப் பிரசவித்து, அவற்றை நீண்ட நாட்களுக்கு தனது பாதுகாப்பான பொந்துகளுக்குள் காப்பாற்றி வைத்துக் கொள்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பின்னரே அவற்றை தனித்துவமாக இயங்க அனுமதிக்கின்றன.
இதனால் குட்டிகளைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. எமது இரண்டாவது திட்டத்தின்படி, தற்போதுள்ள ஏழு கீரிகளையும் இனச்சேர்க்கை செய்து, அவற்றின் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறோம். இவ்வாறு பெறப்பட்ட ஒரு குட்டி மட்டுமே இராணுவத்தில் தற்போது இருக்கிறது. ஏனையவை காட்டில் இருந்து பிடித்து வரப்பட்டவை.''''வெடிபொருட்களைக் கண்டறிய முன்னர், ஆறு மாதங்களுக்கு கீரிப்பிள்ளையை பயிற்றுவிப்பாளர் தன்னுடன் பழக்கப்படுத்த வேண்டும். ஆறு மாதங்களின் பின்னரே பயிற்றுவிப்பாளருடன் கீரிப்பிள்ளை இணங்கிய செயற்பட ஆரம்பிக்கிறது. அடுத்த ஆறு மாத காலத்திற்கு அதற்கு கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், வெடிபொருட்களைக் கண்டறியவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழுமையாக ஒரு கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது.
காட்டில் இருந்து நேரடியாக பிடித்துவரப்பட்ட கீரிப்பிள்ளை என்பதால் ஒரு வருடம் செல்கிறது. எனினும், குட்டியில் இருந்து பயிற்றுவிப்பதாயின் இதனை 80 வீதம் இலகுவாக செய்ய முடியும் என்பதே இலங்கை இராணுவத்தின் அனுபவமாக இருக்கிறது. எதிர்காலத்தில், போதைப்பொருட்களைக் கண்டறியவும் இவற்றைப் பயிற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்று கீரிகளைப் பயிற்றுவிக்கும் குழுவிற்கு தலைமை தாங்கும் அதிகாரி கூறினார்.
கீரிப்பிள்ளை வெடிபொருட்களைக் கண்டறியவது எவ்வாறு என்பதை பரீட்சார்த்தமாக நடத்திக் காட்டினார்கள். இராணுவ வீரர் ஒருவர், வெடிபொருள் ஒன்றை வடிவமைக்கப்பட்ட மரக்குற்றி ஒன்றின் மேற்பகுதியில் இருந்த மண்ணைக் கிளறி, அதற்குள் மறைத்து வைத்தார். சில நிமிடங்களின் பின்னர் பயிற்றுவிப்பாளருடன் வந்த கீரி, தனது மோப்ப சக்தியால் வெடிபொருள் மறைத்து வைத்திருந்த இடத்தில் வந்து நின்றது. இதற்கு முன்னர், வெடிபொருளைத் தோண்டி எடுக்கும் வகையில்தான், இந்தக் கீரிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. எனினும், வெடிபொருட்களை எடுக்கும்போது வெடிபொருளின் பாதிப்பு கீரிகளைத் தாக்குவதால் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இடத்தை மட்டும் கண்டறிவதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. வெடிபொருளைக் கண்டறிந்த பின்னர், அந்த இடத்தில் அமர்ந்துகொள்கிறது. பயிற்றுவிப்பாளர் இதனைப் புரிந்துகொண்டு, வெடிபொருளை மீட்டெடுக்கிறார்.
வெடிபொருட்களைக் கண்டறிய கீரி போன்ற காட்டு விலங்கினம் ஒன்றைப் பயன்படுத்துவது, அவற்றைத் துன்புறுத்தும் வகையில் இல்லையா என்பது குறித்து இந்த செயல்திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி கெப்டன் நயநாத் ஜயதிலக்கவிடம் கேட்டோம்.
''விலங்கியல் ஆர்வலர்களும் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தனர். விலங்கினத்தைத் துன்பப்படுத்தி, வதைப்படுத்தி அவற்றை நாம் பயிற்றுவிப்பதில்லை. இந்த விலங்கினத்தைப் பயிற்றுவிக்கும் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும், இலங்கை தேசிய விலங்கியல் பாதுகாப்பு அதிகாரியொருவர் வழங்கி வருகிறார். அதற்கமையவே இந்த கீரிப்பிள்ளைகளை நாம் கையாண்டு வருகிறோம். இந்த விலங்கினத்தை எவ்வகையிலும், துன்புறுத்தவோ, வதைக்கவோ இல்லை என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும்'' என்று அவர் பதிலளித்தார்.பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பின் பரம எதிரியாகக் கருதப்படும், கீரிப்பிள்ளை தற்போது இலங்கையின் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வெடிபொருட்களைக் கண்டறிவதற்கு உலகில் முதன்முறையாக கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.
கீரிகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் நடத்தியதாக உலகில் எங்கும் சான்றுகள் கிடைக்கவில்லை என்றும் இந்தப் பணியை தாம், ஒரு ஆய்வாக செய்து வருவதாகவும் இலங்கை இராணுவம் குறிப்பிடுகிறது.
கண்ணி வெடிகளை அகற்றப் பயன்படுமா?
கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்தக் கீரிகளைப் பயன்படுத்த முடியுமா என்று இராணுவ அதிகாரியிடம் கேட்டோம்.
''பொதுவாக நாய்களை கண்ணிவெடிகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தி வந்தோம். இது மிகவும் சிரமமான பணி. தற்போது வடக்கு கிழக்கில் 92 சதவீதம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய கண்ணிவெடிகளையும் அகற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உலகில் வேறு நாடுகளில் இன்னமும் கண்ணிவெடிப் பிரச்சினை இருப்பதால், அதற்காக இவற்றைப் பயிற்றுவிக்க முடியும் என நம்புகிறோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஐ.நா. சபை உள்ளிட்ட தரப்பில் கோரிக்கைகள் வரும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வரும் போது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் கீரிகளை எங்களால் பயிற்றுவிக்க முடியும்.
எமது இந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளதால், எதிர்காலத்தில் போதைப் பொருட்களைக் கண்டறிவதற்கும் இவற்றுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதனை பரீட்சார்த்தமாக செய்துபார்த்தோம். போதைப்பொருட்களைக் கண்டறிவதிலும் கீரிகள் சிறப்பாக செயற்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் போதைப் பொருட்களைக் கண்டறிவதற்கும் கீரிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே தற்போது கீரிகளை இனப்பெருக்கம் செய்வித்து, சிறுவயது முதல் அவற்றைப் பயிற்றுவிக்கும் இரண்டாம் கட்டத்தில் ஆர்வமாக இருக்கிறோம்.'' என்றார்

கருத்துகள் இல்லை: